பழனியருகே பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்டுள்ள கழிப்பறையை திறக்கக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ளது ஆயக்குடி பேரூராட்சி இங்கு ஏழாவது வார்டு பகுதியில் அமைந்துள்ளது பெரும்பாறை காலனி இங்கு வசிக்கும் வெற்றிச்செல்வன் சண்முகவள்ளி ஆகியோரின் பதினான்கு வயது மகள் திறந்தவெளி கழிவறைக்கு சென்றபோது இரண்டு இளைஞர்கள் கற்பழிக்க முயன்றதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வரும் நிலையில் பெரும்பாறை காலனியை ஒட்டியுள்ள பகுதியில் ஆயக்குடி பேரூராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள கழிவறை பூட்டப்பட்டு பயன்பாடின்றி உள்ளதாலேயே சிறுமியை பலாத்காரம் செய்யும் முயற்சி நடைபெற்றதாகக் கூறி பொதுமக்கள் ஆயக்குடி பேரூராட்சியை முற்றுகையிட முயன்றனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆயக்குடி போலீசார் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் அனைவரும் பெரும்பாறை காலனிக்கு சென்று அப்பகுதி பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் தெரிவித்ததாவது, கடந்த 2015ம் ஆண்டு கழிவறை கட்டி பயன்பாட்டிற்கு கொண்டாவரப்பட்டது கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தண்ணீர் இல்லை என்று கூறி திடீரென கழிவறை மூடப்பட்டது கழிவறை பூட்டப்பட்டதால் அனைவரும் திறந்தவெளி கழிப்பிடத்தையே பயன்படுத்தி வந்ததாகவும், பலமுறை கழிவறையை திறக்க வேண்டுமென்று பேரூராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
அதிகாரிகளின் அலட்சியத்தாலேயே சிறுமி கற்பழிக்கும் விவகாரம் நடந்ததாகவும் குற்றம் சாட்டினர் இதனையடுத்து உடனடியாக தண்ணீர் வசதி ஏற்பாடு செய்து பூட்டப்பட்டுள்ள கழிப்பறைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதனையடுத்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
You must be logged in to post a comment.