இராமநாதபுரம் சாலையில் உள்ள ரயில்வே கடவு அருகே ரூ.30.74 மதிப்பில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை மேம்பாலம் பணிகளுக்கு தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் அடிக்கல் நாட்டினார். மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமை வைத்தார்.
இந்த விழாவில் தகவல் தொழில் நுட்பவியல் அமைச்சர் மணிகண்டன் கூறியதாவது, “இராமநாதபுரம் _ கீழக்கரை சாலையில் ரயில்வே கேட் உள்ளது. இது வழியே அரசு, தனியார் பஸ்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இராமேஸ்வரம் – இராமநாதபுரம் நிலையங்களில் இருந்து ரயில்கள் கிளம்பும்போது இந்த ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால், இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மக்களின் சிரமம் போக்கும் விதமாக எனது கோரிக்கையை ஏற்று இந்த ரயில்வே கேட் அருகே புதிய சாலை மேம்பாலம் அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை மூலம் தனியார் நிலம் 92 சென்ட், அரசு நிலம் 51 சென்ட், நிலம் எடுப்பதற்கி ரூ.5.14 கோடி, கட்டுமான பணி தொழில் நுட்ப அங்கீகாரமாக ரூ. 25.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் புதிய சாலை மேம்பாலம் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது . இந்த மேம்பாலம் 675. 6 மீட்டர் நீளம் , 11 மீட்டர் அகலம், பாலத்திற்கு இரு புறமும் அணுகு சாலை 370 மீட்டர் நீளத்தில் அமையவுள்ளது. பணிகளை 2 ஆண்டு காலத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் ரூ.10 கோடி, ராமேஸ்வரம் நகராட்சி பகுதியில் ரூ.7 கோடி, கீழக்கரை நகராட்சி பகுதியில் ரூ.3 கோடி மதிப்பில் சாலை மேம்பாட்டு பணி மேற்கொள்ளப்படவுள்ளன” என கூறினார்.
நெடுஞ்சாலைத்துறை (திட்டங்கள், மதுரை வட்டம் ) கண்காணிப்பு பொறியாளர் பழனியப்பன் , கோட்ட பொறியாளர் கேந்திர தேவி , செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, ஒப்பந்தகாரர் லியாக்கத் அலி கான், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ராஜசேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
You must be logged in to post a comment.