ஆவணங்கள் இன்றி என்.பி.ஆர் பதிவு செய்யப்படும்:- ஓபிஎஸ்-ஈபிஸ் அறிக்கை!
தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் ஆவணங்கள் ஏதுமின்றி, குடும்பத்தினர் தெரிவிக்கும் தகவலின்படி பதிவு செய்யப்படும் என அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்.பி.ஆர் பதிவேடு தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், சிறுபான்மை சமூக மக்களின் நம்பிக்கைக்குரிய அரணாக அதிமுக எப்போதும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக அரசுக்கு நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு பெருகி வருவதை தாங்கிக்கொள்ள முடியாமல், திமுக பொய்ப் பிரசாரங்களை தூண்டிவிடுவதாகவும், குறிப்பாக இஸ்லாமிய மக்களை குழப்புவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு காங்கிரஸ்-திமுக கூட்டணி மத்திய அரசு தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு அங்கமாக, தேசிய மக்கள் தொகை பதிவேட்டினை உருவாக்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில், இந்தியாவில் 6 மாதமோ அல்லது அதற்கு மேலோ வசிக்கின்றன அனைத்து நபர்களின் விபரங்கள் ஆவணங்கள் ஏதுமின்றி, குடும்பத்தினர் தெரிவிக்கும் தகவலின் படி பதிவு செய்யப்படுகிறது எனவும் கூறப்படுள்ளது.
அதுமட்டுமின்றி 2020ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது, தாய்மொழி, தந்தை/தாயார்/துணைவர், பிறந்த இடம்/பிறந்த தேதி விபரம் மற்றும் ஆதார்/கைபேசி எண், வாக்காளர் அட்டை/ஓட்டுநர் உரிமம் ஆகிய விபரங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.