இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டு வரும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ்களை முறையாக பொருத்தாமல், பொதுமக்களின் விருப்பத்திற்கு மாறாக தனியார் நிறுவன செட்டாப் பாக்ஸ்களை பொருத்திடும் கேபிள் டிவி ஆப்பரேட்டர்களின் உரிமத்தினை ரத்து செய்வதோடு, காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது, இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ்கள் பொருத்தப்பட்டு வருகிறது. இதற்காக பொருத்துதல் கட்டணமாக ரூ.200-யை சந்தாதாரர்களிடம் பெற்றுக் கொண்டு உள்ளூர் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மூலம் இலவசமாக சந்தாதாரர்களுக்கு செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை இராமநாதபுரம் மாவட்டத்தில் 1,01,372 அரசு கேபிள் டிவி சந்தாதாரர்களில் 50,330 சந்தாதாரர்களுக்கு செட்டாப் பாக்ஸ்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மாவட்டத்தில் ஒரு சில கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் அரசு செட்டாப் பாக்ஸ்சை வழங்காமல் தனியார் செட்டாப் பாக்ஸை பொதுமக்களிடம் அதிக விலைக்கு கட்டாயப்படுத்தி விநியோகிக்கின்றனர் என மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் வந்துள்ளன. இவ்வாறு அரசு வழங்கும் செட்டாப் பாக்ஸை பொருத்தாமல் பொதுமக்கள் விருப்பத்திற்கு மாறாக தனியார் செட்டாப் பாக்ஸ்களை பொருத்தும் ஆப்பரேட்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அரசு சிக்னலை பிற தனியார் நிறுவன கேபிள் ஆப்பரேட்டர்கள் துண்டிப்பதும், தடைசெய்வதும் சட்டப்படி குற்றமாகும்.
அதேபோல தனியார் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் அரசு செட்டாப் பாக்ஸை விநியோகம் செய்யாமலும், அரசுக்கு செலுத்த வேண்டிய மாத சந்தா மற்றும் நிலுவை தொகைகளை செலுத்தாமல், பாக்கி நிலுவை வைத்துக் கொண்டும், சரியான இணைப்பு விபரங்களை அரசுக்கு தெரிவிக்காமல் அரசு கேபிள் டிவிக்கு எதிராகää அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வருகின்றனர்.
எனவே உள்ளூர் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் அவர்களது வாடிக்கையாளர்களுக்கு அரசு செட்டாப் பாக்ஸை உடன் பொருத்திட வேண்டும். அவ்வாறு அரசு செட்டாப் பாக்ஸ்களை முறையாக விநியோகம் செய்யாத பட்சத்தில், புதிய ஆப்பரேட்டர்களை பதிவு செய்து உரிமம் வழங்கி அரசு செட்டாப் பாக்ஸ்களை விநியோகம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் பொதுமக்களின் விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தி தனியார் நிறுவன செட்டாப் பாக்ஸ்களை வழங்கும் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, அவர்களது கேபிள் டிவி ஆப்பரேட்டர் உரிமம் முன் அறிவிப்பின்றி ரத்து செய்து காவல்துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.