இராமநாதபுரம் டி – பிளாக் பஸ் நிறுத்தத்தில் பள்ளி, கல்லூரி மாணவியர் டவுன் பஸ்சிற்கு இன்று (03/08/2019) காலை காத்திருந்தனர். அந்த வழியாகச் சென்ற அரசு டவுன் பஸ்களில் கூட்டம் நிரம்பியதால் டி- பிளாக் நிறுத்தத்தை பஸ்கள் புறக்கணித்துச் சென்றுள்ளன. இங்கு பஸ் நிறுத்தாதால் மாணவியர் பாரதிநகர் நிறுத்தம் சென்று காத்திருந்தனர். ஆனால் பாரதி நகர் நிறுத்தத்தையும் அரசு டவுன் பஸ்கள் புறக்கணித்ததால் குறித்த நேரத்தில் கல்வி நிலையங்கள் செல்லாத நிலையால் மாணவிகள் மிகவும் கலக்கம் அடைந்தனர்.
மேலும் அப்பகுதிக்கு வந்த 19 ஏ பஸ் கண்டக்டர் பஸ்சை விட்டு இறங்கி வந்து பஸ்சில் ஏற விடாமல் மாணவிகள் உள்ளிட்ட பெண் பயணிகளை விரட்டி அடித்துள்ளனர். இதனால் செய்வதறியாது மாணவியர் திகைத்தனர். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் கூறுகையில், அரசு கல்லூரிகளில் பயிலும் நாங்கள் அரசு மகளிர், தனியார் விடுதிகளில் தங்கியுள்ளோம். நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி செல்ல டி – பிளாக் நிறுத்தத்தில் நின்று டவுன் பஸ்சில் பயணிக்க இலவச பாஸ் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
தினமும் காலை 7:45 மணி முதல் காத்திருந்து இங்கு நிற்கும் அரசு டவுன் பஸ்களில் பயணித்து சிரமங்களுக்கு இடையே கல்லூரி சென்று வருகிறோம். ஆனால், இன்று காலை டி – பிளாக் நிறுத்தத்தில் டவுன் பஸ்கள் (எண்: 5 ஏ, 5 சி, 19 ஏ) நிற்காததால், அரை கி.மீ., தொலைவில் உள்ள பாரதி நகர் நிறுத்தத்திற்கும் வந்தோம். இங்கும் பஸ்கள் நிறுத்தப்பட வில்லை. அரை நேரம் கழித்து வந்த 19 ஏ டவுன் பஸ்சில் ஏற முயன்ற மாணவிகள் உள்ளிட்ட பெண் பயணிகளை நடத்துநர் பஸ்சில் இருந்து இறங்கி வந்து விரட்டி அடித்தார். இலவச பாஸ் வைத்திருக்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களை அரசு பஸ் நடத்துநர்கள் மிகவும் அவமதிப்பு செய்கின்றனர். குறித்த நேரத்தில் கல்லூரி செல்ல இயலாததால் தினமும் 2 மணி நேர வகுப்புகளில் பங்கேற்க முடியாத நிலை தொடர்கிறது. தாமதமாக செல்வதால் கல்லூரி பிரதான வாயில் மூடப்பட்டு வெளியில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக ஆக., 5 ஆம் தேதி மாவட்ட ஆட்சிரியரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம் என்றனர்.
You must be logged in to post a comment.