ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நாயை இருசக்கர வாகனத்தை கொண்டு ஏற்றியதால் இருதரப்பு மோதலாக வெடித்து 3 பேர் காயம். மோதலுக்கு காரணமான 3 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே துலுக்கன் குளம் பகுதியில் அனைத்து சமுதாயம் சார்ந்த 1500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு பிரிவினரை சேர்ந்த 2 பேர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மற்றொரு தரப்பினர் வளர்த்து வந்த நாய் ஒன்று குறுக்கே விழுந்தது.இருசக்கர வாகனம் மீது மோதிய நாய் படுகாயம் அடைந்ததால் ஆத்திரம் அடைந்த நாய் வளர்த்தவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுடன் சண்டையிட்டனர்.
இந்த சம்பவம் பிரிவினரிடையே வாய் சண்டையாகி பின்பு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இந்த கைகலப்பில் ஜெயக்குமார், உதயகுமார்,உமா மகேஸ்வரி ஆகிய 3 பேரும் படுகாயமடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதலுக்கு காரணமான வீரணன், ரஞ்சித்குமார், கருப்பசாமி, ஆகிய 3 பேரை வன்னியம்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர்.
இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள், ஏ,டி.எஸ்.பி மாரிச்சாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இரு தரப்பினரிடையே வன்னியம்பட்டி காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.