மருந்துகள் அல்லது தடுப்பூசி மூலம் குறிவைக்கக்கூடிய கொரோனா வைரஸின் “பலவீனமான பகுதியை” விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் என்ற மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. சான் டியாகோவில் உள்ள ஸ்க்ரிப்ஸ் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கொரோனா வைரஸின் ஒரு குறிப்பிட்ட பலவீன பகுதியைக் கண்டுபிடித்ததாகக் கூறியுள்ளனர். நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும்போது, வைரசின் இந்த பகுதியை இலக்காகக் கொள்ளலாம் என்பது விஞ்ஞானிகள் கருத்து. பலவீனமான பகுதி என்பது, “அகில்லெஸ் ஹீல்” (Achilles Heel) என்று ஆராய்ச்சி குழுவின் உயிரியலாளர் இயன் வில்சன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் உடலில், மருந்துகளால் எளிதில் தாக்கப்படுவதற்கேற்ற ஒரு குறிப்பிட்ட பகுதியைத்தான், அகில்லெஸ் ஹீல் என்று அழைக்கிறார்கள் அறிவியலாளர்கள்.
சார்ஸ் சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவரின் உடலை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், அவரது உடல் சார்ஸ் நோய்க்கு எதிராக உருவாக்கியிருந்த ஒரு ஆன்டிபாடியை ஆய்வு செய்தபோது, அது சார்ஸ் வைரஸின் ஒரு குறிப்பிட்ட பகுதி வழியாக மருந்து உள்நுழைவதைக் கண்டறிந்தனர். சார்ஸ் வைரசை போன்றதுதான் இந்த வைரஸ் என்பதால், இரண்டுக்கும் ஒற்றுமையுள்ளதாம். அதேபோல் அந்த ஆன்டிபாடி கொரோனா வைரஸ் உடலில் எந்த பகுதியில் சென்றமர்கிறது என்பதையும் அந்த விஞ்ஞானிகள் கண்டறிந்தார்கள். சார்ஸ் கிருமி மீது சென்றமர்ந்தது போல் வலிமையாக அந்த ஆன்டிபாடி கொரோனா வைரஸ் மீது அமரவில்லையாம். ஆனால், எந்த பகுதி கொரோனா வைரஸின் உடலில் வலிமையற்றதாக இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க அது உதவியது. இந்த கண்டுபிடிப்பு, கொரோனா வைரஸின் உடலில் எந்த பகுதியை மருந்துகள் கொண்டு தாக்கலாம் என்பது குறித்து ஒரு தெளிவை ஏற்படுத்த உதவியுள்ளது.
குறிப்பிட்ட அந்த பகுதிதான் கொரோனா வைரஸின் பலவீனமான பகுதி’ என்றும் கூறலாம் என்கிறார் இயன் வில்சன். இந்த கண்டுபிடிப்பு, கொரோனா வைரஸின் உடல் அமைப்பைக் கண்டுபிடிக்கவும் உதவியுள்ளது. இதன் மூலம், கொரோனாவுக்கான தடுப்பூசியை வடிவமைக்கவும் அது உதவும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். சமீபத்திய சூழ்நிலை அறிக்கையின்படி, முந்தைய 24 மணி நேரத்தில் ஒரு லச்சம் பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், இதே காலத்தில் 8,000 பேர் இந்த நோயால் இறந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரே நாளில் 8,000 பேர் மரணம் என்பது இந்த கொரோனா வைரஸ் சிக்கல் உலகில் தோன்றியதில் இருந்து இதுவரை இல்லாத புதிய உச்சமாகும். உலகெங்கிலுமான பிராந்தியங்களிலும் 206 நாடுகளிலும் தற்போது 14,32,000 பேர் கொரொனா வைரஸ் நோயாளிகள் உள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக 82,000 பேர் மரணமடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
You must be logged in to post a comment.