பழனியில் ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் கொள்ளை; போலீசார் விசாரணை..
பழனி அருகே புஷ்பத்தூரை சேர்ந்தவர் குமாரசாமி. இவரின் மனைவி விஜயலட்சுமி (வயது 48). குமாரசாமி அந்த பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வருகிறார்.
குமாரசாமி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார்
விஜயலட்சுமியும் சொந்த வேலை காரணமாக மடத்துக்குளம் சென்றுவிட்டார்.
இந்நிலையில் மதியம் விஜயலட்சுமி வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 7 பவுன் நகை, ஒரு லட்சம் ரூபாய் திருடு போயிருந்தது. திருட்டு பற்றி அவர் சாமிநாதபுரம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். அதில், ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதேபோல் பழனி ஸ்ரீநகரை சேர்ந்த கருப்புசாமி (45) டிராக்டர் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். இவரின் மனைவி நித்யா. நேற்று காலை இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். மாலையில் கருப்புசாமி, வீட்டுக்கு வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. வீட்டு பீரோவில் இருந்த 4 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். தகவலறிந்த பழனி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். விசாரணையில் கருப்புசாமி வீட்டில் மர்ம நபர்கள் நகையை திருடியதும், அருகிலுள்ள மற்றொரு வீட்டில் திருட முயற்சி செய்ததும் தெரியவந்தது. பின்னர் திருட்டு சம்பவம் தொடர்பாக பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பழனி அருகே ஒரே நாளில் 2 வீடுகளில் திருட்டு நடந்தது மக்களிடையே பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
You must be logged in to post a comment.