அலங்காநல்லூர் அருகே உள்ள நடராஜன் நகரை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 55). பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 31-ந் தேதி மதியம் வீட்டு முன்பு அமர்ந்து இருந்த போது 2 டூவீலரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் இளங்கோவனை சுற்றி வளைத்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாக வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
படுகாயம் அடைந்த இளங்கோவன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து இளங்கோவனின் 2-வது மனைவி அபிராமி அலங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அபிராமியே கூலிப்படையை ஏற்பாடு செய்து இளங்கோவனை கொன்றது தெரிய வந்தது.
இதற்கு காரணம் பைனான்சியர் இளங்கோவன், தனது 2-வது மனைவி அபிராமியின் மகளான அனுசுயாவுக்கு பாலியல் தொந்தரவு செய்ததால் அபிராமி கண்டித்துள்ளார். அனுசுயாவை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்த பிறகும் இளங்கோவன், அனுசுயாவை தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அனுசுயாவுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி இளங்கோவனை கொன்றதாக அபிராமி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
அலங்காநல்லூர் போலீசார் அபிராமி மற்றும் அனுசுயாவை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இளங்கோவனை கொலை செய்த கூலிப்படையை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கீழை நியூஸுக்காக…மதுரை நிருபர் கனகராஜ்
You must be logged in to post a comment.