நாட்டைப் பாதுகாத்து வரும் ராணுவ வீரர்களின் தியாகத்தின் மீது சந்தேகம் எழுப்பும் வகையில் ப.சிதம்பரம் போன்றோர் கேள்விகளை எழுப்புவது வெட்கக் கேடானது. தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க., மற்றும் பா.ம.க., ஆகியவை இணைந்திருப்பது தமிழகத்தின் வளர்ச்சிக்காகத்தான்’’ என மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரித் துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
என்.எல்.சி., மற்றும் அதன் துணை நிறுவனம், ரூ.8,000 கோடி செலவில், தூத்துக்குடியில் அமைந்துள்ள 200 மெகா வாட் சூரிய ஒளி மற்றும் 1,000 மெகா வாட் அனல் மின்நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா இன்று தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில், மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரித் துறை அமைச்சர் பியூஸ் கோயல் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், “நாட்டைப் பாதுகாத்து வரும் ராணுவ வீரர்களின் தியாகத்தின் மீது சந்தேகம் எழுப்பும் வகையில் ப.சிதம்பரம் போன்றோர் கேள்விகளை எழுப்புவது வெட்கக்கேடானது. இவ்வாறு ராணுவத்தை குறை சொல்வதன் மூலம் பாகிஸ்தான் அரசிற்கும் ஆதரவாகப் பேசுகிறார்கள். தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க., மற்றும் பா.ம.க., ஆகியவை இணைந்திருப்பது தமிழகத்தின் வளர்ச்சிக்காகத்தான்” என்றார். தொடர்ந்து விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், “முத்துநகரம் என அழைக்கப்படும் தூத்துக்குடிக்கு மீண்டும் ஒரு முத்து பதிக்கப்படுகிறது. 150 மெகா வாட் சூரிய மின் சக்தியாக திட்டமிடப்பட்ட மின் உற்பத்தி அலகு, என்.டி.பி.எல்., அதிகாரிகளின் முயற்சியால், 200 மெகா வாட்ஸாக இன்று உயர்ந்துள்ளது. அதே போல், 1,000 மெகா வாட்ஸ் அனல் மின் நிலையமும் இன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. ஏற்கெனவே இயங்கி வரும் நிறுவனத்திற்கு எதற்காக இந்த விழா எனச் சிலர் கேட்கிறார்கள். இந்த நிறுவனத்தை நாம் முறைப்படி இன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கிறோம். இந்த நிறுவனம் முழுமையாக இந்திய நிலக்கரியினால் மின்சாரத்தை உற்பத்தி செய்து, இந்திய மக்களின் பயன்பாட்டிற்கு வழங்குகிறது. பிரதமரின், சிறுகுறு விவாயிகளுக்கான பண உதவி திட்டம் மூலம் இந்தியாவில், ரூ.12,000 கோடி விவசாய குடும்பங்கள் பயன் பெருகின்றன. இந்த 6,000 ரூபாய் விவசாயிகளுக்கான உதவி கிடையாது. இது அவர்களுக்கான நன்றிக் கடன். அதே போல், இடைக்கால நிதிநிலை அறிக்கையில், மீனவர்களுக்கும் சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளைப் போல மீனவர்களுக்கும் கிஸான் கடன் அட்டை வழங்கப்படுகிறது மீனவர்கள் வாங்கும் கடனுக்கு, 2 சதவீத வட்டி குறைப்பும், சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தும் போது, மேலும், 3 சதவீத வட்டிக் குறைப்பும் அளிக்கப்படுகிறது. இன்று மத்திய அமைச்சர் பொன்.ராதகிருஷ்ணனும், அமைச்சர் ராஜூவும் என்னிடம் ஒரு கோரிக்கையை வைத்தார்கள். அதன் படி, தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் இனி வாரத்தில் 3 நாள்கள் இயக்கப்படும். அதே போல, அந்த்யோதயா ரயில் இனி கோவில்பட்டியில் நின்று செல்லும்’’ என்றார். இந்த விழாவில், மத்திய கப்பல் துறை இணை அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, தமிழகச் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.ராஜூ, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெய்சிங் தியாகராஜன் நட்டர்ஜி, ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சண்முகநாதன் மற்றும் என்.எல்.சி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
You must be logged in to post a comment.