இராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போதைய வறட்சி சூழ்நிலையில் மக்கள் சிரமப்படாத வகையில் சீரான குடிநீர் விநியோகிக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ராமநாதபுரம் ஒன்றியம் பேராவூர் கிராமத்தில் குடிநீர் விநியோகம் குறித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆய்வு செய்தார்.
பேராவூர் கிராமத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக வறட்சி நிதி திட்டம் 2018-19ன் கீழ் ரூ.4.50 லட்சத்தில் திறந்த வெளி கிணறு பயன்பாடு குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார். அப்போது, மிகவும் பயனுள்ளதாக உள்ள இந்த கிணற்றின் சுற்றுப் பகுதியில் மணல் சரிவாக இருப்பதால் தண்ணீர் இறைக்க சிரமப்படுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து கிணற்றின் சுற்றுப்பகுதியில் 2 மீ அகலத்தில் மணல் தளம் அமைக்கவும் கிணற்றிற்கு வந்து செல்லும் பாதையை சீரமைக்க ஊராட்சி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். பேராவூர் கிராமத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் விநியோகம் தொடர்பாக கிராம மக்களிடம் கேட்டறிந்தார். மக்கள் நலனை கருதி சீரான கால இடைவெளியில் காவிரி குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவுறுத்தினார். மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பட்டணம்காத்தான் ஊராட்சியில் தமிழ்நாடு கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.55.09 லட்சம் மதிப்பில் தேசிய நெடுஞ்சாலை 49-லிருந்து பிருந்தாவன் கார்டன் வரையில் அமைக்கப்பட்டு வரும் தார்சாலை பணிகளின் தரம் குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கேசவதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாண்டி, சந்திரமோகன், உதவி பொறியாளர்கள் ஹேமலதா, அருண், ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
You must be logged in to post a comment.