சாதனை என்பது சமூகத்தில் உயர்ந்தவர்களுக்கும், பொருளாதார வசதி உள்ளவர்களுக்கும் மட்டும் உரித்தானது அல்ல, சாமானிய கீழ்மட்ட மக்களும் சாதனை படைக்க பிறந்தவர்களே, அவர்களையும் வெளியுலகுக்கு காட்ட வேண்டும் என்ற முழு முயற்சியோடு செயல்பட்டு வரும் தன்னார்வ நிறுவனம் தான் வில் மெடல்ஸ் மற்றும் முகவை ரிகார்ட்ஸ். இந்நிறுவனம் சாதனை செய்ய துடிக்கும் அடிதட்டு மக்களை ஊக்கப்படுத்தி அவர்களும் சாதனை செய்வதற்கான களத்தையும், அவர்களுக்கான தேவைகளையும் உருவாக்கி தருகிறார்கள்.
இந்த நற்பணியில் ஊடகத்துறை என்ற அளவில் மட்டுமில்லாமல் கல்வி மற்றும் மருத்துவ உதவிகளை செய்து வரும் கீழை நியூஸ் நிர்வாகம் இன்று (13/08/2018) மண்டபம் ஊராட்சி ஒன்றியம் காந்தி நகர் அரசு நடுநிலைப் பள்ளியின் சாதனை நிகழ்ச்சிக்கான அனைத்து உதவிகளையும் வில்ஸ் மெடல் நிறுவனத்துடன் இணைந்து செய்திருந்தது.
வேரினை இழந்தும் ஆல மரம் .. விழுதுகள் தாங்க வாழ வாழும். .. உன் கையை நம்பி உயர்ந்தி பாரு… உனக்கென எழுது ஒரு வரலாறு … உனக்குள்ளே சக்தி இருக்கு அதை உயர்த்திட வழி பாரு … உன்னால் முடியும் தம்பி தம்பி … உனக்குள் இருக்கும் உன்னை நம்பி … எல்லா ஆற்றல்களும் உன்னுள்ளே குடி, கொண்டிருக்கின்றன உன்னால் எதையும் சாதிக்க முடியும்.
இவை அனைத்தும் கவிஞர்களின் பாடல், மகான்களின் பொன் வரிகளாக இருக்கலாம். மனிதன் தன்னுள் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிப்படுத்தினால் சாதனையாளராக மாறலாம். நம்மில் பலர் ஓசையின்றி சாதனை செய்து விட்டு வெளி உலகிற்கு தெரியாமல் ஒளிந்து கொள்வோரின் அசாத்திய திறமைகளை வெளிக்கொணரும் இலக்குடன் அரசு பள்ளியில் பயின்ற மாணவிகள் இருவர் களமிறங்கினர். பல்வேறு சாதனைக்கு சொந்தக்காரர்களான இருவரும் தன்னை போல் பிறரிடம் இருக்கும் சாதனைகளை பலருக்கு தெரியப்படுத்த வேண்டும் என யோசித்தது போது இவர்கள் சிந்தையில் உதித்தது தான் ‘வில் மெடல் ஆப் வேர்ல்டு ரிக்கார்ட்ஸ்’ மற்றும் ‘ முகவை ரிக்கார்ட்ஸ்’.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல் ஆங்காங்கே நடக்கும் சிறிய, பெரிய சாதனைகள் பலவற்றை கடந்த ஓராண்டில் வெளிக்கொண்டு வந்து பலரின் பாராட்டுகளை பெற்று கொடுத்து வந்துள்ளனர். இந்த வரிசையில் இந்திய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் ஓவிய போட்டி சாதனையை வெற்றி கரமாக செய்து முடித்து பள்ளிக்கு விருது, பாராட்டு சான்றிதழ்கள் பெற்று தந்தவர்கள் தான் காந்தி நகர் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள்.
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் காந்தி நகர் நடுநிலைப்பள்ளி 120 மாணவ, மாணவிகள் ஒரே இடத்தில் அமர்ந்து தேசிய சின்னங்கள், தேசிய தலைவர்கள், நதிகள், விடுதலை போருக்கு உழைத்து இன்னுயிர் மாய்த்த தலைவர்கள் உள்பட 500க்கும் மேற்பட்ட ஓவியங்களை ஒரு மணி நேரத்தில் வரைந்து அசத்தினர். இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஓவிய சாதனை நிகழ்ச்சியை மண்டபம் வட்டார கல்வி அலுவலர்கள் கே.ரவிக்குமார், பி.சுதாமதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். ‘வில் மெடல் கிட்ஸ் ரிக்கார்ட்ஸ்’, ‘முகவை ரிக்கார்ட்ஸ்’ பாராட்டு சான்றிதழ்களை ‘வில் மெடல் ஆப் வேர்ல்டு ரிக்கார்ட்ஸ்’ நிறுவனத்தலைவர் கவிஞர் ஆ.கலைவாணி, பள்ளி தலைமை ஆசிரியை எம். உமா தேவியிடம் வழங்கினார். சாதனை கோப்பை, பதக்கத்தை , ‘வில் மெடல் ஆப் வேர்ல்டு ரிக்கார்ட்ஸ்’ முதன்மை செயலர் எஸ். தஹ்மிதா பானு அறிவியல் ஆசிரியர் கே.பாலமுருகனிடம் வழங்கினார். பள்ளி ஆசிரியர்கள் அப்துல் காதர், சி.முத்துக்குமார், ஆசிரியைகள் எஸ்.அருளம்மாள், டி.நிர்மலா, எஸ்.பூங்கொடி, பெற்றோர் ஆசிரியர் சங்க ஆசிரியை நந்தினி பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் வில் மெடல்ஸ் நிறுவனர் கவிஞர் ஆ.கலைவாணி கூறுகையில்,‘ சாதனைகள் என்பது தனியார் அமைப்புகள், சுயநிதி கல்வி நிலையங்கள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. அரசு பள்ளி மாணாக்கர்களும் சாதிக்க பிறந்தவர்களே. அவர்களை சாதனையாளர்கள் என்பதை வெளியுலகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற என்ற பள்ளி, கல்லூரி கனா தற்போது நனவாகி வருகிறது. காந்தி நகர் நடுநிலைப்பள்ளி 6ம் வகுப்பு மாணவர் லோகேஸ்வரன், இதே பள்ளியில் பயிலும் 3ம் வகுப்பு மாணவர் லிங்கேஸ்வரன் ஆகியோர் நாணய சேகரிப்பு சாதனைக்கு ஏற்கனவே விருது வழங்கி கவுரவித்துள்ளோம். தேசிய மல்யுத்தத்தில் சாதனை செய்து சப்தமின்மிறிருந்த தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவி பூவினிதா மாரி ஆகியோர் சாதனையை வெளிக்கொண்டு வந்துள்ளோம். தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவி அனிதாவின் கடிகாரம் சேகரிப்பில் சாதனை ஆக., 15 சுதந்திர தினத்தன்று நிகழ்த்தப்பட உள்ளது. கிராமம், மாவட்டம், மாநிலம், தேசியம், உலகளாவிய சாதனை அடிப்படையில் முகவை ரிக்கார்ட்ஸ், வில் மெடல்ஸ் கிட்ஸ் ரிக்கார்ட்ஸ், வில் மெடல் நேஷனல் ரிக்கார்ட்ஸ், வில் மெடல் ஆப் வேர்ல்டு ரிக்கார்ட்ஸ் மூலம் வெளிக்கொண்டு வந்து சாதன விருது, பதக்கம் வழங்கி வருகிறோம்” என்றார்.
நிகழ்வின் இறுதியில் இந்நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்து அனைத்து உதவிகளையும் செய்த கீழை நியூஸ் நிர்வாத்திற்க பள்ளி நிர்வாகம் மற்றும் வில் மெடல் நிர்வாகம் சார்பாகவும் நன்றிகள் கூறப்பட்டது.
ஆர்.முருகன்(எம்ஆர்கேபி) – கீழை நியூஸ்.
1 comment
Thank you very much for this fluent and good news feed to keelai news!
Comments are closed.