இராமநாதபுரம் மாவட்டம் , பரமக்குடியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி சந்தைப்பகுதியில் ஊரக வளர்ச்சி முகமை மற்றும் நகராட்சி நிர்வாகம் ஒருங்கிணைந்து மேற்கொண்ட கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைக்கப்பட்டிருக்கும் தானியங்கி கிருமி நாசினி தெளிப்பு நடைபாதை மற்றும் கமுதி, முதுகுளத்தூர் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், பரமக்குடி தொகுதி எம்எல்ஏ ஆய்வு செய்தனர்.
ஆட்சியர் தெரிவித்ததாவது: கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 2 பேர், சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவரது உடல்நிலை சீராக உள்ளது . மாவட்டத்தில் 144 தடை உத்தரவு மீறல் தொடர்பாக இதுவரை 1,088 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், 1,352 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார்.
பார்த்திபனூர் சோதனைச்சாவடியில் பிற மாவட்டங்களிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரும் வாகனங்களை தணிக்கை செய்தல் மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை ஆய்வு செய்தல், கமுதி, முதுகுளத்தூர் பகுதிகளில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மூலம் கிருமி நாசினி தெளிப்பி பணியை பார்வையிட்டார்.
கமுதி அருகே நாராயணபுரம் நரிக்குறவ மக்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் என்.சதன்பிரபாகர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.ஏ.முனியசாமி, பரமக்குடி சுகாதாரத் துறை துணை இயக்குநர் மரு.பி.இந்திரா, காவல் துணை கண்காணிப்பாளர் ஆர்.சங்கர், பரமக்குடி நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
You must be logged in to post a comment.