இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளியில் கொரானா வைரஸ் பரவல் கூடுதல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் ஆய்வு செய்தார்.அவர் தெரிவித்ததாவது:ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 1,233 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 14 நபர்களுக்கு கொரோனா தொற்று உள்ளது எனவும், 1,125 பேருக்கு தொற்று இல்லை எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 94 நபர்களுக்கான பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இராமநாதபுரம் மாவட்டத்திற்கு திரும்பிய 4,777 பேர் அனைவரும் 28 நாட்கள் தனிமைப்படுத்தும் காலம் நிறைவடைந்து கொரோனா தொற்று அறிகுறி இல்லாமல் நலமுடன் உள்ளனர். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைச் சுற்றி 5 கி.மீ. சுற்றுவட்டாரத்தில் 11 கட்டுப்பாட்டு பகுதிகள் ஏற்படுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் 750 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு, ஒவ்வொரு வீடாக பொதுமக்களுக்கு நோய் அறிகுறி குறித்து தொடர்ந்து 14 நாட்களுக்கு களஆய்வுப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதிகளுக்கு உள்ளேயும், வெளியேயும் மக்கள் நடமாட்டத்தை தடுத்திடும் வகையில் சாலைகளில் பேரிகார்டு தடுப்பு அமைக்கப்பட்டு காவல்துறையின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்குத் தேவையான காய்கறி, பால் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் நேரடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியில் வருவதை தவிர்க்க கண்டிப்பாக முகக்கவசம் அணியவும் அறிறுவுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.ராமநாதபுரம் சுகாதார நலப்பணிகள் துணை இயக்குநர் பெ.இந்திரா, வட்டாட்சியர் முருகவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.இராஜேந்திரன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
14
You must be logged in to post a comment.