போதை பொருள் விவகாரத்தில் தேவைப்பட்டால் மறு விசாரணைக்கு ஆஜராகவும் வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்ட நிலையில், விரைவில் ஆஜராகிறேன் என அமீர் பதில் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த கடத்தலில் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் முக்கிய பங்காற்றியது தெரிய வந்தது.
ஜாபர் சாதிக்கை போதைப் பொருள் தடுப்புத் துறையினர் (என்.சி.பி.) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, ஜாபக் சாதிக்கின் கூட்டாளியான திருச்சியை சேர்ந்த சதா கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமீர் ஆஜராகுமாறு மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியது. அந்த சம்மனில், டெல்லி ஆர்.கே. புரத்தில் உள்ள தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு தலைமையகத்தில் ஏப்ரல் 02 ஆம் தேதி காலை 10 மணி அளவில் நேரில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக இயக்குநர் அமீர் நேற்று (ஏப். 2) ஆஜரானார். அவரிடம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர்களுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி? என அமீரிடம் என்சிபி அதிகாரிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதிலை விடியோ பதிவுசெய்த அதிகாரிகள், ஜாபரின் வாக்குமூலத்துடன் ஒப்பிட்டு பார்க்க உள்ளனர். அதன் பின்னர், அவரின் போனை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தேவைப்பட்டால் மறு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அதற்கு 2-3 நாட்களில் ஆஜராகிறேன் என அமீர் பதில் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது.
You must be logged in to post a comment.