ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட சட்டமன்றத்தில் சிறப்புத்தீர்மானம் இயற்றிட வலியுறுத்தி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தமிழர்கள் கூட்டமைப்பினர் தங்கள் குழந்தைகளுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரணியாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றிட வலியுறுத்தி ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தொடர் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தமிழர்கள் கூட்டமைப்பினர் தங்கள் குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.
”வருங்கால சந்ததிகளாகிய நாங்கள் பாதுகாப்பாகவும், உடல் ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டுமென்றால் இந்த ஆலை தூத்துக்குடியில் இருந்து அகற்றப்பட வேண்டும். தமிழக அரசு மக்கள் கூறுவது போல, சட்டமன்றத்தில் ஆலையை மூடுவதற்கு தகுந்தபடி, சிறப்புச் சட்டம் இயற்றிட வேண்டும். குழந்தைகள் பிராத்தனை பலிக்கும் என்பார்கள். அதே போல குழந்தைகளின் போராட்டத்திற்கும் தீர்வு கிடைக்க வேண்டும்.” என்றனர். ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஆலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
செய்தியாளர் – அஹமத் ஜான்
புகைப்படம் – சாதிக்
You must be logged in to post a comment.