சவுதி அரேபியா ஜித்தா அருகே உள்ள ஊரில் கமுதியைச் சேர்ந்த தொழிலாளி கிழவமூர்த்தி (வயது54) உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் முகவை மாவட்ட ஆட்சியரிடம் உடலைக் கொண்டுவர மனு அளித்தனர். இந்த செய்தி கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி பத்திரிக்கைகளில் வெளியானது.
இதனையடுத்து துபாய் ஈமான் அமைப்பின் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் அவர்கள் தனது பள்ளிக்கூட நண்பரும் மாவட்ட திமுக பொறுப்பாளருமான காதர்பாட்சா முத்துராமலிங்கத்தை தொடர்பு கொண்டு அந்த குடும்பத்தினர் பற்றிய விபரங்களை கேட்டறிந்தார்.
பின்னர் இறந்தவரின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்று சவூதி அரேபியா இந்தியன் சோஷியல் ஃபோரம் கிழக்கு மாகாண தேசிய துணைத் தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸியின் பார்வைக்கு அனுப்பி வைத்து, கிழவமூர்த்தியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர உதவிடுமாறு கேட்டுகொண்டார்.
முதுவை ஹிதாயத் அவர்களின் கோரிக்கையை பெற்றுக்கொண்ட கீழை ஜஹாங்கீர் அரூஸி இந்தியன் ஃபிரட்டர்னிடி ஃபோரம் மாவட்ட தலைவர் பைசல் பாய் கவனத்திற்கு கொண்டு சென்று, ஜித்தாவில் உள்ள இந்தியன் சோஷியல் ஃபோரம் நிர்வாகிகள் மூலம் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
இந்தியன் சோஷியல் ஃபோரம் ஜித்தா நிர்வாகிகள் தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் முயற்சி செய்து காலாவதியான இறந்தவரின் பாஸ்போர்ட்டையும் புதுப்பித்து, உடலை எம்பாம்மிங் மற்றும் இதர காரியங்களுக்காக மருத்துவமனை கொண்டு சென்று அனைத்து விதமான அரசு நடைமுறைகளையும் முடித்து உடலை இந்தியா அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் வேலை பார்த்த கம்பெனிக்கும் நமது இந்தியன் சோஷியல் ஃபோரம் நிர்வாகிகளின் இடத்திற்கும் 80 கிலோ மீட்டர் தூரம் இருந்த போதும் சிரமம் பாராது அங்கே சென்று ஆவணங்களைப் பெற்று இந்திய தூதரகத்தின் உதவியோடும் கம்பெனி மக்கள் தொடர்பாளர் கேரளாவை சேர்ந்த ஜோ ஜோ அவர்களின் உதவியோடும் உடலை இறந்தவரின் சொந்த ஊரான கமுதிக்கு அனுப்பி வைத்தனர்.
இன்று காலை(04.10.2018) 9மணிக்கு இறந்தவரின் உடல் திருச்சி விமான நிலையம் வந்து சேர்ந்தது.
கொட்டும் மழையில் அங்கு எஸ்டிபிஐ கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் இமாம் ஹஸ்ஸான் தலைமையில் மாவட்ட செயலாளர் ரபீக்,கிழக்கு தொகுதி தலைவர் சுஹைப்,துணை தலைவர் ஜமான்,செயலாளர் காதர், ஏர்ப்போட் கிளைத்தலைவர் கலீல், செயலாளர் முத்தலிப், சுப்ரமணியபுரம் கிளைத்தலைவர் பாட்ஷா, மற்றும் மன்சூர் ஆகியோர் இறந்தவரின் உடலைப் பெற்று இறந்தவரின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
இறந்தவரின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் மனிதநேயத்தோடு செயல்பட்ட ஜித்தா இந்தியன் சோஷியல் ஃபோரம் நிர்வாகிகளுக்கும்,தம்மாம் நிர்வாகி கீழை ஜஹாங்கீர் அரூஸிக்கும்,இந்தியன் ஃபிரட்டர்னிடி ஃபோரம் தம்மாம் தலைவர் பைசல் அவர்களுக்கும்,துபாய் ஈமான் அமைப்பின் ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத் அவர்களுக்கும் திருச்சி மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவிப்பதாக இறந்தவரின் உறவினர்கள் கூறியுள்ளனர்.
செய்தி தொகுப்பு: கீழை ஜஹாங்கீர் அரூஸி.
You must be logged in to post a comment.