இந்திய பக்தர்களின்றி தொடங்கியது கச்சத்தீவு ஆலய திருவிழா!- ராமேசுவரத்தில் இருந்து படகு சேவை ரத்து..
கச்சத்தீவில் இந்திய பக்தர்கள் இல்லாமல், இலங்கை பக்தர்கள் மட்டுமே கலந்துகொண்ட அந்தோணியார் ஆலயத் திருவிழா நேற்று மாலை தொடங்கியது. ராமேசுவரத்திலிருந்து படகு சேவை ரத்து செய்யப்பட்டதால், பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.
கச்சத்தீவில் அந்தோணியார் ஆலயத் திருவிழாவை, நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநாதன் நேற்று மாலை 4 மணியளவில் ஆலயத்தின் கொடியை ஏற்றி தொடங்கி வைத்தார். யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம். யாழ்ப்பாணம் முதன்மை குரு ஜோசப் தாஸ் ஜெபரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, ஜெபமாலை, சிலுவைப் பாதை நிகழ்ச்சி, நற்கருணை ஆராதனையும் நடைபெற்றன. இரவு புனித அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட தேர், ஆலயத்தை வலம் வந்தது.
இந்த நிகழ்வுகளில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பங்குத் தந்தையர்கள், அருட் சகோதரிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இன்று காலை கச்சத்தீவில் (சனிக்கிழமை) சிறப்புத் திருப்பலி பூஜையும், கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெறுகின்றன. பின்னர், கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
You must be logged in to post a comment.