தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் சிலை அருகே சுமார் 100 ஆண்டு பழமையான பூவரச மரம் பெய்து வரும் கன மழையின் காரணமாக வேறோடு சாய்ந்தது. அப்போது பொது மக்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் அங்கு டிரான்ஸ்பார்மர் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் மரம் விழுந்ததில் கார் சேதமடைந்தது. மேலும் போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக இருந்தது. இதனை தொடர்ந்து அப்பகுதி சமூக ஆர்வலர் வக்கீல் சின்னத்தம்பி, நகர காங்கிரஸ் தலைவர் எஸ்கேடி ஜெயபால் ஆகியோர் தீயணைப்பு துறையினர், காவல் துறை, வருவாய்த்துறை, பேரூராட்சி மற்றும் மின் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலர் முத்து செல்வன் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர்கள் ரவீந்திரன், பாலகிருஷ்ணன், மற்றும் வீரர்கள் விரைந்து வந்து மின்சாரத்தை துண்டித்து காவல்துறை உதவியுடன் மரம் அறுக்கும் இயந்திரங்கள் மூலம் மரத்தை அகற்றினர். தொடர்ந்து பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் வெட்டப்பட்ட மரத்தை அப்புறப்படுத்தினர். அப்போது அரசு அலுவலர்களுடன் சமூகசேவகர் சமுத்திரம், ஜேக்கப், காமராஜர் மன்ற தலைவர் முருகையா நாடார்,ராஜா,துரை, பொறியாளர் மணிகண்டன், சுரண்டை பேரூராட்சி மேற்பார்வையாளர் ராமர், உள்ளிட்டோர் உடனிருந்தனர். மழையின் போதும் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மரத்தை அகற்றிய அரசு அதிகாரிகளுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.