சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொல்லியல் ஆராய்ச்சி மூலம் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பொதுமக்கள் காட்சிக்கு வைப்பதற்காக அகழ்வைப்பகம் அமைக்கும் பணி ரூ.12 கோடி 21 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இதனை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ. வேலு, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே ஆர். பெரியகருப்பன் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர். கீழடியில் அகழ்வைப்பகம் பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதாக ஒப்பந்ததாரர்களை கண்டித்த அமைச்சர் ஏ.வ.வேலு விரைந்து பணிகள் மேற்கொள்ள அறிவுரை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஏ.வ. வேலு, கீழடி அகழ்வைப்பகம் பணிகள் 60% நடைபெற்று இருக்க வேண்டிய நிலையில் தற்போது 17% நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தார். முதல்வர் ஆணைக்கிணங்க பணிகள் விரைந்து முடிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அருங்காட்சியகம் வடிவமைப்பில் மாற்றம் ஏதும் மேற் கொள்ளப்படாது என்றும், கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை செம்மைப்படுத்தப்பட்டு துரிதமாக நடைபெறும் என்ற அமைச்சர், கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை நிறுத்தும் குறுகிய மனப்பான்மை எங்களுக்கு இல்லை என தெரிவித்தார். வைகை ஆற்றில் கருவேல மரங்கள் அகற்றும் பணியினை அத்துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெறும் என உறுதியளித்தார். கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வைகை காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு வரும் இதற்கான பணியினை நிதி அமைச்சர் மேற்கொண்டுவருவதாகவும், பட்ஜெட் தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.