தமிழகத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர், மாதங்கள் வட கிழக்கு பருவ மழை பொழிவு காலங்களாகும். ராமநாதபுரம் மாவட்டத்தில் அக்., ல் 182.6 மி.மீ., நவ.,ல் 206.3 மி.மீ., டிச.,ல் 112. 70 மி.மீ., சராசரி மழை பொழிவு கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2015, 16, 17 ஆம் ஆண்டுகளில் அக்., நவ., டிச., மாதங்களில் சராசரி மழை பொழிவை காட்டிலும் குறைந்த அளவே மழை பெய்தது. சராசரி மழை நீரில் 48 சதவீத அளவு குடிநீர், விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 2015, 16, 17 ஆண்டுகள் மற்றும் 2018 டிச., மாதத்தில் சராசரியை விட குறைவான மழை பொழிவால், மாவட்டத்தில் நிலவிய வறட்சியை மாவட்ட நிர்வாகம் எதிர்த்து போராடி தண்ணீர் பற்றாக்குறையை சமாளித்தது. நடப்பாண்டு பருவ மழை செப்., 29ல் தொடங்கியது.இந்நிலையில் கடந்த சில நாட்களில் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக கடந்த இரண்டு நாட்களாக மண்டபம் பேரூராட்சி பகுதிகளான முனைக்காடு முதல் தோணித்துறை வரை 18 வார்டுகளில் கனமழை பெய்துள்ளது. பேரூராட்சியில் தாழ்வான பகுதிகளான 1 வது வார்டு எருமைத்தரவை, 6வது வார்டு சம்மாட்டி அப்பா தெரு, 7 வது வார்டு ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்குவதை உடனுக்குடன் அப்புறப்படுத்த மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களுக்கு நிலையான உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பேரூராட்சிகளின் சிவகங்கை மண்டல உதவி இயக்குநர் இரா.ராஜா அறிவுறுத்தல்படி, மண்டபம் பேரூராட்சி 1, 6, 7 வது வார்டுகளில் தேங்கிய மழை நீர் மின்மோட்டார் மூலம், கடலில் வெளியேற்றப்பட்டது. இப்பணியை பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ராஜா, பேரூராட்சி செயல் அலுவலர் சு. மெய் மொழி, இளநிலை உதவியாளர் சுப.முனியசாமி ஆகியோர் பார்வையிட்டு துரிதப்படுத்தினர். வீடுகளில் மழை நீர் தேங்கா வண்ணம் சுற்றுபுறங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.