தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7ஆக அதிகரிப்பு..
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்த முதல் நபர் மதுரை அண்ணா நகரைச் சேர்ந்தவர். 54 வயதான அவருக்கு நோய்த் தொற்றால் ஈரோட்டில் சிகிச்சை பெற்று வரும் தாய்லாந்தைச் சேர்ந்த இரண்டு பேர் மூலம் கொரோனா வைரஸ் பரவியதாகக் கூறப்படுகிறது. இவர் கடந்த மாதம் 25ஆம் தேதி சிகிச்சை பலனின்றி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இரண்டாவதாக உயிரிழந்தவர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். டெல்லி மாநாட்டிற்குச் சென்று வந்த சிங்காரத்தோப்பு பகுதியைச் சேர்ந்த 51 வயது நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மூன்றாவதாக, தேனியில் கொரோனாவால் கணவன், மனைவி பாதிக்கப்பட்ட நிலையில் மனைவி மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார். 53 வயது மதிக்கத்தக்க அவருக்கு அவரது கணவர் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவியதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த முதியவர் கொரோனாவால் நான்காவதாக உயிரிழந்த நபர். இவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கடந்த 2ஆம் தேதி உயிரிழந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது.
ஐந்தாவதாக சென்னையைச் சேர்ந்த 60 வயது முதியவர் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆறாவதாக 57 வயது பெண்மணியும், ஏழாவதாக 64 வயது பெண்ணும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர்.
You must be logged in to post a comment.