மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 58கிராம பாசன கால்வாயில் வைகை அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில் டி.புதூர் என்ற இடத்தில் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. உடனே வைகை அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை சீரமைக்கும் பணியினை மேற்கொண்டனர். கால்வாய் உடைப்பு ஏற்பட்டு சீரமைக்கும் பணிகளை அமைச்சர் ஆர்பி உதயக்குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் பல்லவி பல்தேவ், வினய், கோட்டாட்சியர், வட்டாட்சியர், பொதுப்பணித்தறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
மேலும் உடைப்பு சரிசெய்யப்பட்டு மீண்டும் வைகை அணையிலிருந்து வினாடிக்கு 60அடி கனநீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் 58 கால்வாயில் உள்ள மேடுபள்ளங்கள், செடிகொடிகள், முட்கள் போன்றவைகளை அகற்றும் பணியில் உசிலம்பட்டியைச் சேர்ந்த சௌந்திரபாண்டியன் தலைமையிலான 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தானாகவே முன்வந்து களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது மட்டுமல்லாமல் 58 கால்வாய் செல்லும் இடங்களில் உள்ள மடைகளில் உள்ள ஷட்டர்களுக்கு கிரீஸ் தடவி தண்ணீர் வேகமாக செல்வதற்கு வழிவகை செய்துவருகின்றனர். இந்தியாவின் தூண்களாக கருதப்படும் இளைஞர்களின் இந்த செயலை கண்டு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.