12
மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா இல்லை என அரசு இணையதளத்தில் தவறான தகவல்களை ஊடகங்களிலும் பரவுவதைத் தடுக்க உடனடியாக நீக்க வேண்டும் எனஊடகவியலாளர், எழுத்தாளருமான கோமல் அன்பரசன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம்.
புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்திலும் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ள சூழலில், ‘இப்பகுதியில் யாருக்கும் பாதிப்பு இல்லை’ என்று தமிழக அரசு கொரோனாவுக்கு தொடங்கியுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள தவறான தகவலை நீக்க வேண்டும். இதன் மூலம் தனி மனித விலகலைக் கடைபிடிக்காமல் அலட்சியம் காட்டுகிற மயிலாடுதுறை மாவட்ட மக்களை நோய் தொற்றிலிருந்து காப்பாற்றுவதற்கும் உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.
மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டாலும் இப்போது வரை அரசு நிர்வாகத்தின் அடிப்படையில் நாகப்பட்டினம் மாவட்டத்தின் கீழ்தான் செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் அரசு வெளியிடும் அறிவிப்புகளிலும் புதிய மயிலாடுதுறை மாவட்ட பகுதியிலுள்ள கொரோனா நோய்தொற்று பாதிப்புகளை நாகப்பட்டினம் மாவட்ட கணக்கில்தான் அளித்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் மயிலாடுதுறை, திருவெண்காடு, புத்தூர் உள்ளிட்ட இடங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் நோய் தொற்று கண்டறியப்பட்டு, 7 பேர் உயர் மருத்துவ சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள். அறிகுறிகளுடன் உள்ள 30க்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், மயிலாடுதுறை நகரிலும் மற்ற ஊர்களிலும் கொரோனா கட்டுப்பாட்டுப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களை அரசு சார்பில் வரைபடங்களோடு விளக்கியிருக்கிறார்கள்.
ஆனால், இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு கொரோனாவுக்காக உருவாக்கியுள்ள சிறப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ‘மயிலாடுதுறை மாவட்ட பகுதியில் கொரோனா நோய்த்தொற்று இல்லை’ என்றும், மயிலாடுதுறை பச்சை வண்ண பகுதியாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதனால் புதிய மயிலாடுதுறை மாவட்ட பகுதியில் இருக்கிற மக்களுக்கு ஒருவித அலட்சியம் ஏற்பட்டு, தனிமனித விலகலைக் கடைபிடிக்காமல் நடந்து கொள்ள தொடங்கியிருக்கின்றனர்.
தமிழக அளவில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இத்தகைய நடவடிக்கைகளால் மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் ஆபத்து இருக்கிறது. எனவே உடனடியாக தமிழக அரசு இத்தகைய தவறான தகவல்கள் வெளியாவதைத் தடுக்க வேண்டும். இதுகுறித்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரும் உரிய விளக்கத்தையும் அறிவுறுத்தலையும் ஊடகங்களுக்கும் மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கும் வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். என்று, அக்கடிதத்தில்கோமல் அன்பரசன் தெரிவித்துள்ளார்.
இரா..யோகுதாஸ்,மயிலாடுதுறை,
You must be logged in to post a comment.