இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே எம்.கரிசல்குளத்தையடுத்துள்ள மணிவலை எ கிராமப் பகுதியில் இருந்து சட்ட விரோதமாக திருட்டு மணல் அள்ளப்படுவதாக கடலாடி வட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு வட்டாட்சியர் முத்துலட்சுமி அப்பகுதியில் ரோந்து சென்றார். அப்போது மணல் அள்ளி வந்த டிராக்டரை நிறுத்தினார். ஆனால் சற்றும் எதிர்பாராத நேரத்தில் வட்டாட்சியரின் அரசு வாகனத்தின் மீது மணல் ஏற்றி வந்த டிராக்டர் மோதிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. இதில் அரசு வாகனத்தின் முன் பகுதி சேதமானது.
இது தொடர்பாக வட்டாட்சியர் முத்துலட்சுமி புகாரின் பேரில் மணல் அள்ளிய கும்பல் விட்டுச்சென்ற இரு சக்கர வாகனம், மண்வெட்டிகளை சாயல்குடி போலீசார் கைப்பற்றினர். தப்பிச்சென்ற மணல் திருட்டு கும்பலை சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜோக்கிம் ஜெரி, எஸ்.ஐ., கள் சாரதா, விஜயபாஸ்கர், தலைமைக் காவலர்கள் தங்கச்சாமி, முருகநாதன், செந்தூர் பாண்டியன், முருகன் தேடி வருகின்றனர். மணல் கடத்தலை தடுக்கும் நடவடிக்கையில் துரிதமாக செயல்படும் வட்டாட்சியர் முத்துலட்சுமிக்கு அவர் பணி பொறுப்பேற்ற நாளில் இருந்து தொடர்ந்து அச்சுறுத்தல்கள் தொடர்வதாக வருவாய் துறை ஊழியர்களிடம் வேதனை தெரிவித்து வருகிறார்.
You must be logged in to post a comment.