உத்தரபிரதேச மாநிலம் ஹப்பூர் நகரை அடுத்த சாம்ரி கிராமப் பகுதியில் ஷமீம் என்ற முதியவர், தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது சிறிய வீட்டிற்கு பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்காக, 128 கோடியே 45 லட்சத்து 95 ஆயிரத்து 444 ரூபாய் கட்டணமாக செலுத்தக் கோரி ரசீது அனுப்பப்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து மின்வாரிய அலுவலகத்திற்கு புகார் தெரிவிக்க சென்ற அவரிடம், கட்டணத்தை செலுத்த வேண்டும் எனக் கூறி அதிகாரிகளும் அதிர்ச்சியளித்துள்ளனர். மேலும் கட்டணத்தை செலுத்தாததால் தனது வீட்டிற்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அந்த முதியவர், கட்டணத்தை செலுத்தும் வரை மின் இணைப்பு வழங்கப்படமாட்டாது என அதிகாரிகள் கூறியதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். வழக்கமாக 700 முதல் 800 ரூபாய் வரை மட்டுமே மின் கட்டணமாக வரும் எனவும், ஆனால் தற்போது மொத்த ஹப்பூர் நகருக்கான மின்கட்டணத்தையும் தன்னை செலுத்துமாறு கூறி ரசீது அனுப்பப்பட்டிருப்பதாகவும் அந்த முதியவர் தெரிவித்துள்ளார். இதனிடையே தொழில்நுட்பக் கோளாறால் தான் இவ்வித பிரச்சனை ஏற்பட்டதாகவும், தவறு சரிசெய்யப்படும் எனவும் அம்மாநில மின்வாரியம் தெரிவித்துள்ளது.
9
You must be logged in to post a comment.