இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அரசுத்துறை பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீரை ஆட்சியர் வீரராகவ ராவ் வழங்கினார்.அவர் தெரிவித்ததாவது:ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரானா வைரஸ் பரவாமல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 1,432 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 15 பேருக்கு கொரானா தொற்று உள்ளது எனவும், 1,391 பேருக்கு தொற்று இல்லை எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 26 பேருக்கான பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் திரும்பிய 4,777 பேர் 28 நாட்கள் தனிமைப்படுத்தும் காலம் நிறைவடைந்து கொரானா தொற்று அறிகுறி இன்றி நலமுடன் உள்ளனர். மாவட்டத்தில் கொரானா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி தொற்று பாதித்தோரின் வீடுகளை சுற்றி 5 கி.மீ. சுற்று வட்டாரத்தில் 11 கட்டுப்பாட்டு பகுதிகள் ஏற்படுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் ஒவ்வொரு வீடாக மக்களுக்கு நோய் அறிகுறி குறித்து தொடர்ந்து 14 நாட்களுக்கு கள ஆய்வுப்பணியில் 750 பணியாளர்கள்ஈடுபட்டுள்ளனர். இப்பகுதிகளில் கொரானா வைரஸ் தடுப்பு களப்பணியாளர்களான சுகாதாரம், வருவாய், காவல், உள்ளாட்சி துறை சார்ந்த அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள், ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் என அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஜிங்க் மாத்திரைகள் ,மல்டி வைட்டமின் மாத்திரைகள் , கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் ஆகியவை வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 144 தடை உத்தரவு விதிமீறல் தொடர்பாக இதுவரை 2,637 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றாத 203 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரானா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தோரில் பரமக்குடியைச் சேர்ந்தோர் 3 பேர், கீழக்கரையைச் சேர்ந்தோர் 2 பேர் என 5 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.பரமக்குடியைச் சேர்ந்த இருவர் வைரஸ் தொற்றிலிருந்து ஏற்கனவே பூரண குணம் அடைந்துள்ளனர். தொற்று சிசிக்சை பெற்ற 15 பேரில் 7 பேர் குணமடைந்துள்ளனர் என தெரிவித்தார்.கொரானா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் தொழுநோய் பாதித்து சிகிச்சை பெறும் 56 பேருக்கான நிவாரண உணவுப் பொருட்களை தொழுநோய் மருத்துவ துணை இயக்குநர் ஆர்.ரவிச்சந்திரனிடம் வழங்கி, சுகாதாரத்துறை பணியாளர்கள் மூலம் நோயாளிகளின் வீடுகளில் விநியோகிக்க உத்தரவிட்டார். பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் து.தங்கவேல், ராமநாதபுரம் சுகாதார நலப்பணிகள் துணை இயக்குநர் பெ.இந்திரா, நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார், காவல் துணை கண்காணிப்பாளர் ஆர்.சங்கர், வட்டாட்சியர் செந்தில்வேல் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
14
You must be logged in to post a comment.