கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொது மக்கள் அரசின் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற வேண்டும் என தென்காசி தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர். இரா.ஜெஸ்லின் அறிவுறுத்தியுள்ளார்.பொதுமக்கள் ஆரம்ப நிலையிலேயே தேவையான பரிசோதனைகளை தாமாக முன்வந்து மேற்கொள்வதன் மூலம் உயிரிழப்புகளை தவிர்க்கலாம் என தெரிவித்துள்ள அவர், இது குறித்து மேலும் கூறியுள்ளதாவது, கொரோனா தொற்றின் 2வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. பொது மக்கள் ஆரம்ப நிலையிலேயே கொரோனா பரிசோதனையும், சிகிச்சையும் தாமாக முன்வந்து செய்யாத காரணத்தினால் நோய் முற்றுதலும் இறப்புகளும் அதிகமாக நிகழ்கின்றன. எனவே தயவு செய்து பொதுமக்கள் காய்ச்சல் இருமல் தலைவலி போன்ற உபாதைகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். கொரோனா தொற்று உள்ளவர்கள் எந்த நோய் அறிகுறிகள் இல்லாதவரும் சிறிய அளவிலான உபாதைகள் உள்ளவர்கள் மட்டுமே வீடுகளில் தங்களை மருத்துவரின் ஆலோசனைபடி தனிமை படுத்தி கொள்ள வேண்டும். சிறிய அளவிலான நோய் உபாதைகள் உள்ளவர்களும் மற்ற பிற நோய்கள் கூடுதலாக உள்ளவர்களும் குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்களும் மருத்துவரின் ஆலோசனைப்படி மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் நிலையங்களில் சேர்ந்து கொள்ள வேண்டும். இருமல் விடாமலும், சளி தொந்தரவு அதிகமாகவும் காய்ச்சல் குறையாமல் இருக்கும் நபர்கள் கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டாலும், செய்யப்படாவிட்டாலும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். கால தாமதமாக சிகிச்சை எடுக்கும் பட்சத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு நோய் முற்றும் அபாயம் ஏற்படுகிறது. மூச்சு திணறல் ஏற்பட்டபின் மருத்துவமனையில் போர் கால அடிப்படையில் அனைத்து வசதிகளும் கூடிய சிகிச்சைகள் செய்தாலும் குணமாக்குவது கடினமாக இருக்கிறது. எனவே பொதுமக்கள் மூச்சு திணறல் ஏற்படும் வரை தாமதிக்காமல் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறுவதன் மூலம் உயிர் இழப்புகளை தவிர்க்கலாம். குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் நோய் தோற்று காலத்தில் தினமும் சர்க்கரை நோய் அளவை பரிசோதித்து அதற்கான சிகிச்சையை சரியான முறையில் செய்ய வேண்டும். பொது மக்கள் அரசு வழிகாட்டுதலாகிய சமூக இடைவெளி, முக கவசம், கைக்கழுவுதல், கொரோனா பரிசோதனை, வீடுகளில் தனிமை படுத்துதல், கொரோனா சிகிச்சை மையங்களில் தனிமைப்படுத்துதல், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று கொள்ளுதல் என அரசு கூறியுள்ள வழிகாட்டுதலின் படி நடந்தால் இப்பெருந்தொற்றில் இருந்து எளிதாக மீண்டுவிடலாம் என தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா. ஜெஸ்லின் கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.