இலங்கை மன்னார் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் கடந்த 1990 ஆம் ஆண்டு அகதியாக தனுஷ்கோடி வந்தார். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் வசிக்கிறார். குடும்ப பிரச்னையால் முருகேசன், அவரது மனைவி சரோஜினியை பிரிந்து வாழ்கிறார். இவர்களது மகள் விவிக் ஷா ஸ்ரீ, 12. பாட்டி முத்துமாரி முத்து , தாயார் சரோஜினி உடன் வசித்து வரும் விவிக் ஷா ஸ்ரீ , மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென உடல் நலம் பாதித்த இவருக்கு முகாமிலுள்ள அரசு மருத்துவமனைவியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல் நலம் மேலும் பாதிக்கப்பட்டதால் மண்டபத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ரத்த பரிசோதனை செய்ய டாக்டர் இளையராஜா அறிவுறுத்தினார். இதன்படி ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஆய்வகத்தில் விவிக் ஷா ஸ்ரீக்கு , ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் விவிக் ஷா ஸ்ரீக்கு ரத்த அணுக்கள் மிகக் குறைவாக உள்ளதென தெரிந்தது. உயர் சிகிச்சை பெற பண வசதி இல்லாததால், விவிக் ஷா ஸ்ரீயின் உறவினர் வாசுகி, முன்னாள் அமைச்சரும் ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் எம். மணிகண்டனிடம் உதவி கோரினார். மதுரை அரசு மருத்துவமனைக்கு விவிக் ஷா ஸ்ரீயை அழைத்துச் செல்லுமாறும், தான் பரிந்துரைப்பதாகவும் டாக்டர் மணிகண்டன் எம்எல்ஏ உறுதியளித்தார். மதுரை அரசு மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்ட மணிகண்டன், விவிக் ஷா ஸ்ரீக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டுகோள் விடுத்தார். மதுரை அரசு மருத்துவமனையில் விவிக் ஷா ஸ்ரீக்கு தற்போது உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உரிய நேரத்தில் உதவிய முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சரோஜினி, அவரது உறவினர் வாசுகி நன்றி தெரிவித்தனர்.
8
You must be logged in to post a comment.