ஆலிவர் ஹெவிசைடு (Oliver Heaviside) மே 18, 1850ல் எவிசைடு இலண்டனிலுள்ள கேம்டென் டவுனில் பிறந்தவர். இவரது தந்தை திறன்மிக்க மரச் செதுக்குநர். இவரது அம்மான் சார்லசு வீட்சுடோன் தந்தியை கண்டுபிடித்தவர்களில் ஒருவர். சிறுவயதில் செங்காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் எவிசைடுக்கு, குறிப்பாக பிந்தைய நாட்களில், கேள்விக் குறைபாடு இருந்தது. எவிசைடு கேம்டென் அவுசு பள்ளியில் 16 அகவை வரை படித்தார். பின்னர் 18 வரை வீட்டிலேயே தமது கல்வியைத் தொடர்ந்தார். தந்திச் செயலராக வேலை கிடைத்து சில காலம் டென்மார்க்கில் பணிபுரிந்தார். 1871ல் இங்கிலாந்திற்கும் டென்மார்கிற்கும் இடையேயான தந்தி வடத்தில் இருந்த குறைபாட்டைக் கண்டறிந்தார். 1873ல் மக்சுவெல்லின் மின்சாரம், காந்தவியல் குறித்த ஆய்வுக் கட்டுரை என்ற நூலின் முதற்பதிப்பை வாங்கினார். இந்த நூல் எவிசைடுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. இதனடிப்படையில் பல கணித கருத்துருக்களை உருவாக்கினார். இச்சமயம் அவர் நியூ காசிலில் வாழ்ந்து வந்தார்.1875ல் இலண்டன் திரும்பிய எவிசைடு தமது பல கண்டுபிடிப்புகளை நூலாக எழுதினார். ஆனால் இவரது படைப்புக்களை எவரும் அச்சிட முன்வரவில்லை. இவரது ஆக்கங்கள் புரிந்துகொள்ளக் கடினமாக இருந்தன. மாறுதிசை மின்னோட்டம் பயன்பாட்டிற்கு வருவதற்கு 15 ஆண்டுகள் முன்னமேயே அதனைப் பகுப்பாய்வு செய்துள்ளார். இவர் மின்சுற்றுக்களை ஆய்வதற்கு சிக்கலெண்களை பயன்படுத்தியவரும், வகையீட்டுச் சமன்பாடுகளை தீர்க்க கணித நெறிமுறைகளைக் (இவை பின்னாள் இலப்பிளாசு மாற்றுக்களுக்கு இணையானவை) கண்டறிந்தவரும், மாக்ஸ்வெல்லின் களச் சமன்பாடுகளை மின்சாரம், காந்தவியல் விசைகளையும் ஆற்றல் பாயத்தையும் கொண்டு சீரமைத்தவரும் தன்னிச்சையாக திசையன் பகுப்பாய்வை வடிவமைத்தவர்களில் ஒருவரும் ஆவார்.தனது வாழ்நாளின் பெரும்பகுதியும் அறிவியல் சமூகத்துடன் ஒப்பாது இருந்தபோதும் அறிவியல் மற்றும் கணிதத்தின் அணுகுமுறையில் பெரும் மாற்றத்தை உண்டாக்கியவர். அயனி மண்டலத்தின் ஒருபகுதி இவரது பெயரையும் தாங்கியவண்ணம் எவிசைடு-கென்னலி அடுக்கு எனப் பெயரிடப்பட்டுள்ளது. இவரது குணப்போக்கு மிகவும் கிறுக்குத்தனமாக இருந்தது. தமது பெற்றோருடன் பைங்டன் சென்ற எவிசைடு அவர்களது மறைவிற்குப் பிறகு நியூடன் அப்பாட்டிலும் பின்னர் டோர்கேயில் 1908ல் தம் மரணம் வரையும் வாழ்ந்திருந்தார். கடைசிவரை இவர் திருமணம் புரியாதிருந்தார். ஆலிவர் ஹெவிசைடு பிப்ரவரி 3,1925ல் தனது 74வது அகவையில் இங்கிலாந்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். Source By: Wikipedia. தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.
38
previous post
You must be logged in to post a comment.