இரட்டை குளம் கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..
தென்காசி மாவட்டம் இரட்டை குளம் உபரிநீர் கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற கோரி சுரண்டையில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநிலத் துணைத் தலைவர் கண்ணையா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான இரட்டை குளம் உபரி நீர் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றினால் சுரண்டையின் கீழ் பகுதியில் இருந்து ஊத்துமலை வரை உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பயன்பெறுவார்கள். தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள படி வருகிற நிதியாண்டிலேயே நிதி ஒதுக்கி இரட்டை குளம் உபரிநீர் கால்வாய் திட்டத்தை தொடங்க வேண்டும் எனவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் காட்டு பன்றிகள் விவசாய விளை பொருட்களை நாசப்படுத்தி வருகிறது. எனவே காட்டு பன்றிகளை வனவிலங்கு பாதுகாப்பு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் கோஷமிட்டனர்.
மேலும் இரட்டைகுளம் உபரிநீர் கால்வாய் திட்டத்திற்க்கு தமிழக அரசு நிதி ஒதுக்காத பட்சத்தில் தொடர் போராட்டம் மற்றும் தேர்தல் புறக்கணிப்பு போன்ற நடவடிக்கையில் விவசாயிகள் சங்கம் ஈடுபடும் என தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மதிமுக மாவட்ட செயலாளர் ராம உதயசூரியன், மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சுப்பையா, ஒன்றிய செயலாளர் மருதசாமி பாண்டியன், ஊராட்சி தலைவர் ஸ்நாபக அந்தோணி என்ற பதிவர், குத்தாலிங்கம், அந்தோணி சவரிமுத்து, மைக்கேல் ராஜ், செல்வராஜ், அருணாசலம், திருமலை ஆண்டி உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
மேலும் இது குறித்து தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் கூறுகையில், கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் இரட்டை குளம் கால்வாய் திட்டம் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் அதிமுக அரசு எடுக்கவில்லை. ஆனால் தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் நிதி நெருக்கடியிலும் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள படி மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட 80 சதவீத கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளார். அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் திட்டப் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தொகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்த வேண்டிய பத்து முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக இரட்டை குளம் கால்வாய் திட்டம் என கோரிக்கை வைத்துள்ளேன்.
மேலும் இரட்டை குளம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற தனியாகவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுப் பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் கோரிக்கை மனு வழங்கினேன். அதைத் தொடர்ந்து திட்டத்தை நிறைவேற்ற ரூபாய் 64 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. வருகிற நிதியாண்டில் தமிழக முதல்வர் கண்டிப்பாக இரட்டை குளம் உபரி நீர் கால்வாய் திட்டத்திற்கு நிதி ஒதுக்குவார் என நம்பிக்கை தெரிவித்தார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.