டாக்டர்.தமிழிசை, எச்.ராஜா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்கு வரவேண்டாம் என்று அதிமுக தடுத்து விட்டதாக எழுந்த சர்ச்சை குறித்து, திருச்சி விமான நிலையத்தில் பாஜக தலைவர் தமிழிசையிடம் செய்தியாளர்கள் கேட்டபோது,கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பான பணிகள் அதிகம் இருக்கிறது. இப்போதைக்கு அதுதான் முக்கியமான பணி என்பதால், கூட்டணிக் கட்சியான அதிமுக வேட்பாளரை ஆதரித்து வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் பரப்புரை செய்யவில்லை என்று தெரிவித்தார்.
மத்திய பாஜக அரசின் செயல்பாட்டில், ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, நீட், மோட்டார் வாகனச்சட்டம், தேசிய புலனாய்வு சட்டம், காவிரி, ஹைட்ரோகார்பன், மீத்தேன், நியூட்ரினோ, ஸ்டெர்லைட், சமஸ்கிருதம், இந்தி, தேசிய கல்விக்கொள்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால், தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எதிராக மக்களின் மனநிலை உள்ளதாக உளவுத்துறை மூலம் அறிந்து கொண்டதால்தான் பாஜக தலைவர்கள் பரப்புரைக்கு வரவேண்டாம் என்று அதிமுக கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.மேலும் பாஜக தலைவர்கள் படங்கள், கொடியையும் தேர்தல் பரப்புரையில் அதிமுக அதிகளவில் பயன்படுத்தவில்லை. திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்த போதும், அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ்நாட்டில் பிற கட்சிகளுடன் இணக்கமில்லாமல் இருப்பது, கட்சி வளர்ச்சிக்கான செயல்பாடு குறைவாக இருப்பது உள்ளிட்ட காரணங்களால், விரைவில் தமிழ்நாட்டின் மாநில நிர்வாகிகள் மாற்றப்பட உள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள்.
You must be logged in to post a comment.