திண்டுக்கல் மாவட்டத்தில் ஓவ்வொரு வாரமும் திங்கள்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெறுகிறது.இம்முகாமில்பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளை ஊனத்தோடு தொடர்புடைய மருத்துவர் பரிசோதித்து ஊனத்தின் தன்மைக்கு ஏற்ப மருத்துவ சான்றிதல் வழங்குவார். இவ்வாறு வழங்கும் சான்றிதழில் நிரந்தர ஊனம் அல்லது தற்காலிக ஊனம் என குறிப்பிட்டு அடையாள அட்டை வழங்கப்படும்.மருத்துவத்தின் மூலமாக குணப்படுத்தப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டு ஆண்டுகள் அல்லது மூன்று ஆண்டுகள் என காலவரையறை நிர்ணயித்து அடையாள அட்டை வழங்கினால் பரவாயில்லை.
கால் துண்டிக்கப்பட்டவர்கள், குணப்படுத்த முடியாத நிரந்தர ஊனம் உடையவர்கள், முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் என பலருக்கும் இரண்டு ஆண்டு, ஐந்து ஆண்டு என கால நிர்ணயம் செய்து மருத்துவ சான்றிதழில் மருத்துவர்கள் கையொப்பமிடுகிறார்கள்.இதனால், ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையும் மாற்றுத்திறனாளிகள் மீண்டும் மீண்டும் அடையாள அட்டையை புதுப்பிக்க மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் வர வேண்டிய தேவை ஏற்படுகிறது. மிகுந்த பொருட்செலவு ஏற்படுவதோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திண்டுக்கல்லை நோக்கி வருகைதர உடல் ரீதியாக பல்வேறு இன்னல்களையும் சந்திக்க வேண்டியுள்ளது.
உதாரணமாக, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியம் கொம்பேரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி கோபிக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையில் இரண்டு ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை எப்படி குணப்படுத்துவது என தெரியாமல் மருத்துவதுறைக்கே சவால் விட்டுவரும் நிலையில் கோபிக்கு இரண்டு ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் அடையாள அட்டையை வழங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.
மீண்டும் கோபி தனது அடையாள அட்டையை புதுப்பிக்க 2000 ரூபாய் வரை செலவழித்து காரில் பலரது உதவியோடு மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு வந்து புதுப்பிப்பது என்பது இயலாத காரியம்.முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் தினத்தை அனுசரிக்கும் இந்த நாளில் மேலும் மேலும் கொடுமைகளை மாற்றுத்திறனாளிகளுக்கு செய்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே, மாவட்ட நிர்வாகம் குணப்படுத்த முடியாத மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நிரந்தர அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் வேறு வழியின்றி எங்களது சங்கத்தின் சார்பில் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளை திரட்டி திண்டுக்கல் அரசு மருத்துவமனையை முற்றுகையிட வேண்டிய நிலை ஏற்படும் என தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் P.செல்வநாயகம் – மாவட்ட தலைவர்S.பகத்சிங் – மாவட்ட செயலாளர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.