வெற்று அறிக்கையை வெளியிட்டு காவலர் குடும்பத்தை ஏமாற்ற வேண்டாம். முதல்வருக்கு வெல்ஃபேர் கட்சி கோரிக்கை.
மனித உயிர்கள் மதிப்பற்றவை. அதிலும் பேரிடர் காலங்களில் முன்னிலையில் நின்று போராடும் வீரர்களின் மரணம் என்பது நாட்டிற்கு ஏற்படக்கூடிய மிகப்பெரிய இழப்பு. கொரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்த R1 மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் திரு பாலமுரளி அவர்களுக்கு வெல்ஃபேர் கட்சியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
17.06.2020 அன்று செய்தி மற்றும் தொடர்புத்துறை (செ.கு. எண்.095) சார்பாக வெளியிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் இரங்கல் அறிக்கையில் உயிரிழந்த காவல் ஆய்வாளர் திரு. பாலமுரளியின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு பணி வழங்க உத்தரவு என்று மட்டும் குறிப்பிட்டுள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
பாலமுரளியின் குடும்பத்தாருக்கு அரசு வேலை வழங்குவதுடன் கடந்த 20.06.2016 அன்று அப்போதைய தமிழக முதலமைச்சர் மறைந்த ஜெ ஜெயலலிதா தமிழக சட்டப்பேரவையில் அறிவித்த அறிவிப்பின்படி பணியில் இருக்கும் பொழுது உயிரிழந்த திரு.பாலமுரளி அவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் என வெல்ஃபேர் கட்சி தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
அத்தோடு கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்னணி வீரர்கள் உயிரிழந்தால் அவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பின்படியும் திரு பாலமுரளி குடும்பத்திற்கு நிவாரண நிதியை அரசு வழங்க வேண்டும் எனவும் வெல்ஃபேர் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது என V.அதீகுர் ரஹ்மான், மாநில தலைவர், வெல்ஃபேர் கட்சி என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
You must be logged in to post a comment.