கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 1996-1999 கல்வி ஆண்டில் பயின்ற மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் கலை, அறிவியல் பாடப்பிரிவுகளில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் பயின்ற மாணவிகளின் நெகிழ்ச்சி சந்திப்பு நடந்தது. இந்நிகழ்வில் கல்லூரி தாளாளர் முனைவர் ரஹ்மத் நிஷா அப்துர் ரஹ்மான் தலைமை வகித்தார்.
கல்லூரி முதல்வர் சுமையா பேசியதாவது, “திருமணம் என்பது பெண்களுக்கு முற்றுப்புள்ளி அல்ல. திருமணத்தில் வாழ்க்கை துவங்குகிறது. ஒவ்வொரு நிகழ்வும் வெற்றி படிக்கட்டுகளாக வாழ்வில் முன்னேற்றத்திற்கு உதவுகின்றன. கல்லூரி படித்து வெளியேறும் ஒவ்வொரு மாணவியும் பயின்ற கல்லூரிக்கு சேவை செய்து கொண்டே இருக்க வேண்டும். கல்விக்கான பல்வேறு கதவுகளை இந்திய அரசு திறந்துள்ளது. மனிதவள மேம்பாட்டு துறை இணைய தளம் மூலம் எண்ணிலடங்கா இலவச கல்வி வசதிகள் உள்ளன. உலகத்தில் இந்தியாவில் தான் பெண் விமானிகள் அதிகம் உள்ளனர். சுறுசுறுப்பாக செயல்படுவோர் தான் என்றும் இளமையுடன் இருக்க முடியும். கல்லூரி படிப்பு முடிந்ததும் திறமைகளை வெளிப்படுத்தினால் உன்னத நிலையை எட்டி எப்போதும் சாதனையின் உச்சியில் இருக்கலாம்” என பேசினார்.
இக்கல்லூரியில் கடந்த 1996-99 ஆண்டு பயின்று, வேம்பார் செயின்ட் மேரி மெட்ரிக்., பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாக அறங்காவலருமான அனிதா ராபர்ட் கவுரவ அழைப்பாளராக கலந்து கொண்டு கல்லூரி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டார். 2003 – 2006 ஆண்டுகளில் இளங்கலை, 2014 – 16 ஆண்டுகளில் முதுகலை பட்டம் பயின்ற மாணவியும், சார்க் முனைவர் லுப்னா சுரையா பேசினார். இதில் 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர்.
கல்லூரி மாணவியர் பேரவை தலைவி இஸ்மத் மஹாஜபீன் வரவேற்றார். செயலாளர் கமலஜோதி, உதவி பேராசிரியை ஹதிஜத் மஹிரா இறை பிரார்த்தனை செய்தார். ஒருங்கிணைப்பாளர் லதா, மதுரை எலைசியம் அகாடமி மூத்த பயிற்றுநர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.அரபு மற்றும் இஸ்லாம் கோட்பாடு துறை உதவி பேராசிரியை சபிரா பானு துவா ஓதினார். மாணவியர் பேரவை தலைவி (தேர்வு ) பாத்திமா ருஷா நன்றி கூறினார்.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்.
You must be logged in to post a comment.