மத்திய பிரதேசத்தில் 16 அமைச்சர்கள் ராஜினாமா – கமல்நாத் தலைமையிலான அரசு தப்புமா?
மத்திய பிரதேசத்தில் 16 அமைச்சர்கள் கூண்டோடு பதவியை ராஜினாமா செய்துள்ளதால் முதலமைச்சர் கமல்நாத் தலைமையிலான அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில், பாஜக ஆட்சி அமைக்க வியூகங்கள் எடுத்து வருவதாக கூறப்படும் நிலையில், 6 அமைச்சர்கள் உள்ளிட்ட 19 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பெங்களூருவில் முகாமிட்டுள்ளனர். இது ஆளும் காங்கிரஸ் அரசுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது. இந்நிலையில், போபாலில் முதலமைச்சர் கமல்நாத் தலைமையில் ஆலோசானை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற 16 அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தனர்.
மாநில அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் கமல்நாத், மாநிலத்தில் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாகவும், ஆனால் அது நிறைவேறாது எனவும் கூறினார். காங்கிரஸ் அரசு மேல் மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை ராகுல் காந்தி அவசரமாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். மேலும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.