கீழக்கரை நகரில் கடந்த 1972 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட கீழக்கரை கிளை நூலகம் முதலில் கிழக்குத் தெரு பகுதியில் அமைந்திருந்தது. பின்னர் முஸ்லீம் பஜாரில், கடந்த 2010 ஆம் ஆண்டு வரை அரசு பொது நூலகம் இயங்கி வந்தது. இது அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில், ஊரின் மத்தியில் பிரதானமான இடத்தில் இருந்தது.
பழைய படம் – அன்பு நகரில் செயல்பட்ட போது கிளை நூலகத்தின் அவல நிலை
அதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், அரசு தேர்வுகளுக்கு முயற்சிப்போர், பொதுமக்கள் என அனைவரும் சிறப்பாக பயனடைந்து வந்தனர். ஆனால் கடந்த 2011 ஆம் ஆண்டு சம்பந்தப்பட்ட கட்டிடத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, பல்லாயிரக்கணக்கான அரிய புத்தகங்களோடு இடமாற்றம் செய்யப்பட்ட இந்த அரசு நூலகம், அன்பு நகர் புறநகர் பகுதியில் ஐந்தாண்டு காலம் செயல்பட்டது.
அங்கு இட நெருக்கடி காரணமாக, புத்தகங்கள் வைக்க பயன்படுத்தும் பீரோக்களும், ராக்கைகளும் வீதியிலேயே கிடத்தப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி ஏராளமான புத்தகங்கள் வைக்க போதிய வசதியின்றி கட்டு கட்டாக சமயலறைக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து நாம் ஏற்கனவே பல்வேறு செய்திகளை வெளியிட்டிருந்தோம்.
பழைய படம் – அன்பு நகரில் செயல்பட்ட போது கிளை நூலகத்தின் அவல நிலை
அங்கு வாசிப்புப் பகுதியில் 6 வாசகர்கள் மட்டுமே அமர்ந்து வாசிக்கக்கூடியதான ஆசன வசதிகள் மட்டுமே இருந்தது. மேலும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிப்புகளுக்குத் தேவையான தகவல்களடங்கிய நூல்கள் உட்பட, பல அரிய நூல்களைக் கொண்டுள்ள இந்நூலகத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக புத்தகங்களை பார்வைக்கு வைக்க போதிய இட வசதி இல்லை.
அதனை தொடர்ந்து நகரின் பிரதான பகுதிக்கு கொண்டு வர சமூக ஆர்வலர் பலர் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தனர். அதன் அடிப்படையில் தற்போது VAO அலுவலகம் அருகே ஒரு தனியார் கட்டிடத்தில் இரண்டாம் தளத்தில் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அடிக்கடி இடம் பெயரும் கீழக்கரை கிளை நூலகம் குறித்து செய்தி ஊடகங்களிலும் செய்தி வெளியாகியது.
நன்றி : தினமலர் நாள் :24.01.2017
இது குறித்து கீழக்கரை மக்கள் களத்தின் ஒருங்கிணைப்பாளர். சட்டப் போராளி அப்துர் ரஹ்மான் கூறுகையில் ”பொதுமக்களும், மாணவர்களும் பயன்படுத்தும் வகையில் இந்த கிளை நூலகம் ஏற்கனவே கடந்த காலங்களில் இருந்தவாறு நகரின் மைய பகுதியில் அமைக்க வலியுறுத்தி கீழக்கரை சட்டப் போராளிகள் தளம் சார்பாக 60 க்கும் மேற்பட்ட மனுக்களை முதலமைச்சரின் தனிப் பிரிவு வலை தளத்திற்கு அனுப்பி உரிய பதில் பெறப்பட்டுள்ளது.
அதே போல் மக்கள் நல பாதுகாப்புக் கழகம் சார்பாக மாவட்ட ஆட்சியரை நேரடியாக சந்தித்து மக்கள் குறை தீர்க்கும் நாளில் மனு கொடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் மாவட்ட நூலகர் காளிதாஸிடம் இருந்து தகுந்த பதில் பெறப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக நகராட்சி ஆணையாளர் சந்திரசேகரிடமும் இது குறித்து மனு கொடுக்கப்பட்டு நகராட்சி சார்பாக நூலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகிறது.
அதே வேளையில் நூலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்டும் வரை நகரின் மத்திய பகுதியில் நூலகத்தை இடமாற்றம் செய்வதற்கான அனைத்து பணிகளும் சட்டப் போராளிகள் மற்றும் சமூக ஆர்வலர்களால் மிக துரிதமாக செய்யப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
இறைவன் நாடினால் இன்னும் இரு வாரங்களில் கிளை நூலகம் நகரின் மத்திய பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படும்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் மனு
சட்டப் போராளிகளின் மனுவுக்கு முதலமைச்சரின் தனிப் பிரிவு பதில்
You must be logged in to post a comment.