“முழுமையான ஊரடங்கு நேரத்தில் அதிகாலை 4.00மணி முதல் 8.00மணி வரை பால் தட்டுப்பாடின்றி கிடைக்கும்:
சென்னை, மதுரை, கோவை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட 5மாவட்டங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் முழுமையான ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் அந்த அறிவிப்பாணையால் பால் விநியோகம் குறித்து பொதுமக்கள், பால் முகவர்கள், பால் நிறுவனங்கள் மத்தியில் கடுமையான குழப்பம் நிலவியது.
எனவே அது குறித்து விவாதிக்க இன்று பிற்பகல் 12.15மணியளவில் எங்களது சங்கத்தின் மாநில நிர்வாகிகள் மற்றும் தனியார் பால் நிறுவனங்களைச் சேர்ந்த உயரதிகாரிகள் ஒருங்கிணைந்து (Zoom Meeting) காணொளி காட்சி வாயிலாக கலந்துரையாடினோம்.
அப்போது மேற்கண்ட 5மாவட்டங்களில் நாளை முதல் முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்படும் சூழலில் வணிக நிறுவனங்கள் எதுவும் இயங்காது என்பதால் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி அதிகாலை 4.00மணி முதல் காலை 8.00மணி வரை பால் முகவர்கள் தங்களின் பால் விநியோக மையங்களில் மட்டும் ஆவின் மற்றும் தனியார் பாலினை விற்பனை செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
சில்லறை வணிக நிறுவனங்கள் முழுமையாக மூடப்பட்டிருக்கும் என்பதால் முழுமையான ஊரடங்கு நேரத்தில் பொதுமக்களை சமூக விலகலை கடைபிடிக்க வைத்து, முகக்கவசம் அணிந்து வந்து பாலினை வாங்கிக் கொள்ளுமாறும், பால் தங்குதடையின்றி, தட்டுப்பாடின்றி கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் அனைவரும் பால் கிடைக்காது என அச்சப்படாமல் தங்களுக்கு தேவையான பாலினை மட்டும் வாங்கிக் கொள்ளுமாறும், தேவைக்கு அதிகமாக வாங்கி செயற்கையான பால் தட்டுப்பாடு உருவாக காரணமாக வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
பால் முகவர்கள் தங்களின் விநியோக மையங்களில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவதை முற்றிலுமாக தவிர்த்து முறையான சமூக விலகலையும், அரசின் உத்தரவையும், தகுந்த பாதுகாப்பு விசயங்களையும் சரியான முறையில் பின்பற்றி ஆவின் மற்றும் தனியார் பாலினை விநியோகம் செய்ய வேண்டும் என பால் முகவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன் ஆவின் மற்றும் தனியார் நிறுவனங்களின் பாலினை பொதுமக்களுக்கு தங்குதடையின்றி விநியோகம் செய்வது என்பது பால் முகவர்களால் மட்டுமே சாத்தியம் என்பதால் பால் முகவர்களுக்கு காவல்துறையும், சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகமும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கிட உத்தரவிடுமாறு தமிழக அரசை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
சு.ஆ.பொன்னுசாமி நிறுவனர் மாநில தலைவர். தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.
You must be logged in to post a comment.