தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் ஸ்மார்ட்போன் வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டு சான்று; மாவட்ட கலெக்டர் வழங்கினார்..
தென்காசி மாவட்டத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், ஸ்மார்ட்போன், வெள்ளி பதக்கம், பாராட்டு சான்று ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் பயனாளிகளுக்கு வழங்கினார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 05.02.2024 திங்கள் கிழமை மாவட்ட ஆட்சித்தலைவர் எ.கே. கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார்.
தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் மூலம் செவித்திறன் அற்றோருக்கு ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.2,30,000 மதிப்பில் 10 பயனாளிகளுக்கு தக்க செயல் திறனுடன் கூடிய திறன்பேசிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் வழங்கினார். 2021 ஆம் ஆண்டு படைவீரர் கொடிநாள் வசூலில் ரூ 3,00,000க்கு மேல் வசூல் புரிந்த புளியங்குடி நகராட்சி ஆணையர் இரா. சுமா, (ரூ 4,52,000) தென்காசி மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) மா. கஸ்தூரி (ரூ 3,05,000) ஆகியோருக்கு தலைமைச் செயலாளரின் பாராட்டு சான்றிதழ் மற்றும் 30 கிராம் எடையுள்ள வெள்ளிப் பதக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் வழங்கினார்.
மேலும் இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 562 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் ஆண்டணி ஃபெர்னான்டோ, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மு.முருகானந்தம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெய பிரகாஷ், செய்திமக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) இரா. இராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.