திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கிவரும் அஞ்சல் பிரிப்பகம், தொடர்ந்து திருவண்ணாமலையிலேயே செயல்பட வேண்டும், இந்த அலுவலகம் மூடும் உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என, அஞ்சல் ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில், ஒரே ஒரு அஞ்சல் பிரிப்பகம் மட்டுமே திருவண்ணாமலை நகரில் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு அலுவலகமான இது, 1982 ஆம் ஆண்டு முதல் தியாகி அண்ணாமலை நகரில் உள்ள, தலைமை அஞ்சலக கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
தற்போது திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும், இந்த அஞ்சல் பிரிப்பகத்தை மூடிவிட, தபால்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அலுவலகத்தை விழுப்புரம் மாவட்ட தலைநகரோடு இணைத்திட அஞ்சல் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அலுவலகத்தை மூடிவிட்டால், பொதுமக்கள் இந்த சேவைகளை பெற விழுப்புரம் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகும்.எனவே, அஞ்சல் பிரிப்பகம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதேகோரிக்கையை வலியுறுத்தியும், இந்த அஞ்சல் பிரிப்பகம் மூடப்படுவதை கண்டித்தும், திருவண்ணாமலையில் வெள்ளியன்று, அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி கோட்ட தலைவர்கள் பி.குணசேகரன், கே.அன்பழகன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில செயலாளர்கள் கே.சங்கரன், பி.பரந்தாமன், கோட்ட செயலாளர்கள் டி.குணசேகரன், டி.பி.ரமேஷ், சிபிஎம் மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார், ஆயுள் காப்பீட்டு கழக ஊழியர் சங்க நிர்வாகி முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர்.
You must be logged in to post a comment.