இராமநாதபுரத்தில் மருத்துவக் கல்லூரி அமைவதற்கான 22 ஏக்கர் நிலம் பட்டணம்காத்தான் அம்மா பூங்கா அருகே தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தை விரைவில் மத்திய மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்யவுள்ளனர். தமிழக அரசு மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அமைக்க கொள்கை ரீதியாக முடிவெடுத்துள்ளது. அதனடிப்படையில் பெரும்பாலான மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டுள்ள நிலையில், ராமநாதபுரத்தில் மட்டும் கடந்த 2012 -இல் அரசு அறிவித்தபடி மருத்துவக் கல்லூரி அமையவில்லை. கடந்த 2016 சட்டப் பேரவைத் தேர்தலிலும், கடந்த மக்களவைத் தேர்தலிலும் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட அனைத்துக் கட்சியினரும் மருத்துவக் கல்லூரி அமைப்பதையே முக்கிய தேர்தல் வாக்குறுதியாக வெளியிட்டனர்.
ராமநாதபுரத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடமும் வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது ராமநாதபுரத்தில் மருத்துவக் கல்லூரி அமையும் இடத்தை தேர்வு செய்து, அதை கருத்துருவாக அனுப்புமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு மத்திய, மாநில அரசின் சுகாதாரத்துறைகள் கேட்டுக் கொண்டுள்ளன. தற்போதுள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவனை 14 ஏக்கரில் அமைந்துள்ளது. எனவே அதில் மருத்துவக் கல்லூரி அமைக்க முடியாத நிலை உள்ளது. ஆகவே மருத்துவக் கல்லூரி மற்றும் அதனுடன் மருத்துவமனையும் அமைக்கத் தேவையான இடம் பட்டணம்காத்தான் பகுதி அம்மா பூங்கா அருகே உள்ளது. போக்குவரத்து வசதி, மண் உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களுக்கு ஏற்றதாகவும் அந்த இடம் உள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த இடத்தை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலைமையில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஸ்டீபன் சகாயராஜ் உள்ளிட்டோர் திங்கள்கிழமை பார்வையிட்டுள்ளனர். அதன்படி அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அதன் அடிப்படையில் மத்திய மருத்துவக் குழுவினர் விரைவில் ராமநாதபுரம் வந்து மருத்துவக் கல்லூரி இடத்தை ஆய்வு மேற்கொள்வர். அதன்பின் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு முறைப்படி அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. மேலும், தற்போதைய இடத்தில் அரசு குடியிருப்புகள் கட்டப்பட்டு அவை பயன்பாடின்றி இடிந்த நிலையில் உள்ளன. அவற்றையும் முழுமையாக இடித்து மருத்துவக் கல்லூரி கட்டடம் அமைகக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை தவிர்த்து மேலும் கூடுதலாக ஒரு இடத்தை தேர்வு செய்யும் வகையில் சர்க்கரைக்கோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட இடமும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
You must be logged in to post a comment.