Home செய்திகள் சுங்கக் கட்டண வசூலை நிறுத்துக!உயிர்காக்கும் கருவிகளுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு வழங்குக! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்!

சுங்கக் கட்டண வசூலை நிறுத்துக!உயிர்காக்கும் கருவிகளுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு வழங்குக! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்!

by Askar

சுங்கக் கட்டண வசூலை நிறுத்துக! உயிர்காக்கும் கருவிகளுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு வழங்குக! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்! மே மாதம் 3 ஆம் தேதிவரை பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்படாத நிலையில் அத்தியாவசிய பண்டங்களை ஏற்றிவரும் சரக்கு வண்டிகள் மட்டுமே இப்போது இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இன்று முதல் சுங்கக் கட்டணத்தை உயர்த்தி-வசூலிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கே வழிவகுக்கும். எனவே, சுங்கக் கட்டண உயர்வை ரத்து செய்வதுடன், மே 3 ஆம் தேதி வரையில் இந்தியா முழுவதும் சுங்கச்சாவடி வசூலை நிறுத்தி வைக்க வேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்துகிறோம்.

கொரோனா தொற்று என்பது ‘தேசிய பேரிடராக’ அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும்; கை கழுவுவதற்குக் கிருமிநாசினியைப் (சானிடைசர்) பயன்படுத்த வேண்டும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஏழை எளிய மக்களும்கூட இப்போது முகக்கவசம் அணியவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதுபோலவே கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை அதிக எண்ணிக்கையில் வாங்க வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களுக்கு ‘ பிபிஇ கிட்’ டுகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அளிக்கப்பட வேண்டியுள்ளது. இச்சூழலில், இத்தகைய அத்தியாவசியமான உயிர்காக்கும் கருவிகள் மீது மத்திய அரசு பல்வேறு சதவீதங்களில் ஜிஎஸ்டி வரியை விதித்திருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. அதாவது, மாஸ்க்குகளுக்கு 5% சானிடைசர்களுக்கு 18% வெண்டிலேட்டர்களுக்கு 12% பிபிஇ கருவிகளுக்கு 12% என ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.

பேரிடர் காலத்தில் உயிர்காக்கும் இக்கருவிகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி வரியை உடனடியாக ரத்துசெய்வதுடன், குறைந்த விலையில் இவற்றைப் பெறுவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். உயிர்காக்கும் கருவிகளிலும் வரி வசூலிப்பது என்பது எந்தவொரு மக்கள் நல அரசும் செய்யக்கூடிய காரியம் அல்ல என்பதையும் பிரதமர் மோடி அவர்களுக்கு சுட்டிக்காட்டுகிறோம்.

கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரும் ஆளாகி வருவதாகவும் சிலர் உயிரிழந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. மருத்துவர்களுக்கும், செவிலியர் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்கும் போதுமான பாதுகாப்பு கருவிகள் வழங்கப்படாததையே இது காட்டுகிறது. எனவே, தமிழகமெங்கும் கொரோனா சிகிச்சையில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோருக்கு போதுமான அளவில் பாதுகாப்புக் கவச உடைகள் (பிபிஇ கிட்) உள்ளிட்ட மருத்துவக் கருவிகளை வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

தங்களது பாதுகாப்புக்கு உறுதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மருத்துவர் சங்கம் ஏப்ரல் 23-ம் தேதியை கறுப்பு தினமாக அறிவித்துள்ளது. அவர்களது அறப்போராட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆதரவு தெரிவிப்பதுடன், அவர்களின் கோரிக்கைகள் வெற்றிபெற எமது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்: தொல்.திருமாவளவன், நிறுவனர்-தலைவர், விசிக.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!