தமிழகத்தில் உள்ள இந்து கோயில் சொத்துக்களை, ஆக்கிரமித்தவர்களுக்கே பட்டா வழங்குவதா? என இந்து முன்னணி சார்பில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் ஆட்சேபனை மனு அளித்துள்ளனர். மாவட்ட செயலாளர்கள் ஏ.எம்.செந்தில்,ஜெகன், நகர செயலாளர் துரை ஆகியோர் அளித்துள்ள அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது, திருவண்ணாமலை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான பழமைவாய்ந்த ஆலயங்கள் உள்ளன. ஆலயங்களின் நிலங்கள், ஆலய பராமரிப்பு, பூஜை, ஆகியவற்றிற்காக, முன்னோர்களால், ஆலயத்தில் அருள்பாலிக்கும் சுவாமி பெயரில் கொடுக்கப்பட்டது. இவை அத்தனையும், கோயில்களுக்கு சொந்தமானது. அரசுக்கு சொந்தமானது அல்ல.
சமீபத்தில் தமிழக அரசு, ஆலய நிலையங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா செய்தும், தனியாருக்கு விற்பதற்கும் அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மேலும், தற்போது நீதிமன்றங்களில் நடைபெற்றுவரும், ஒரு வழக்கிற்காக, தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூல பத்திரத்தில், மேற்கண்டவற்றை கூறியுள்ளது. அரசு, ஆலய நிலங்களை, ஆக்கிரமித்தவர்களுக்கும், விற்பதற்கும் இலவசமாக வழங்குவதற்காக எடுத்துள்ள அரசின் செயல், பக்தர்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது. எனவே, அரசு, இந்த ஆணையை, உடனடியாக ரத்து செய்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வாக்குமூலத்தை திரும்பப்பெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
You must be logged in to post a comment.