திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஆதனுர் கிராமத்தில் கடந்த 30 -ஆண்டுகளுக்கும் மேலாக ஆதனுர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகின்றது. இந்த சங்கத்தில் ஆதனுர், கீழையூர், விருபாட்சிபுரம், உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஆதனூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் தினமும் இரண்டு வேளையும் சுமார் 400 உறுப்பினர்களிடமிருந்து சுமார் 3000 லிட்டர் வரையில் உற்பத்தி செய்த பாலை கொள்முதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 1மாத காலமாக உற்பதி செய்த பாலை முழுமையாக கொள்முதல் செய்யாமல் 70 சதவீத பாலை மட்டும் கொள்முதல் செய்துகொண்டு மீதம் உள்ள பாலை திருப்பி கொடுத்து விடுவதால் உற்பத்தியாளர்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த பால்உற்பத்தியாளர்கள் சங்கசெயலாளர் மற்றும் தலைவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முற்றுகையில் ஈடுபட்டனர்.
இருப்பினும் நூறு சதவீத பாலை கொள்முதல் செய்ய சங்க நிர்வாகம் மறுத்துவிட்டது. மேலும் பாலை முதலில் கொண்டு வருபவர்களிடம் மட்டுமே கொள்முதல் செய்வதால் விடியற்காலை முதலே பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் முன்பு ஓருவரையொருவர் முண்டியடித்து கொண்டு பாலை வழங்கி வருகின்றனர்.இதனால் ஆத்திரமடைந்த பால் உற்பத்தியாளர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் ஓன்றிணைந்து ஆதனுர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகம் எதிரில் நூறு சதவீதம் பாலினை கொள்முதல் செய்ய வலியுறுத்தி திடீரென பாலை தரையில் கீழே கொட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
இது சம்மந்தமாக கூட்டுறவு பால் சங்க அதிகாரிகளிடம் கேட்டதற்கு பாலை கொள்முதல் செய்ய போதியளவில் கேண்கள் இல்லை என்றும் உயரதிகாரிகள் பாலை அதிகளவில் கொள்முதல் செய்ய வேண்டாம் என்றும் தேக்கநிலை உள்ளதாக வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்னர் என்று கூறினார்கள்.
You must be logged in to post a comment.