காஞ்சிபுரம் அடுத்த தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். அந்த நேரத்தில் காரிலிருந்து 69 லட்சம் ரூபாய் பணத்தை மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
சென்னை மாதவரம் பகுதியில் இரும்பு வியாபாரம் செய்து வருபவர் செட்டியார். இவர் தனது ஊழியர்களை வேலூர் மாவட்டத்திற்கு அனுப்பி, அங்குள்ள இரும்பு கடைகளில் இருந்து வரக்கூடிய நிலுவைத் தொகையை வசூலித்து வரும்படி கூறியுள்ளார். அதன்படி வேலூர் மாவட்டத்தில் வசூல் செய்த 69 லட்சம் ரூபாய் உடன் காரில் சென்னை நோக்கி ஊழியர்கள் வந்து கொண்டிருந்தபோது, காஞ்சிபுரம் அடுத்த தேசிய நெடுஞ்சாலையில் காரின் டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்நிலையில் காரில் பயணம் செய்த முரளி என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த இருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விஜயகுமார் மற்றும் ஓட்டுநர் சந்தானம் படுகாயமடைந்த இருவருக்கு சிகிச்சை அளித்து அவர்களை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் காரில் சிதறிக்கிடந்த பணக்கட்டுகள் 69 லட்சம் ரூபாயை மீட்டு காஞ்சிபுரம் தாலுகா போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மையை காவல்துறையினரும் மருத்துவ நிர்வாகத்தினரும், பொதுமக்களும் பாராட்டினர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.