பெர்டினாண்டு பிரடரிக் ஆன்றி முவாசான் (Ferdinand Frederick Henri Moissan) செப்டம்பர் 28, 1852ல் பாரிசு, பிரான்சில் கிழக்குத் இரயில்வே துறையில் பணிபுரிந்த பொறுப்பாளர் ஒருவருக்கு மகனாகப் பிறந்தார்.பிறந்தார். 1864ல் மொ (Meaux) என்னும் ஊருக்கு இடம்பெயர்ந்து சென்று, அங்குப் பள்ளியில் கல்வி பெற்றார். ஆனால் பல்கலைக்கழகத்தில் சேர அனுமதி பெறும் தகுதிச் சான்றிதழ் (“grade universitaire” ) பெறாமலே பள்ளியில் இருந்து சென்றுவிட்டார். பின்னர் பாரிசில் ஒரு வேதியியலாளராகப் பணிபுரியத்தொடங்கினார். அங்கு ஆர்சனிக்கு (arsenic) கலந்ததைக் குடித்து உயிர்போகும் நிலையில் இருந்த ஒருவரைக் காப்பாற்றினார். அதன்பின் வேதியியலை முறையாகப் பயில முடிவு செய்து எடுமான் ஃவிரெமி (Edmond Frémy) அவர்களின் செய்முறைச் சாலையில் சேர்ந்தார். அதன் பின் பியர் பால் துரியான் (Pierre Paul Dehérain) அவர்களின் செய்முறைச்சாலையில் சேர்ந்தார். அங்கு துரியான் அவர்களின் வலியுறுத்தலால் கல்விசார் பணியைப் பின் தொடர ஒப்புக்கொண்டார்.பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான தகுதி பெறும் பாக்குலோரியா (baccalauréat) என அழைக்கப்பட்ட இளநிலை பட்டத்தைப் பெறுவதில் முதலில் தோல்வி அடைந்து, பின்னர் 1874ல் வெற்றி பெற்றார். அவர் பாரிசில் இருந்த பொழுது வேதியியலாளர் அலெக்ஃசாந்திரே லியோன் எட்டார் (Alexandre Léon Étard) என்னும் வேதியலாளரோடும், வாசுக்கு (Vasque) என்னும் செடியியலாளருடனும் நண்பராக இருந்தார். முவாசான் முதன் முதலாக 1874ல் தாவரத்தில் கார்பன்-டை-ஆக்சைடும், ஆக்சிசனும் நிகழ்த்தும் மாற்றங்களைப் பற்றி அறிவியல் கட்டுரை ஒன்றை, துரியானுடன் சேர்ந்து எழுதினார். அதன் பின்னர் தாவரவியலை விட்டுவிட்டு, கரிமமற்ற வேதியியல் துறையில் ஆய்வு செய்யத் தொடங்கினார். குறிப்பாக தீப்பிடிக்கும் இரும்பு பற்றிய வேதியியலில் ஈடுபட்டார். இவருடைய கருத்துகளை அக்காலத்தில் முன்னணியில் இருந்த கரிமமற்ற வேதியியல் அறிவியலாளர்கள் இருவர் வரவேறனர். இவர்கள் ஆன்றி துவ்யெல் (Henri Etienne Sainte-Claire Deville) என்பாரும் துபாய் (Debray) என்பாரும் ஆவர். முசாசான் 1880 இல் முனைவர் பட்டம் பெற்ற பின்னர் அவருடைய நண்பர் இலாண்டுறீன் (Landrine) அவருக்கு பகுப்பாய்வு வேதியியலில் பணிபுரிய வாய்ப்புத் தந்தார்.முவாசான் 1882ல் இலியோனீ இலியுகோன் (Leonie Lugan) என்பாரை மணந்தார். இவர்களுக்கு 1885ல் ஒரு மகன் பிறந்தார். 1880களில் இவர் ஃவுளூரின் ஆய்விலும், அதனைப் பெரிய அளவில் விளைவிப்பதிலும் ஆழ்ந்து இருந்தார். ஆனால் இவருக்கான தனி ஆய்வகம் ஏதும் இல்லை. அங்கு அருகில் இருந்த பற்பல ஆய்வகங்களைப் பயன்படுத்தினார். அங்கே இவருக்கு 90 புன்சென் மின்கலங்கள் (Bunsen cell) கிடைத்தன. இவற்றை இணைத்து உருகிய ஆர்சனிக்கு டிரைக்குளோரைடு மின்பகுப்பாய்வு செய்யும் பொழுது, அங்கே வெளிப்பட்ட வளிமத்தைக் கூர்ந்து அறிந்தார். இவ்வளிமம், மீண்டும் ஆர்சனிக்கு டிரைக்குளோரைடால் உள்வாங்கப்பெற்றது. பின்னர் ஐதரச புளூரைடு மின்பகுப்பாய்வு செய்த பொழுது ஜூன் 26, 1886 அன்று புளூரின் வளிமம் கிடைத்தது. உண்மையை உறுதி செய்யும் முகமாக, பிரான்சிய அறிவியல் உயர்கல்வி மன்றம் (French academy of science) மூன்று பேரை, மார்சிலென் பெர்த்திலோ (Marcellin Berthelot), ஆன்றி துபாய், எடுமான் ஃவிரெமி ஆகியோரை, அவர்களின் சார்பாளர்களாக அனுப்பியது.முவாசானால் மீண்டும் அந்த விளைவைச் செய்து காட்ட இயலவில்லை, காரணம் ஐதரச புளூரைடில், முன்பு செய்த ஆய்வில் கலந்திருந்தவாறு சிறிதளவு பொட்டாசிய புளூரைடு கலந்து இருக்கவில்லை. இதனை பகுத்தறிந்து, திருத்திப் பின்னர் பலமுறை செய்து காட்டினார். இதற்குப் பரிசாக 10,000 பிரான்சிய வெள்ளியாகிய “பிராங்கு” தந்தனர். அடுத்து வந்த ஆண்டுகளில், அதாவது 1891 ஆம் ஆண்டு வரை, இவர் புளூரின் வேதியியல் ஆய்வில் ஆழ்ந்து இருந்தார். இவர், புளூரின் கூறாக உள்ள பல வேதியியல் மூலக்கூறுகளைக் கண்டுபிடித்தார். பால் இலெபோ (Paul Lebeau) என்பவரோடு சேர்ந்து 1901ல் கந்தக ஃகெக்சாபுளூரைடு (SF6) கண்டுபிடித்தார். இவருடைய ஆய்வின் பயனாய் போரான், செயற்கை வைரம் முதலான்வற்றைப் விளைவிப்பதில் முக்கிய முன்னேற்றங்கள் நடந்தன. மின்சாரத்தால் சூடாக்கப்பட்ட அடுப்புகள் 3500°C வரை வெப்பநிலை எய்தும்படியாக செய்ய முடிந்தது. இதற்காக 80 வோல்ட்டு அழுத்தத்தில் 2200 ஆம்பியர் மின்னோட்டம் பாய்ச்ச வேண்டி இருந்தது.பெர்டினாண்டு புளோரின் வளிமத்தைப் பிற சேர்மங்களில் இருந்து பகுத்து பிரித்தெடுத்துக் கண்டுபிடித்தார். இதற்காக இவருக்கு 1906 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. பெர்டினாண்டு பிரடரிக் ஆன்றி முவாசான் பிப்ரவரி 20, 1907ல் தனது 54வது அகவையில் பாரிசு, பிரான்சில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உலக செய்திகள்
கோள்களின் அகச்சிவப்புக்கதிர் கதிர் வானியலின் முன்னோடி ஜெரால்டு ஜெர்ரி நியூகெபௌவேர் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 26, 2014).
ஜெரால்டு ஜெர்ரி நியூகெபௌவேர் (Gerald Gerry Neugebauer) செப்டம்பர் 3, 1932ல் ஜெர்மனி குடியரசில் கோட்டிங்கனில் பிறந்தார். இவரது தந்தையார் ஆஸ்த்திரிய அமெரிக்க கணிதவியலாளரும் அறிவியல் வரலாற்றாசிரியரும் ஆகிய ஆட்டோ ந்யுகெபவுவேர் ஆவார். தாயார் கிரேட்டே பிரக் ஆவார். தன் ஏழாம் அகவையில் அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்த இவர் கார்னெல் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் தன் இளவல் பட்டம் 1954ல் பெற்றார். 1960ல் இயற்பியலில் தன் முனைவர் பட்ட்த்தை கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் பெற்றார். இவரது முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பு இருநீரகத்தின் நேர்மின்னணுகளின் நேர், எதிர் ஒளிநகல்கள் எடுத்தலாகும். இவர் அமெரிக்கப் படையில் பணிபுரிந்தபோது தாரைச் செலுத்த ஆய்வகத்தில் தங்கினார். அங்கே 1952 வரை அமெரிக்கப் படைதுறைக்காக பணிபுரிந்தார். 1952ல் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் புல உறுப்பினராக, அதாவது உதவிப் பேராசிரியராகச் சேர்ந்து 1970ல் முழுநிலைப் பேராசிரியரானார்.1985ல் ஓவார்டு அகுசு பேராசிரியாக அமர்த்தப்பட்டார். 1988ல் இயற்பியல், கணிதவியல், வானியல் பிரிவின் தலைவரும் ஆனார். இவர் அண்மையில் இராபர்ட் ஆந்திரூசு மில்லிகன் தகைமை இயற்பியல் பேராசிரியர் ஆனார். இவர் 1980 முதல் 1994 வரை பலோமார் வான்காணக இயக்குநராக விளங்கினார். ஜெரால்டு அகச்சிவப்புக்கதிர் வானியலின் முன்னோடியாக உலகமெலாம் அறியப்பட்டுள்ளார். இவர் கோள்களின் அகச்சிவப்புக்கதிர் ஆய்வில் பெரும்பங்கு வகித்துள்ளார். இதோடு இவர் அகச்சிவப்புக்கதிர் வானியல் செயற்கைக்கோளையும் (IRAS) அகச்சிவப்புக்கதிர் செயல்முறை, பகுப்பாய்வு மையத்தையும் (IAPC) பயன்படுத்தி புவியிலும் விண்வெளியிலும் விண்மீன்களையும் பால்வழியையும் பிற பால்வெளிகளையும் அகச்சிவப்புக்கதிர் ஆய்வுகள் வழியாக மவுண்ட் வில்சன் பலோமார் பணியாளருடன் இணைந்து நோக்கீடுகள் செய்து, வான்வெளியில் நிலவும் பல்லாயிரக் கணக்கான அகச்சிவப்புக்கதிர் வாயிகளைக் கண்டுபிடித்தார். மேலும் முதன்முதலாக பால்வெளி மையத்தின் அகச்சிவப்புக்கதிர் காட்சியையும் வெளிப்படுத்தினார்.ஜெரால்டு, இராபர்ட் பி.இலைட்டனுடன் இணைந்து இருமைக்ரான் வானளக்கையை முடித்தார். இதுதான் முதல் வானின் அகச்சிவப்புக்கதிர் அலக்கையாகும். இந்த அலக்கை வழியாக 5000க்கும் மேற்பட்ட அகச்சிவப்புக்கதிர் வாயிகளின் அட்டவணை உருவாக்கப்பட்டது. இவர் எரிக் பெக்லினுடன் இணைந்து பெக்லிந்நியூகெபௌவேர் வான்பொருளைக் கண்டுபிடித்தார். இது ஓரியான் ஒண்முகிலில் உள்ள உயர்செறிவான அகச்சிவப்புக்கதிரை உமிழும் வான்பொருள் ஆகும். இது 10 மைக்ரான் அலைநீளத்தினும் குறைந்த கதிர்வீச்சுப் பொருள்களிலேயே மிகப்பொலிவான பெரும்பொருளாகும். இவர் அவாயில் உள்ள கெக் வான்காணக வடிவமைப்பிலும் கட்டுமானத்திலும் பெரும்பாத்திர்ம் வகித்தார். இவர் இரண்டு நாசா அறிவியல் சாதனைப் பதக்கங்களை 1972 இலும் 1984 இலும் பெற்றார். இவர் 1985 இல் அமெரிக்க வான், விண்வெளி ஊர்தியியல் நிறுவனத்தின் விண்வெளி அறிவியல் விருதைப் பெற்றார். இரிச்மியர் விரிவுரை விருதையும் 1985ல் பெற்றுள்ளார். 1986ல் இரம்போர்டு பரிசையும் 1996ல்என்றி நோரிசு இரசல் விரிவுரைத் தகைமையையும், 1998ல் எர்ழ்செல் பதக்கத்தையும் 2010ல் புரூசு பதக்கத்தையும் பெற்றார்.கலிபோர்னியா அறிவியல், தொழிலக அருங்காட்சியகம் இவரை 1986 ஆம் ஆண்டின் கலிபோர்னியா அறிவியலாளராக அறிவித்தது. இவர் தேசிய அறிவியல் கல்விக்கழகத்துக்கும் அமெரிக்க மெய்யியல் கழகத்துக்கும் அமெரிக்க கலை, அறிவியல் கல்விக்கழகத்துக்கும் அரசு வானியல் கழகத்துக்கும் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். நியூகெபவுவேர் புவி இயற்பியலாளரான மார்சியா நியூகெபவுவேரை மணந்துகொண்டார். மார்சியா தாரைச் செலுத்த ஆய்வகத்தில் பணிபுரிந்த சூரியக் காற்று ஆய்வ்யின் முன்னோடியாவார். இவர்கள் அரிசோனாவில் உள்ல தக்சனில் வாழ்ந்தனர். அகச்சிவப்புக் கதிர் வானியலின் முன்னோடி ஆய்வால் பெயர் பெற்ற ஜெரால்டு ஜெர்ரி நியூகெபௌவேர் செப்டம்பர் 26, 2014ல் தனது 82வது அகவையில் தக்சனில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஒளியின் வேகத்தை முதலில் கண்டறிந்த டென்மார்க் வானியலாளர் ஓலி கிறிஸ்டியன்சென் ரோமர் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 25, 1644).
ஓலி கிறிஸ்டியன்சென் ரோமர் (Ole Christensen Romer) செப்டம்பர் 25, 1644ல் ஆர்ஹஸ், டென்மார்க்கில் வணிகராகவிருந்த கிறிஸ்டென் பெடர்சன்னுக்கும் அன்னா ஓலுஃப்சுதத்தர் இசுடார்மிற்கும் மகனாகப் பிறந்தார். கிறிஸ்டென் பெடெர்சன் தமதுப் பெயரைக் கொண்ட மற்றவர்களிடமிருந்து தம்மை பிரித்துக்காட்ட ரோமர் என்ற பெயரை இணைத்துக்கொண்டார். ரோமர் எனில் டேனிய தீவான ரோமாவைச் சேர்ந்தவர் என்ற பொருளாகும். 1662ல் ஓலி ரோமர் மெட்றிக் படிப்பை முடிக்கும்வரையிலான வாழ்க்கைப்பதிவுகள் கிடைக்கப்பெறவில்லை. ஐசுலாந்து படிகத்தினால் (கால்சைட்டு) ஏற்படும் இரட்டை ஒளிவிலகலை ரோமர் கண்டறிந்ததை கோபனாவன் பல்கலைக்கழகத்தில் இவரது வழிகாட்டியாக இருந்த ராசுமசு பார்த்தோலின் 1668ல் பதிப்பித்தார். இதனையடுத்து பார்த்தோலின் டைக்கோ பிராவின் வானியல் பதிவுகளைக் கொண்டு கணிதத்தையும் வானியலையும் கற்க ரோமருக்கு உதவினார்.
ரோமருக்கு பிரெஞ்சு அரசின் வேலை கிடைத்தது. லூயி XIV மன்னர் இளவரசருக்கு ஆசிரியராக நியமித்தார். மேலும் ரோமர் வெர்சாய் அரண்மனையின் அழகான நீர்த்தாரைகளை வடிவமைப்பதிலும் பங்கேற்றார். 1681ல் ரோமர் டென்மார்க்கிற்கு திரும்பினார். கோபனாவன் பல்கலைக்கழகத்தில் வானியல் பேராசிரியராகப் பணியாற்றினார். அதே ஆண்டில் தமது வழிகாட்டி பார்த்தோலினின் மகள், ஆன் மாரி பார்தோலினைத் திருமணம் செய்துகொண்டார். வானியல் பார்வையாளராக துடிப்பாக செயலாற்றினார். பல்கலைக்கழகத்தில் இருந்த ருண்டெடாம், வட்டக் கோபுரத்திலிருந்த ஆய்வகத்திலிருந்தும் வீட்டிலிருந்தும் தமது கவனிப்புகளை தொடர்ந்தார். தமக்கான பொறிகளை தாமே வடிவமைத்து உருவாக்கிக்கொண்டார். ஆனால், அவரது குறிப்புகள் யாவும் 1728ஆம் ஆண்டின் கோபனாவன் தீவிபத்தில் அழிந்துவிட்டன. இருப்பினும் அவரது முன்னாள் உதவியாளரான பெடர் ஹொர்ரெபோ இவற்றை விவரித்து எழுதினார்.
அரசவையில் கணிதவியலாளராக இருந்ததால் மே 1, 1683ல் டென்மார்க்கில் முதன்முறையாக எடைகளுக்கும் அளவுகளுக்கும் தேசிய அமைப்பொன்றை நிறுவினார். துவக்கத்தில் ரைன் அடி என்ற அளவை அடிப்படையாகக் கொண்டிருந்தபோதும் 1698ல் மேலும் துல்லியமான தேசிய சீர்தரங்கள் கடைபிடிக்கப்பட்டன. வானியல் மாறிலிகளைக் கொண்டு அளவுகளுக்கான வரையறைகளை நிறுவ விரும்பினார். இது அவரது மறைவிற்கு பின்னரே நடைமுறைக்கு வந்தது. டேனிய மைலை வரையறுத்ததும் இவரே. 24,000 டேனிய அடிகள் ஒரு மைலாகும் (கிட்டத்தட்ட 7,532 மீ). 1700ல் ரோமர் டென்மார்க்கு, நோர்வேயில் கிரெகொரியின் நாட்காட்டியை அறிமுகப்படுத்த மன்னரின் ஒப்புதலைப் பெற்றார். முன்னதாக இதனை செயல்படுத்த நூறாண்டுகளுக்கும் மேலாக டைக்கோ பிரா எடுத்த முயற்சிகள் வீணாகியிருந்தன. ரோமர் முதலில் இயற்றப்பட்ட வெப்பநிலை ஒப்பளவுகளில் ஒன்றை வடிவமைத்தவரும் ஆவார். 1708ல் இவரைச் சந்தித்த டேனியல் பாரன்ஃகைட் இவர் உருவாக்கியிருந்த ரோமர் வெப்பளவுமானியை மேம்படுத்தி தற்போது சில நாடுகளில் புழக்கத்தில் உள்ள பாரன்ஃகைட் வெப்ப ஒப்பளவை உருவாக்கினார்.
டென்மார்க்கின் பல நகரங்களிலும் பல கடற்வழி நடத்தல் பள்ளிகளை நிறுவினார். 1705ல் கோபனாவன் காவல்துறையின் இரண்டாவது தலைவராக நியமிக்கப்பட்டார். இப்பதவியில் தனது முதல் செயற்பாடாக காவல்துறையை முழுவதுமாக கலைத்தார். காவல்துறையின் தன்னம்பிக்கை மிகவும் குன்றியிருந்ததாகக் கருதினார். கோபனாவனில் தெருவிளக்குகளை (எண்ணெய் விளக்குகள்) அறிமுகம் செய்தவரும் இவரே. பிச்சைக்காரர்கள், ஏழைகள், வேலையற்றோர், விலைமாதுக்களை கட்டுப்படுத்த கடுமையாக உழைத்தார். கோபனாவனில் வீடுகள் கட்டுவதற்கான விதிமுறைகளை இயற்றினார். நகரின் நீர் வழங்கல், கழிவுநீர் அமைப்புக்களை சீரமைத்தார். நகரின் தீயணைப்புத் துறைக்கு புதிய கருவிகள் கிடைக்கச் செய்தார். நகரத் தெருக்களிலும் சதுக்கங்களிலும் நடைமேடைகள் அமைக்க திட்டமிடுதலில் முக்கியப் பங்காற்றினார்.
நிலப்படவியலிலும் கடல்வழிகாட்டுதலிலும் நிலநிரைக்கோட்டை தீர்மானிப்பதில் செயல்முறைச் சிக்கல்கள் இருந்தன. இதற்கு தீர்வுகாண நிலத்திலிருந்து தள்ளி உள்ள கப்பலில் இருந்து நிலநிரைக்கோட்டை தீர்மானிக்கும் வழிமுறையொன்றை கண்டுபிடிப்பவருக்கு எசுப்பானியாவின் மூன்றாம் பிலிப் பரிசுகள் அறிவித்தார். இதன் எதிர்வினையாக 1616-17ல் கலீலியோ ஒரு கப்பலில் இருந்து நேரத்தையும் நிலநிரைக்கோட்டையும் அறிய வியாழக்கோளின் துணைக்கோள்களின் ஒளிமறைப்புக்களைப் பயன்படுத்தும் முறையை நிறுவினார். இருப்பினும் துல்லியமான நேர அட்டவணைகள் 18வது நூற்றாண்டு வரை கணிக்கப்படாததாலும் கப்பல்களிலிருந்து வியாழனின் துணைக்கோள்களை கவனிப்பதில் சிக்கல்கள் நிலவியதாலும் இதை நடைமுறைப்படுத்த இயலவில்லை. 1676ஆம் ஆண்டு ரோமர் விரிவுரைத்த கட்டுரையில் உள்ள படம் ரோமர் ஐஓ துணைக்கோளின் சுற்றுப்பாதைகளின் நேரங்களை புவி வியாழனை நோக்கி நகரும்போதும் (F – G) புவி வியாழனிலிருந்து வெளியே நகரும்போதும் (L – K) ஒப்பிட்டார்.
இருப்பினும் வியாழனின் துணைக்கோள்களை நேரம் தீர்மானிக்கப் பயன்படுத்துவது நடைமுறைக்கு வந்தது. 1671ல் பல மாதங்களாக யான் பிக்கார்டும் ரோமரும் வியாழனின் ஐஓ சந்திரனின் 140 கிரகணங்களை கவனித்து பதிந்தனர். அதே காலகட்டத்தில் பாரிசில் கியோவன்னி டொமெனிகோ காசினி என்ற பிரெஞ்சு அறிவியலரும் இந்த கிரகணங்களை பதிந்து வந்துள்ளார். இருவரது நேரங்களையும் ஒப்பிட்டு பாரிசுக்கும் ரோமர் பணிபுரிந்த யுரானியன்போர்க்குக்கும் இடையேயான நிலநிரைக்கோட்டு இடைவெளி கணக்கிடப்பட்டது. 1666க்கும் 1668க்கும் இடையே காசினி வியாழக்கோள்களின் சந்திரன்களைக் கவனித்து தமது அளவீடுகளில் பிழைகள் நேர்வதைக் கண்டறிந்தார். இது ஒளிக்கு குறிப்பிட்ட வேகம் இருப்பதாலேயே இருக்க வேண்டும் என எண்ணினார். 1672ல் ரோமர் காசினியிடம் உதவியாளராக இணைந்து இவற்றைக் கவனிப்பதைத் தொடர்ந்தார். காசினியின் அறிதல்களுடன் தன்னுடைய கவனிப்புக்களையும் இணைத்து ஆய்ந்தார். புவி வியாழனின் அருகாமையில் செல்லும்போது ஐஓ துணைக்கோளின் கிரணங்களுக்கு இடையேயான நேரங்கள் புவி வியாழனிடமிருந்து தள்ளி இருக்கும் போது ஏற்படுவதைவிட குறைவாக இருந்தது.
காசினி அறிவியல் அகாதமியில் ஆகத்து 22, 1676ல் கீழ்காணும் அறிவிப்பை வெளியிட்டார்: இந்த நேர வேறுபாடுகள் ஒளி கோள்களிலிருந்து புவியை அடைவதற்கு சிலத்துளி நேரமெடுப்பதால்தான் நிகழ்கின்றன. ஒளிக்கு கோள் பாதையின் பாதி விட்டத்தைக் கடப்பதற்கு பத்து முதல் பதினோரு நிமிடங்கள் எடுப்பதாகத் தெரிகிறது. இருப்பினும் தமது இந்த கருதுகோளை காசினி பின்னாளில் திரும்பப்பெற்றார். ஆனால் ரோமர் இதனை மேலும் ஆராய எடுத்துக்கொண்டார். பிக்கார்டும் தாமும் முன்னரே 1671-77 காலகட்டத்தில் நிகழ்த்திய கவனித்தல்களுடன் ஒப்பிட்டு பிரான்சிய அறிவியல் அகாதமிக்கு தமது முடிவுகளைத் தெரியப்படுத்தினார். ரோமரின் தரவுகளைக் கொண்டு பலரும் ஒளியின் வேகத்தைக் கணக்கிட்டனர். இவர்களில் முதலாமவராக கிறித்தியான் ஐகன்சு விளங்கினார். ரோமரின் தரவுகளையும் தமது கவனிப்புக்களையும் கொண்டு ஒளி வினாடிக்கு 16 2⁄3 புவியின் விட்டத் தொலைவு செல்வதாக கணக்கிட்டார். ஒளிக்கு அளவிடக்கூடிய வேகம் உள்ளது என்ற ரோமரின் கருதுகோள் 1727ல் ஜேம்ஸ் பிராட்லி தனது அளவீடுகள் மூலம் நிருபிக்கும்வரை அறிவியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
1809ல் ஐஓ துணைக்கோளின் கவனிப்புக்களைக் கொண்டு, இம்முறை நூறாண்டுகளுக்கும் மேலான துல்லிய அளவீடுகளைக் கொண்டு, யான் பாப்டிசுட்டு யோசஃப் டெலம்பர் சூரியனில் இருந்து ஒளி புவியை அடைய 8 நிமிடங்களும் 12 வினாடிகளும் ஆவதாகக் கணக்கிட்டார். இதனைக்கொண்டு ஒளியின் வேகம் வினாடிக்கு 300,000 கிலோமீட்டர்களை கணக்கிட்டார். தற்போது இது திருத்தப்பட்டு சூரியொளி புவியை அடைய 8 நிமி 19 வினாடிகளாவதாகவும் ஒளியின் வேகம் வினாடிக்கு 299,792.458 ஆகவும் கணகிடப்பட்டுள்ளது. ரோமர் பணிபுரிந்த பாரிசிலுள்ள வான்வெளி ஆய்வகத்தில் ஒளியின் வேகத்தை முதலில் கண்டறிந்தவராக ரோமருக்கு நினைவுப்பட்டயம் வைக்கப்பட்டுள்ளது. ஒளியின் வேகத்தை முதலில் கண்டறிந்த டென்மார்க் வானியலாளர் ஓலி கிறிஸ்டியன்சென் ரோமர் செப்டம்பர் 19, 1710ல் தனது 65வது அகவையில் கோபன்ஹேகன், டென்மார்க்கில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முதல் ஹைட்ரஜன் குண்டு வெடிப்பு ஆய்வினை நடத்திய, இந்திய அணுக்கரு உலையின் தந்தை, பத்மஸ்ரீ இராஜா இராமண்ணா நினைவு தினம் இன்று (செப்டம்பர் 24, 2004).
இராஜா இராமண்ணா (Raja Ramanna) ஜனவரி 28, 1925ல் கர்நாடகா மாநிலத்தில் தும்கூரில் பிறந்தார். தந்தையார் பெயர் பி.ராமண்ணா நீதியரசாரப் பணியாற்றி வந்தார். தாயார் ருக்மணியம்மா. இவர் நல்ல அறிவாளியாகவும், கவிதை இயற்றுதல், மின்கருவிகளைப் பழுது பார்த்தல் ஆகியவற்றில் திறம் பெற்றவராகவும் இருந்தார். இராமண்ணாவின் வாழ்க்கையில் பெற்றோருக்கு அடுத்து இவரை ஈர்த்தவர் இவருடைய தாயின் சகோதரி இராஜம்மா ஆவார். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய அவர் கதைகள் புராணக் கதைகள், காப்பியக் கதைகள் ஆகியவற்றை இராமண்ணாவுக்குச் சொல்லி அவரின் அறிவு வளர்ச்சிக்கும் வழிகோலினார். இராமண்ணாவின் பெயரிலுள்ள இராஜா என்பது இராஜம்மா என்ற பெயரின் பகுதியாகும். இராமண்ணாவின் தொடக்கக் கல்வி மைசூரில் அமைந்தது. இவரின் குடும்பம் பெங்களூருக்குக் குடிபெயர்ந்ததால் அங்கு பிஷப் காட்டன் பள்ளியில் சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தார். இது ஆதரவற்ற ஆங்கிலோ இந்தியக் குழந்தைகளுக்கான பள்ளியாகும்.
சிறுவயதிலேயே இசையில் ஆர்வம் காட்டியதுடன் அதை முறையாகவும் பயின்றார். ஆங்கில வழிப்பள்ளியில் பயின்றதால் மேலைநாட்டுச் சங்கீதமும் இவரை ஈர்த்தது. பள்ளிப்படிப்பு முடிந்ததும், பெங்களூருவில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இன்டர் மீடியட் படிப்பை முடித்தார். பின்னர் சென்னையில் உள்ள தாம்பரம் கிறித்துவக் கல்லூரியில் மேற்படிப்பிற்காகச் சேர்ந்தார். அங்கு இயற்பியல் இளநிலை அறிவியல் பட்டம் பெற்றார். விஞ்ஞானப் பட்டம் பெற்ற பின், டாடா கல்வி உதவித் தொகை பெற்று இங்கிலாந்து சென்று லண்டனிலுள்ள அரசர் கல்லூரியில் சேர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டார். அணுக்கரு இயற்பியல் (Nuclear Physics), அணுவுலை இயற்பியல் (Reactor Physics), வடிவமைப்பு, மேற்கத்திய இசை, வேதாந்தம் ஆகியவற்றைச் சிறப்புப் பாடங்களாகப் பயின்றார். 1948ல் முனைவர் பட்டத்தையும், ராயல் இசைப் பள்ளியின் L.R.S.M பட்டயப் படிப்பையும் (Licentiate in Royal School of Music) பெற்றுக் கொண்டு இந்தியா வந்து சேர்ந்தார்.
இராமண்ணா கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே இந்திய அணுவியலறிஞர் ஹோமி ஜஹாங்கீர் பாபா மீது மதிப்பு கொண்டிருந்தார். 1944 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் விளைவாக இந்தியாவில் தங்கியிருந்த திரித்துவ இசைக்கல்லூரியின் தேர்வாளர் முனைவர் ஆல்பிரெட் மிஸ்டோவ்ஸ்கி என்பவர் மூலம் பாபாவைச் சந்திக்கும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது. மற்றொரு முறை பாபா லண்டன் சென்றிருந்த போது அங்கு கல்வி பயின்றுகொண்டிருந்த இராமண்ணா அவரை மீண்டும் சந்தித்தார். அப்போது பாபா இந்திய அணு ஆற்றல் நிகழ்வுகளுக்குத் தொட்டிலாய் விளங்கிய அடிப்படை ஆய்வுக்கான டாடா பயிற்சி நிறுவனத்தில் (TIFR-Tata Institute of Fundamental Research) சேர்ந்து பணியாற்ற இவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கினார். டிசம்பர் 1, 1949ல் இராமண்ணா அப்பணியில் அமர்ந்தார். மும்பையில் கும்பாலா குன்று என்ற இடத்தில் அமைந்திருந்த அந்நிறுவனம் அப்போதுதான் யாட்கிளப் பகுதிக்கு மாறி, புதிய கட்டடப் பணிகள் நடைபெற்று வந்தன.
இசையில் இவருக்கிருந்த ஆர்வத்தை உணர்ந்த பாபா தங்கும் விடுதியில் இவருக்கு என்று ஓர் அறை இவருடைய பியானோ இசைக்கருவியை வைக்க ஓர் அறை என இரண்டு அடுத்தடுத்த அறையை ஒதுக்கித் தந்தார். விடுதியில் தரைதளம் இவர் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான ஆய்வறையாக அமைந்தது. இங்கு அணுக்கருப் பிளவு மற்றும்ம் சிதறல் பற்றிய ஆய்வுகளை இவர் மேற்கொண்டார். இவர் சேரும்போது இந்நிறுவனம் தொடங்கி ஐந்தாண்டுகள் ஆகியிருந்தது. அப்பொழுது பாபாவின் காஸ்மிக் கதிர்கள் பற்றிய ஆய்வுகள் உலகப் புகழ் பெற்றிருந்தன. பாபாவின் தூண்டுதலால் தொடங்கப்பட்ட அணுக்கரு ஆய்வுக்குழு குறிப்பிடதக்க வகையில் பணியாற்றிய பெருமையுடையதாகும். தொழில்நுட்ப நடவடிக்கைகளும், அணுஆற்றல் திட்டங்களும் இந்தியாவில் தழைத்தோங்கி வளர இக்குழு மிகவும் கடுமையாக உழைத்தது. இதன் செயல்பாடுகளுக்கு மின்னணுவியல் துறையின் தலைவரான ‘ஏ.எஸ். ராவ்’ அவர்களும் ஒரு காரணமாக விளங்கினார். பல்வேறு இன்னல்களுக்கிடையேயும் இக்குழுவின் ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வந்தன.
நியூட்ரான், அணுக்கரு, அணுக்கரு உலை இயற்பியல் ஆகிய துறைகளில் இராமண்ணாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. பாபா அணு ஆய்வு மையத்தில் ஹோமி பாபாவின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுகளின் போது இராமண்ணா ஓரு இளைய ஆய்வாளராகப் பணியாற்றினார். 1956 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் நாள் முதல் அணுக்கரு உலையான ‘அப்சரா’ இக்குழுவினரால் உருவாக்கப்பட்டது. இதில் நியூட்ரான் பற்றிய ஆய்வுகளை இராமண்ணாவும், கோட்பாட்டு இயற்பியலில் கே.எஸ்.சிங்வியும், மின்னணுத் துறையில் கருவிகள் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு முறைகள் ஆகியவற்றில் ஏ.எஸ்.ராவும் பங்களித்தனர். அணுக்கரு உலையில் அமைக்கப்படும் எரிபொருளுக்கான துளைகள் அமைப்பு உருவாக்கத்திற்கு எந்திரப் பொறியாளர் வி.டி.கிருஷ்ணன் பொறுப்பேற்றார். இராமண்ணா துடிப்புமிக்க நியூட்ரான் மூலத்தைப் பயன்படுத்தி நீர் மற்றும் பெரிலியம் ஆக்சைடில் அதன் வேகத்தை மட்டுப்படுத்தி நியூட்ரான் விரலைத் திர்மாணித்தார். நியூட்ரான் வெப்பமேற்றலை நவீன முறைகளில் பல்வேறு ஆய்வுகள் மூலம் மேற்கொண்டார். அவ்வாறு செயல்படும்போது உருவாகும் நியூட்ரான் நிறமாலை பற்றியும் ஆய்வுகள் மேற்கொண்டார். இதில் கிடைத்த வெப்ப நியூட்ரான்கள் கற்றை அடிப்படை ஆய்வுகளுக்கு உதவியது.
யுரேனியம்-235ல் அணுக்கருப்பிளவினால் உருவாகும் துணைக்கதிர்வீச்சுகளைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். அவற்றின் ஆற்றல் மற்றும் கோணங்கள் ஆகியவற்றை அளந்தார். இந்த அளவீடுகள், நியூட்ரான்களின் வெளிப்பாடு, பிளவுத்துகள்களின் சராசரி சுழற்சி போன்றாவற்றைப் பற்றிப் பல தகவல்களை அறிய உதவின. வெப்ப மற்றும் வேக நியூட்ரான்களினால் தூண்டப்பட்ட அணுக்கருப் பிளவில் வெளிவரும் மின்னேற்ற இந்த துகள்கள் அவற்றின் வெளியேற்றம் பற்றிய முக்கியத் தகவல்களை அறிய உதவின. அணுக்கரு ஆய்வுகளில் ஈடுபட்ட இராமண்ணா, இந்த ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபட பல இளம் அறிவியலறிஞர்களை உருவாக்குவதில் அதிக ஆர்வம் காட்டினார். அதற்காக 1975ல் இவர் தலைமையில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் பயிற்சிப் பள்ளி ஒன்றை ஆரம்பித்தது, இவர் எடுத்த முதல் முக்கியமான முயற்சியாகும். இங்கு பல அறிவியல் அறிஞர்கள் உருவாக்கப்பட்டனர். அவர்கள் அணு ஆற்றல் மற்ரும் விண்வெளி ஆய்வு மையங்கள், பாதுகாப்பு அமைச்சக ஆலோசகர், பல்வேறு ஆய்வகங்களின் இயக்குநர்கள், இந்திய அரசாங்கத்தின் அறிவியல் துறைச் செயலர்கள் என்று இந்திய நாட்டிற்குள் பல்வேறு வகைகளில் பணியாற்றி வந்துள்ளனர்.
1967-68ல் சான்ட பார்பராவில், கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் பட்டதாரி மாணவர்களுக்கு உதவி ஆசிரியராகவும், 1971-73ல் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டதாரி மாணவர்களுக்கு ஆசிரியராகவும் 1984ல் ஆம்ஸ்டர்டாமில் பயிற்சி ஆசிரியராகவும், 1987ல் சாந்திநிகேதனில் நடைபெற்ற உயர் ஆற்றல் இயற்பியல் குறித்த கோடைக்கலப் பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியராகவும், கணித அறிவியல் பயிற்சி நிறுவனத்தில் வகையீட்டு வடிவஇயல், குவைய எந்திரவியல், குவைய புலக்கோட்பாடு, அடிப்படைத் துகள் இயற்பியல் ஆகியவற்றில் பல வகுப்புகளையும் நடத்தியுள்ளார். சென்னையில் கணிதப் பயிற்சி நிறுவனத்திலும் அவ்வப்போது ஆசிரியராகப் பணிபுரிந்து வகுப்புகள் நடத்தியிருக்கிறார். இந்தியாவிலும் உலகில் உள்ள பலகைக்கழகங்களிலும் வருகைப் பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ நமது நாட்டில் பல பயிற்சிக் கல்வி நிறுவனங்கள் உருவாக இவர் காரணமாக இருந்துள்ளார். இந்தூரில் முன்னேறிய தொழில்நுட்பமையம் (முன்னேற்றம் பெற்ற முடுக்கிகளை உருவாக்கும் பணி), முன்னேறிய படிப்புகளுக்கான தேசியப் பயிற்சி சிறுவனம் ஆகியவற்றை டாடாவின் உதவியால் தொடங்கி அதன் இயக்குநராகப் பெங்களூருவில் பொறுப்பேற்றார்.
1972 முதல் 1978 வரை இந்தியத் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராகவும், 1977-78களில் இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் தலைவராகவும், அனைத்துலக அணுஆற்றல் நிறுவனத்தில் பொது இயக்குநருக்கான ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் பின்னர் தலைவராகவும், 1986ல் அதன் முப்பதாவது பொது மாநாட்டின் தலைவராகவும் செயல்பட்டார். 1977-79ல் இந்திய அறிவியல் கழகத்தின் துணைத் தலைவராகச் செயல்பட்டார். பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் பொது இயக்குநராகவும் பணியாற்றினார். மும்பை பாபா அணுசக்தி ஆய்வு மையத்தின் இயக்குநராக 10 ஆண்டுகளுக்கும் (1972-1978, 1981-1983) மேலாகப் பணியாற்றினார். முதல் ஆறாண்டுகளை இராமண்ணாவின் அணுக்கரு விஞ்ஞானச் சாதனைகளின் பொற்காலம் என்று கூறலாம். அப்போதுதான் குறிமொழிப் பெயர் பூண்ட ‘சிரிக்கும் புத்தர்’ (Smiling Buddha) என்னும் முதல் அணுகுண்டு, ரகசிய அணு ஆயுதத் திட்டம் அவரது நேரடிக் கண்காணிப்பில் உருவானது. மே 18, 1974 ஆம் தேதி இராஜஸ்தானிலுள்ள பொக்ரான் பாலைவனத்தில் நிலத்தடி குண்டு வெடிப்பை இந்தியா நிகழ்த்தி உலக நாடுகளை பேரதிர்ச்சியிலும், பெரு வியப்பிலும் ஆழ்த்தியது.
டாக்டர் ஹோமி ஜெ.பாபா, டாக்டர் விக்ரம் சாராபாய், டாக்டர் ஹோமி என்.சேத்னா ஆகியோருக்குப் பின்பு தலைவராக, அணுசக்திப் பேரவைக்குத் (Atomic Energy Commission) டாக்டர் ராஜா ராமண்ணா 1983ல் தேர்ந்தெடுக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். 1990ல் வி.பி.சிங் அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். 1997ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகப் பணிபுரிந்தார். பெங்களூருவில் உள்ள முன்னேறிய படிப்புகளுக்கான பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராகவும் செயல்பட்டார். ஜவஹர்லால் நேரு முற்போக்கு விஞ்ஞான ஆய்வு மையம் (Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research), இந்திய விஞ்ஞானப் பள்ளித் துறை (Indian Academy of Sciences (1977)), மற்றும் இந்தியப் பொறியியல் துறைக்கூடம் (Indian Institute of Technology, Bombay (1972)) ஆகியவற்றின் தலைவராகவும் இராமண்ணா பணியாற்றினார். இவருடைய பணிகளைப் பாராட்டி 1963ல் சாந்தி ஸ்வரூப் பட்னாகர் விருது, 1968ல் குடியரசுத் தலைவரின் பத்மஸ்ரீ விருது, 1973ல் பத்ம விபூஷண் விருது, 1984ல் இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் மேக்நாத் சாகா பதக்கம், 1985ல் ஓம்பிரகாஷ் பாசின் விருது, 1985-86ல் ஆர். டி. பிர்லா நினைவு விருது, 1996ல் அசுதோஷ் முகர்ஜி தங்கப்பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டன.
பல்வேறு பல்கலைக் கழகங்கள் இவரைச் சிறப்பிக்கும் வகையில் மதிப்பியல் முனைவர் பட்டம் வழங்கின.இந்தியாவிலும், வெளிநாட்டிலும் இராமண்ணாவின் பல விஞ்ஞான வெளியீடுகள் பதிவாகி யுள்ளன. இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மிகச் சிறப்பாகப் பங்காற்றியவர். எழுச்சியூட்டும் தலைவராகவும் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் விளங்கியவர். இந்திய அணுக்கரு உலையின் தந்தை இராஜா இராமண்ணா செப்டம்பர் 24, 2004ல் தனது 79வது அகவையில் மும்பையில் மாரடைப்பால் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மீ கடத்து நிலை (super conductivity) மற்றும் தாழ்ந்த வெப்ப நிலையில் (0K) உள்ள பொருள்களின் பண்புகளை ஆய்வு செய்ததற்காக நோபல் பரிசு பெற்ற ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 21, 1853).
ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ் (Heike Kamerlingh Onnes) செப்டம்பர் 21, 1853ல் நெதர்லாந்தில் உள்ள குரோனின்ஜென் என்ற ஊரில் பிறந்தார். இவர் தந்தை ‘ஹார்ம் காமர்லிங்க் ஆன்ஸ்’ என்ற டச்சு நாட்டுக்காரர். இவர் ஒரு செங்கல் சூளையின் உரிமையாளர். இவருடைய தாயார் ‘அன்னா ஜெர்டினா கொயர்ஸ்’. இவருடைய பெற்றோர் அனைத்து வகையிலும் கண்டிப்பானவர்களாக இருந்ததால் இவரும் இவருடைய சகோதரர்களும் கடின உழைப்பின் வலிமையை உணர்ந்தே வளர்ந்தனர். ‘ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ்’ 1887ல் ‘மரியாஅட்ரியானா வில்ஹெல்மினா எலிசபெத் பிஸ்லாவெல்ட்’ என்ற மங்கையைத் திருமணம் செய்து கொண்டார். இவர் பிறந்த ஊரிலேயே இருந்த ஹூஜெர்பர்ஜர் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தார். அங்கு மொழிப்பாடம் கற்பிக்கப்படவில்லை. எனவே பள்ளி நேரம் போக, பிற நேரங்களில், அப்பள்ளியின் இயக்குநர், பின்னாளில் வேதியல் பேராசிரியராகப் புகழ்பெற்ற ஜே.எம்.லெய்டன்வான் பெம்மலென் என்பவரிடம், கிரேக்க லத்தீன் மொழிப்பாடங்களைத் தனியே பயின்றார்.
1870ல் குரோனின்ஜென் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். இங்கு பயின்ற போது உட்க்ரெட் பல்கலைக் கழகம் நடத்திய கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு ஆவி அடர்த்தி என்பது பற்றி எழுதி முதல் பரிசைப் பெற்றார். அங்கு பட்டம் பெற்ற பின் 1871ல் ஜெர்மனியில் உள்ள ஹெய்டல்பர்க் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். அங்கு இவருடைய ஆசிரியர்களாக விளங்கியவர்கள் புன்சன் மற்றும் கிர்க்கார்ப் என்ற அறிவியலறிஞர்கள் ஆவர். ராபர்ட் கிர்க்கார்ப் என்ற ஜெர்மனிய இயற்பியலறிஞரின் தனிப்பட்ட ஆய்வுச் சாலையில் அவருடைய உதவியாளராகவும் காமர்லிங்க் பணி புரிந்தார். தன் சொந்த ஊருக்கு மீண்டும் திரும்பிய பின் அங்குள்ள பல்கலைக் கழகத்தில் 1878ல் முதுகலைப் பட்டமும், பின்னர் 1879ல் முனைவர் பட்டமும் பெற்றார். முனைவர் பட்ட ஆய்வுக்கு இவர் எடுத்துக்கொண்ட தலைப்பு ‘ புவியியல் சுழற்சிக்கான புதிய நிரூபணங்கள் (New proofs for the rotation of the earth) என்பதாகும்.
1878ல் லெப்ட்டில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் பாஸ்சா என்ற அறிவியல் அறிஞரின் உதவியாளராகச் சேர்ந்தார். அதே நிலையில் 1881-1882 ஆம் ஆண்டுகளில் விரிவுரையாற்றுகின்ற வாய்ப்பும் கிடைக்கப்பெற்றார். இங்கு இயக்கவியல் கொள்கையின் அடிப்படையில் பாய்பொருள்களின் பொதுக் கோட்பாடு (General Theory of the nature of fluids from the perspective of Kinetic theory) என்ற ஆய்வுக் கட்டுரையை தயாரித்தார். பாய்பொருள்களின் பொதுக் கோட்பாட்டை உருவாக்க அவற்றின் பருமனளவு, அழுத்தம், வெப்பநிலை ஆகிய அளவுகளின் சரியான அளவீடுகள் அவசியம் என்பதை உணர்ந்தார். அப்பொழுதுதான் தாழ்ந்த வெப்ப நிலைகளை அறிந்து செயல்படுவதில் ஆர்வம் செலுத்தத் தொடங்கினார். 1882ல் இவருக்கு 29 அகவை இருக்கும்போது லெய்டன் பல்கலைக் கழகத்தில் ஆய்வியல் இயற்பியல் (experimental physics) துறையில் பேராசிரியராகவும், அங்குள்ள ஆய்வுச்சாலையின் இயக்குநராகவும் அமர்த்தப்பட்டார். இங்கு தாழ்ந்த வெப்பநிலைகளைப் பற்றிய ஆய்வுகளை மீண்டும் தொடங்கினார். இதற்கு தாழ்வெப்பநிலையியல் என்று பெயர். கிட்டத்தட்ட 42 ஆண்டுகள் (1882-1923) இதே லெய்டன் ஆய்வுச்சாலையில் தன்னுடைய வாழ்நாளில் பெரும்பகுதியைக் கழித்தார்.
அக்காலத்தில் தாழ்ந்த வெப்பநிலையியல் என்பது புதிய துறையாகும். இவருக்கு முன்பு வாயுக்களைத் தாழ்ந்த வெப்ப நிலையில் திரவமாக்குவது என்பது நடைமுறைப் படுத்தப் படவில்லை. காமர்லிங்க் இந்த ஆய்வினை மேற்கொண்ட போது, பொருளின் அணுத்தன்மையின் முழு ஆய்வுச் சான்றை அறிய விரும்பினார். ஆக்சிஜன், ஹைட்ரஜன், ஹீலியம் முதலிய வாயுக்களை மிக அதிக அளவு தாழ்ந்த வெப்ப நிலைக்கு உட்படுத்தும் ஆய்வை மேற்கொண்டார். இக்கால கட்டத்தில், திரவம் ஆவியாகும் போது அங்கு ஒரு குளிர்ச்சி விளைவு ஏற்படுகிறது என்பதை ஸ்வீடன் நாட்டு அறிவியலறிஞர் ஆர்.பி.ஃபிக்டெட் என்பவர் கண்டறிந்த்தார். அதே வருடத்தில் பிரெஞ்சு இயற்பியலாளர் எல்.பி கெயிட்லெட் என்பவர் அதிக அழுத்தத்திற்கு ஆக்ஸிஜனை உட்படுத்தியபோது அங்கு தாழ்ந்த வெப்ப நிலை உருவானதைக் கண்டறிந்தார். இறுதியாக, ஜே.பி. ஜூல்ஸ் மற்றும் வில்லியம் தாம்சன் (லார்டு கெல்வின்) ஒரு வாயுவை அதிக அழுத்தத்தில் மிகச் சிறிய திறப்பின் வழியே வாயுவின் தன்மைக்கேற்பக் குறிப்பிட்ட அளவு செலுத்தும்போது அதனுடைய வெப்பநிலை குறைவதைக் கண்டறிந்தார். 1895 இல் முனிச்சில் கார்ல் லிண்டே என்பவர் ஜூல்-தாம்சன் விளைவின் அடிப்படையில் வாயுவைத் திரவமாக்கும் கருவியை உருவாககினார்.
பிக்டெட், லிண்டே ஆகியோரின் முறைகளை ஒருங்கிணைத்து காமர்லிங்க் ஒரு புதிய முறையைக் கண்டறிந்தார். இதன் படி மற்ற வாயுக்களைத் திரவமாக்கும் ஆக்சிஜனை, திரவமாக்கும் முறையில் வெற்றிகண்டார். ஒரு மணி நேரத்தில் 14 லிட்டர் அளவு ஆக்சிஜனைத் திரவமாக்கினார். 1904ல் மிகப்பெரிய தாழ்ந்த வெப்பநிலை உருவாக்கத்திற்கான ஆய்வுக்கூடத்தை நிறுவினார். 1908 -ல் ஹாம்ப்சன்-லிண்டே சுழற்சி முறைப்படி ஜூல்- தாம்சன் விளைவைப் பயன்படுத்தி வெப்பநிலையை 1 டிகிரிக்கும் குறைவாக்கும் (-273°) கருவியை வடிவைமைத்தார். இது லெய்டனில் உள்ள ‘பொயர்ஹால் அருங்காட்சியகத்தில்’ வைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வுகளுக்காக இவருக்கு 1913ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1911ல் பாதரசம், வெள்ளீயம், காரீயம் போன்ற தூய்மையான உலோகங்களின் மீள்தன்மை பற்றி ஆராய்ந்தார். 4.2 கெல்வின் அளவு வெப்ப நிலையில் மின்தடை சுழியாகும் என்பதை காமர்லிங்க்கும் அவரது உதவியாளர்களும் கண்டறிந்தனர். பாதரசம் இந்தப் புதிய நிலையை அடைந்து அதனுடைய மின் கடத்தும் தன்மை மிகச் சிறப்பாக அமைகிறது. இது மீ கடத்து நிலை (super conductivity) எனக் குறிப்பிடப்பட்டது.
லெய்டன் பல்கலைக் கழகத்தின் தாழ்ந்த வெப்பநிலை ஆய்வுக்கூடத்திற்கு காமர்லிங்க் ஆன்சின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 1910ல் மத்யூக்கி பதக்கம், 1912ல் ரம்போர்டு பதக்கம் ஆகியவை இவருக்கு வழங்கப்பட்டன. சந்திரனில் உள்ள ஒரு குழிப்பகுதிக்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆம்ஸ்டர்டாமின் ராயல் அறிவியல் கழகத்தில் தனது 30 வயதிலேயே இவர் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டார். அனைத்துலக சங்கம் ஒன்றையும் இவர் நிறுவினார். நெதர்லாந்து அரிமா அணி, நெதர்லாந்து ஆரஞ்சு-நஸ்ஸாவ் அணி, நார்வே புனித ஆலாஃப் அணி, போலந்தின் போலேனியா ரெஸ்டிட்யூபா அணி ஆகியவற்றின் ஆணை அலுவலராகப் பணியாற்றினார். பெர்லின் பல்கலைக் கழகம் மதிப்பியல் முனைவர் பட்டம் அளித்துச் சிறப்பித்தது. பவும்கார்டன் பரிசு, ஃப்ராங்க்ளின் பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டன.
மாஸ்கோவில் உள்ள அறிவியல் நண்பர்கள் சங்கத்தில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ரோம், லண்டன் போன்ற அயல்நாட்டு நகரங்களில் அயல்நாட்டு உறுப்பினராகவும் ஸ்டாக்ஹோமில் இயற்பியல் சங்கத்தில் மதிப்பியல் உறுப்பினராகவும் அமர்த்தப்பட்டார். அறிவியல் அறிஞராக இருப்பினும் தன்னுடைய குடும்ப வாழ்க்கையிலும் அதிக கவனம் செலுத்தினார். உதவிகள் தேவைப் பட்டவர்களுக்கு தம்மால் இயன்ற உதவிகளைச் செய்தார். முதல் உலகப் போருக்கு முன்பும், பின்பும் அறிவியலறிஞர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட வேறுபாடுகளைக் களைய உதவினார். தாழ்ந்த வெப்ப நிலையில் (0K) உள்ள பொருள்களின் பண்புகளை ஆய்வு செய்ததற்காக நோபல் பரிசு பெற்ற ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ் பிப்ரவரி 21, 1926ல் தனது 72வது அகவையில் நெதர்லாந்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். இவரைச் சிறப்பிக்கும் வகையில் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உலகம் அமைதியாக வேண்டும் என்றால் முதலில் நமது மனம் அமைதியாகவேண்டும் – உலக அமைதி தினம் (International Day of Peace) இன்று (செப்டம்பர் 21).
உலக அமைதி நாள் (International Day of Peace) ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் பிரகடனத்தின் மூலம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி ஐக்கிய நாடுகளின் சபையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினம் 1981 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் மூன்றாம் செவ்வாய்க் கிழமை கொண்டாடப்பட்டு வந்தது. 2002 ஆம் ஆண்டிலிருந்து இந்தத் தினம் செப்டம்பர் 21 ஆம் தேதியில் கொண்டாடப்படுகிறது. அமைதி என்பதற்குப் பல அர்த்தங்கள் இருக்கின்றன. தற்காலத்தில் அமைதி என்பது, பகை இல்லாத நிலையைக் குறிக்கிறது. சர்வதேச அளவில் போர் இல்லாத நிலையையும் குறிக்கிறது. மகாத்மா காந்திஜியின் கருத்துப்படி, அமைதி என்பது வன்முறை இல்லாமையை குறிக்கும். அமைதி – இது எங்குள்ளதோ அந்த இடம் எவ்வித பிரச்னைகளும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கும். அனைத்து பிரச்னைகளுக்கும், அமைதியே மருந்து.
மேலும் உலகின் சகல முன்னேற்றத்திற்கும் அடிப்படையானது சமாதானம். வரலாற்றில் பல யுத்தங்கள் நடை பெற்றுள்ளன. 20 ஆம் நூற்றாண்டின் இரு பெரும் உலக மகா யுத்தங்கள் கோடிக்கணக்கான உயிர்களையும் சொத்துக்களையும் காலி செய்திருக்கின்றன. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் உலக சமாதானத்திற்காக 1945 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை, உலக நாடுகளிடையே பூசல்களையும், போர்களையும் தடுக்க பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நம்மால் துப்பாக்கிகளுக்கும் குண்டுகளுக்கும் ஓய்வு கொடுக்க முடியவில்லை. அதே சமயம் உலகின் நிரந்தர சமாதானத்தை உருவாக்கும் பணி யுனெஸ்கோ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. உலக சமாதான முயற்சி ஒன்றின் போது ஐ.நாவின் பொதுச் செயலாளர் ஹாமர்சீல்ட் விமான விபத்தில் உயிர் துறந்தது கொடுமையிலும் கொடுமையாகும். அவர் 1961 ஆம் ஆண்டு செப்டம்பர் மூன்றாம் வாரத்தின் செவ்வாய்க் கிழமையில் மரணம் அடைந்தார். அந்தத் தினமே உலக அமைதி தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்த யுனெஸ்கோவின் பணி, கல்வி, அறிவியல், பண்பாட்டு நடவடிக்கைகளின் வழியாக உலக சமாதானம், மனித இனத்தின் பொது நலன் ஆகிய குறிக்கோள்களை நிறைவேற்ற வேண்டும். ஐ.நா சபையும், ஐ.நா சாசனமும் இந்தக் குறிக்கோள்களின் அடிப்படையிலே அமைக்கப்பட்டிருக்கிறது. மனித உரிமைகளையும், கடமைகளையும் செயல்படுத்த முக்கியமாக தேவைப்படுவது சமாதானமாக இருக்கிறது. அதாவது, குடிமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் சுதந்திரமான, நியாயமான சட்டம், சமத்துவம், ஒருமைப்பாடு என்பது தான் சமாதானமாக இருக்கிறது. சமாதானம், வளர்ச்சி, ஜனநாயகம் ஆகிய மூன்றும் ஒன்றுக்கு ஒன்று உருதுணைபுரிபவையாக இருக்கின்றன. அவை ஒன்றையொன்று வலுப்படுத்துகின்றன.
உலகில் அணு ஆயுதங்களுக்கு ஐக்கிய அமெரிக்க நாடுகள், ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா போன்ற நாடுகள் உரிமை கொண்டாடிக் கொண்டுள்ளன. உலக அமைதியை வலியுறுத்தும் நாடுகள் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையையே தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் நாடுகள் கூட பாதுகாப்பு என்கிற போர்வையில் அணு ஆயுத பலத்தை பெருக்குகின்றன என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். இந்தியாவில், பல மாநிலங்கள், பல மொழி பேசுபவர்கள் மற்றும் பல மதத்தினர் இருந்தாலும், “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற கொள்கைதான், இந்தியர்கள் அனைவரையும் ஒன்றுபட வைக்கிறது. இதனால் உலக அரங்கில் இந்தியா, தலை நிமிர்ந்து நின்று, மற்ற நாடுகளுக்கு உதாரணமாக திகழ்கிறது. 1956 – ஆம் ஆண்டு ஐநா சபையில் ஆயுத குறைப்புத் தீர்மானத்தை கொண்டு வந்த முதல் நாடு இந்தியா என்பது, இந்த அமைதி தினத்தில் நாம் அனைவரும் எண்ணி பெருமைப்பட வேண்டிய விஷயமாகும்.
உலக அரங்கில் அமைதியை தொடர்ந்து காத்து வருவதில் இந்தியாவிற்கு நிகர் இந்தியா தான். மற்ற நாடுகள் எல்லாம் சுதந்திரம் பெற போர் போன்ற தீவரவாத செயல்களில் ஈடுபட்ட போதே அஹிம்சை என்ற அமைதியின் வழியில் சுதந்திரம் பெற்ற நாடு இந்தியா. உலகம் அமைதியாக வேண்டும் என்றால் முதலில் நமது மனம் அமைதியாகவேண்டும். வரும்காலங்களில் ஒவ்வொரு நாளுமே, உலக அமைதிநாள்தான் என்ற மனநிறைவோடும், நிம்மதியோடும் கொண்டாட வேண்டும். இதுவே நம்மை வாழவைக்கும் இந்த உலகத்தை, நாம் வாழவைக்கும் முறை. ஓவ்வொரு மனமும் மாறும்போது, உலகமும் மாறும் என்ற நம்பிக்கையோடு நாமும் இந்த அமைதி நாளில் உலக அமைதிக்கு வழிவகுப்போம்.
Source By: Dailyhunt, Newsj
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கணிதத்தில் நாம் பயன்படுத்தும் அநேகக் குறியீடுகளை அறிமுகம் செய்த புகழ் பெற்ற கணிதவியல் மற்றும் அறிவியல் அறிஞர் லியோனார்டு ஆய்லர் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 18, 1783).
லியோனார்டு ஆய்லர் (Leonhard Euler) ஏப்ரல் 15, 1707ல் சுவிட்சர்லாந்தில் உள்ள பாசெல் என்னுமிடத்தில் பவுல் ஆய்லர் என்பவருக்கும், மார்கரீட் புரூக்கர் என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். தந்தை பவுல் ஆய்லர் சீர்திருத்தத் திருச்சபையைச் சேர்ந்த ஒரு மதகுரு. தாயாரும் ஒரு குருவானவரின் மகளே. ஆய்லர்க்கு இரண்டு தங்கைகள் இருந்தனர். ஆய்லர் பிறந்ததுமே ஆய்லர் குடும்பத்தினர் பாசெல்லிலிருந்து ரீஹென் என்னும் நகருக்கு இடம் பெயர்ந்தனர். பவுல் ஆய்லர், அக்காலத்தில் ஐரோப்பாவில் பெயர் பெற்ற கணிதவியலாளரான ஜொஹான் பர்னோலி என்பவரின் குடும்பத்துக்கு நண்பராக இருந்தார். இது இளம் ஆய்லரின் கணித ஆர்வத்துக்குப் பெரும் பங்களிப்புச் செய்தது. இளம் வயதிலேயே அதீத ஆற்றல் கொண்ட ஆய்லர், தாம் படித்த புத்தகங்களில் தோன்றும் குறிப்புகளை ஒரு வார்த்தைகூடப் பிறழாமல் பல ஆண்டுகளுக்குப் பின்பும் அப்படியே ஒப்பிக்கும் நினைவாற்றல் பெற்று விளங்கினார். இளம் வயதிலேயே தனது கணித ஆற்றலை வெளிப்படுத்தத் தொடங்கினார்.
ஆய்லர் படித்த பள்ளியில் கணிதம் பாடமாகவே இல்லை. அதனால் கணிதத்தில் ஆர்வமுடைய இவருடைய தந்தை இவரை ஜான் பெர்னோவிலி என்ற ஒரு புகழ் பெற்ற கணிதப் பேராசிரியரிடம் தனி மாணவனாகப் பாடம் கற்றுக் கொள்ள அனுப்பித்தார். ஆனால் பெர்னோவிலி இவரை சனிக்கிழமைகளில் மாத்திரம் வரச்சொல்லி உன் சந்தேகங்களைக் கேட்டுக்கொள் என்று சொல்லிவிட்டார். அதுவே ஆய்லருக்கு ஒரு வரப் பிரசாதமாகியது. ஏனென்றால் கணிதம் கற்றுக் கொள்ள இதைவிட வேறு நல்ல வழி கிடையாது என்று ஆய்லரே பிற்காலத்தில் சொல்லியிருக்கிறர். அவருடைய உழைப்பையும் கத்திமுனை புத்தியையும் பார்த்த இன்னும் இரு பெர்னோவிலிகள்தான் (டேனியல் பெர்னோவிலி, நிக்கொலாஸ் பெர்னோவிலி இருவரும்) இவன் பெரிய கணித மேதையாவான் என்று கண்டுகொண்டு, மதப் படிப்பில் இவரை ஈடுபடுத்த முயன்ற தந்தையின் மனதை மாற்றினார்கள்.
இன்று கணிதத்தில் இவர் பெயர் கொண்ட கருத்துக்கள், சூத்திரங்கள் மற்றும் தேற்றங்கள் நூற்றுக்கும் மேல் உள்ளன. அந்த அளவுக்கு அனைத்துக் கணித உட்பிரிவுகளிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி மாபெரும் மேதையாக ஆய்லர் கணித உலகில் சஞ்சரிக்கிறார். கணிதத்தில் இன்று நாம் பயன்படுத்தும் அநேகக் குறியீடுகளை இவரே அறிமுகம் செய்தார். உதாரணமாக, சார்புகளைக் குறிக்கும் ƒ(x) குறியீடு, கூடுதல் மதிப்புக்கான Σ குறியீடு, முக்கோணவியல் சார்புகளான sin x, cos x போன்ற பெயர்கள், மடக்கை அடிமானமான e என்ற குறியீடு, கலப்பு எண்ணின் i என்ற கற்பனை அலகு போன்றவை குறிப்பிடத் தக்கவையாகும். கணித உலகில் இரு எண்களைத் தன் பெயரில் கொண்ட ஒரே கணித மேதை ஆய்லர். மடக்கை சார்புகளின் அடிமானமான e என்ற எண்ணைக் கண்டறிந்து அதன் தோராய மதிப்பை 2.718 என வழங்கினார். இன்று இதை ‘ஆய்லர் எண்’ என அழைக்கிறோம். அதேபோல் காமா (ϒ) எனும் மாறிலியையும் இன்று ‘ஆய்லர் மாறிலி’ என அழைக்கிறோம். இதன் மதிப்பு 0.57721 என தோராயமாக அமைகிறது. காமா எனும் ஆய்லர் மாறிலி விகிதமுறு எண்ணா, அல்லது விகிதமுறா எண்ணா என இன்றுவரை கூற இயலவில்லை.
இன்று கணிதத்தில் மிகச் சிறப்பான சூத்திரமாகக் கருதப்படும் eiπ+1= 0 என்ற சமன்பாடை இவர் வழங்கிய eiθ= cos θ + i sin θ சூத்திரத்திலிருந்து θ = π எனப் பிரதியிட்டுப் பெறலாம். கோநிஸ்பெர்க் பாலக் கணக்கு எனும் கணிதப் புதிருக்கு இவர் வழங்கிய தீர்வு மூலம் Graph Theory எனும் கணித உட்பிரிவு உருவானது. அதேபோல், ν-e + ƒ=2 என்ற பன்முகி சூத்திரம் Topology எனும் கணித உட்பிரிவு தோன்ற வழிவகுத்தது. மேலும், பொருட்களின் தொடர்புகளைப் படங்கள் மூலம் வெளிப்படுத்தும் பண்பை வரைபடங்கள் மூலம் ஆய்லர் வெளிபடுத்தினார். இன்று இவ்வரைபடங்களை நாம் ஆய்லர் வரைபடங்கள் என அழைக்கிறோம். இவையே இன்று நாம் கணங்களில் தற்சமயம் பயன்படுத்தும் வெண் வரைபடங்களின் மாதிரியாகத் திகழ்கின்றன.
1736ல் ஆய்லர் மக்களின் கவனத்தை ஈர்த்த ஒரு பிரச்சினையை விளையாட்டுப்போல் எளிதில் விடுவித்தார். அந்த பிரச்சினையும் அதன் நிறுவலில் இருந்த தத்துவமும் மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு இடவியல், கோலக்கோட்பாடு என்ற இரண்டு தற்காலக் கணிதப் பிரிவுகளுக்கு அடிக்கோலிட்டது. ஒரு ஆறு, அதில் இரண்டு பெரிய தீவுகள். ஆற்றின் குறுக்கே ஏழு பாலங்கள். ஏழு பாலங்களையும் ஒரு நடையில் கடக்கவேண்டும். போன பாலத்திலேயே இரண்டாம் முறை போகக்கூடாது. இது முடியுமா? இதுதான் பிரச்சினை. கோனிக்ஸ்பர்க் மக்களுக்கு இது உண்மைப் பிரச்சினை. ஏனென்றால் அவர்கள் ஊரில் தான் இத்தீவுகளும் பாலங்களும். மக்கள் நடந்து நடந்து சோதனை செய்தே அயர்ந்தனர். ஆய்லர் இதை நுண்பியப்படுத்தி கணித முறைத் தர்க்கத்தினால் விடுவித்தார். அவருடைய தீர்ப்பு ஏழு பாலங்களையும் ஒரு நடையில் கடக்கமுடியாது.
ஆய்லர் கணித மரபுப்படி பிரச்சினையிலிருந்த சம்பந்தமில்லாத விஷயங்களை ஒதுக்கிவிட்டு, அதன் அடித்தளத்திலிருந்த உயிர் நாடிப்பிரச்சினையை வெளிக்கொணர்வதற்காக, பாலங்கள் பிரச்சினையை கோலம் மூலமாக எளிதாக்கினார். நிலப்பரப்புகள் ஒவ்வொன்றையும் ஒரு புள்ளியாகவும், பாலங்களை அவைகளை இணைக்கும் கோடுகளாகவும் (அவை நேர் கோடாக இருக்கவேண்டிய தேவையில்லை) செய்ததில் ஒரு கோலமாகியது. 4 கோணப்புள்ளிகளும் 7 இணைக்கும் கோடுகளும் உள்ள இந்தக் கோலத்தில், ஒருபுள்ளியிலிருந்து 5 கோடுகளும் மற்ற 3 புள்ளிகளில் ஒவ்வொன்றிலிருந்தும் 3 கோடுகளும் செல்கின்றன. இந்த சூழ்நிலைக்கு ஆய்லர் ஒரு கணிதத் தேற்றத்தையே நிறுவினார். அதாவது, எல்லா கோடுகளையும் கடக்கக்கூடிய ஒரு நடை இருக்க வேண்டுமென்றால், ஒன்று, எந்தப் புள்ளியிலிருந்தும் ஒற்றைப்படை எண்ணிக்கையுள்ள் கோடுகள் செல்லக்கூடாது, அல்லது, இரண்டே புள்ளிகளிலிருந்து ஒற்றைப்படை எண்ணிக்கையுள்ள கோடுகள் செல்லவேண்டும்.
இந்த கோனிக்ச்பெர்க் பாலப்பிரச்சினையில், 4 புள்ளிகளிலிருந்தும் ஒற்றைப்படை எண்ணிக்கையுள்ள கோடுகள் செல்வதால், நடை சாத்தியமில்லை. இதற்கும் இடவியலுக்கும் என்ன சம்பந்தமென்றால், இந்தப்பிரச்சினையில் புள்ளிகளிலிருந்து செல்லும் கோடுகள் எத்தனை என்ற ஒரே கேள்விதான் பிரச்சினையின் வேர். இந்த வேர் பிரச்சினையில் வேறு வடிவியல் விவகாரம் இல்லை. புள்ளிகளிலிருந்து எத்தனை கோடுகள் செல்கின்றது என்பது கோலத்தை எவ்வளவு கோணலாக்கினாலும் அதாவது, கோடுகளை நீட்டி, மடக்கி, வளைத்தாலும் மாறாமலிருக்கும் ஒரு எண். இந்த மாதிரி கருத்துகளைத்தான் இயற்கணித இடவியல் ஆய்வு செய்கிறது. கணிதத்தில் மிக அதிகமான படைப்புகளை வழங்கியதோடு மட்டுமல்லாமல் பல அழகு பொருந்திய சூத்திரங்களை ஏற்படுத்தி, கணிதத்துக்குப் பொலிவூட்டியவர் ஆய்லர். மேலும், பல நவீன கணித உட்பிரிவுகளுக்கு இவரது சிந்தனைகளே அடித்தளமாக அமைந்தன. இவரது படைப்புகள் கிட்டத்தட்ட 30 ஆயிரம் பக்கங்களுக்கு மேல் நீள்பவை. இவர் கண்டறிந்த செய்திகளின் பட்டியலை நூற்றாண்டுகளுக்கு மேல் சேகரித்து அப்படைப்புகளின் சிறுகுறிப்புகளை நூறு தொகுதிகளுக்கு மேல் வழங்கியுள்ளனர். இதிலிருந்து இவரது படைப்பாக்கத்தின் பிரம்மாண்டத்தை நாம் உணரலாம்.
முப்பது வயதில் தனது வலது கண்ணை இழந்த ஆய்லர், தனது அறுபதாவது வயதில் மற்றொரு கண்ணையும் இழந்தார். இருப்பினும் அதன் பிறகு அவர் வாழ்ந்த 16 ஆண்டுகளில் வாரத்துக்கு ஓர் கண்டுபிடிப்பை நிகழ்த்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். தினமும் காலை முதல் மாலை வரை தனது கண்டுபிடிப்புகளைக் குறிப்பதற்கென ஓர் நபரை நியமனம் செய்து அவர் மூலம் பதிவு செய்ததாக அறியப்படுகிறது. முதல் அறுபது ஆண்டுகளில் உருவாக்கிய கணிதப் படைப்புகளுக்கு இணையான கணிதப் படைப்புகளை பிற்காலத்திலும் அவர் உருவாக்கினார் என்பது அவரது அற்புத நினைவாற்றல், விடாமுயற்சி, உழைப்பு போன்றவற்றின் வெளிப்பாடே. கணித உலகத்தில் இவையெல்லாம் புது முன்மாதிரிகளாக அமைந்தன.
கணிதம் மட்டுமல்லாது இயற்பியல், வானியல், திரவ இயக்கவியல், ஒளியியல், இசைக் கோட்பாடு போன்ற பல்வேறு துறைகளிலும் கருத்துகளை வழங்கியுள்ளார். இவரது பெருமையை, பிற்காலத்தில் தோன்றிய பிரெஞ்சு கணித அறிஞரான லாப்லாஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ஆய்லரைப் படியுங்கள், ஆய்லரைப் படியுங்கள், அவர்தான் நம் அனைவருக்கும் ஆசான்”. கணிதவியல் மற்றும் அறிவியல் அறிஞர் லியோனார்டு ஆய்லர் செப்டம்பர் 18, 1783ல் தனது 76வது அகவையில் இரஸ்சியா, சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமுமுகவின் வெளிநாட்டு பிரிவான இந்தியர் நலவாழ்வு பேரவை (IWF) க்கு விருது வழங்கிய தாதாபாய் டிராவல்ஸ்…
சவூதி அரபியாவிலிருந்து 200க்கும் மேற்பட்ட சிறப்பு விமானங்களை தமிழகம் உட்பட தாயகத்தின் பல்வேறு பகுதிகளுக்குவெற்றிக்கரமாக இயக்கிய தாதாபாய் டிராவல்ஸ் சார்பாக, கடந்த 09-09-21 அன்று ஜித்தா இண்டர்காண்டிணன்டல் ஆடிட்டோரியத்தில் 200 வது விமான சேவைக்கான சிறப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு தாதாபாய் டிராவல்ஸ் மேலாளரும் சமூக ஆர்வலருமான சகோ. அபூபக்கர் தலைமை தாங்கினார். தாதாபாய் டிரவல்ஸ் சார்பாக வாழ்த்துச் செய்தியில் சவுதியில் இருந்து தாயத்தில் இல்லம் சொல்லும் வரை தமுமுக மற்றும் IWF தன்னார்வலர்கள் பணி எடுத்துக் கூறப்பட்டது. விருதினை வழங்கி சிறப்பு அழைப்பாளர் சவுதி விமான நிறுவத்தின் மேலாளர் தமுமுகவின் மனிதநேயப் பணியை பாராட்டி மற்றும் துஆ செய்தார்
இந்திய மக்கள் மிகவும் இறுக்கமான நேரத்தில் கடுமையான கூட்டணி உழைப்பில் வெற்றிகரமாக அல்லாஹ்வின் உதவியால் 200 விமானச் சேவை செய்த அதனை சிறப்பாக வழிநடத்திய அபுபக்கர் மற்றும் தாதாபாய் குழுவினர்களுக்கு IWF சார்பாக மனமாந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தூதரக அதிகாரிகள், சவுதியா விமான நிறுவன மேலாளர்கள், பல்வேறு டிராவல்ஸ் மேலாளர்கள், ஜித்தா தமிழ் சங்க நிர்வாகிகள் மற்றும் தமுமுகவின் வெளிநாட்டு பிரிவான இந்தியர் நலவாழ்வு பேரவை (IWF) நிர்வாகிகள், ததஜ நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் JTS, IWF, TNTJ நிர்வாகிகளுக்கு தாதாபாய் டிராவல்ஸ் சார்பாக விருதுகள் வழங்கப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இயந்திர ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் செயல்பாட்டில் மின் தூண்டலின் கணித கோட்பாட்டை முதன்முதலாக வரையறுத்த பிரான்சிஸ் எர்ன்ஸ்ட் நியூமன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 11, 1798).
பிரான்சிஸ் எர்ன்ஸ்ட் நியூமன் (Franz Ernst Neumann) செப்டம்பர் 11, 1798ல் ஜெர்மனியின் தலைநகர் பெர்லின் அருகே உள்ள ஜோவகிம்ஸ்தல் நகரில் பிறந்தார். நியூமனின் தந்தை விவசாயியாவார். அவரின் சிறு வயதிலேயே அவரது அம்மா பிரிந்து சென்றுவிட அதன்பிறகு, தாத்தா வீட்டில் வளர்ந்தார். கணிதத்தில் சிறந்து விளங்கிய எர்ன்ஸ்ட் நியூமன், அக்காலத்தில் அடிக்கடி போர் நடந்ததால் கல்வி தடைபட்டது. இந்நிலையில், படிப்பை 16 வயதிலேயே நிறுத்தியவர், அந்நாட்டு இராணுவத்தில் இணைந்தார். 1815 ஆம் ஆண்டில் நெப்போலியனுக்கு எதிராக, நூறு நாட்கள் தன்னார்வமுடன் பணியாற்றிய நியூமன், போரில் காயம் அடைந்ததால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட்டார். இதற்கிடையில், ஒரு தீ விபத்தில் குடும்ப சொத்துகள் நாசமானதால், பண நெருக்கடியும் ஏற்பட்டது. அதை பொருட்படுத்தாத நியூமன் பெர்லின் பல்கலைக்கழகத்தில் மீண்டும் சேர்ந்து, படிப்பைத் தொடர்ந்தார்.
அவரது தந்தையின் விருப்பப்படி இறையியல் படிப்பில் சேர்ந்த நியூமன், கணிதம் மற்றும் அறிவியல் மீதான அதீத ஆர்வம் கொண்டிருந்தார். பின்னர், ஜெனா பல்கலைக்கழகத்தில் கனிமவியல் (Mineralogy) மற்றும் படிகவியல் பயின்றார். மேலும், படிகவியல் குறித்து ஆராய்ந்தவர், 1828 ஆம் ஆண்டு, அசாதாரண சூழலில் கோனிக்ஸ்பெர்க் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பைத் தொடர்ந்தார். தந்தையின் மறைவால் ஓராண்டு காலம் படிப்பு தடைபட்டது. பிறகு, படிகவியலில் ஆய்வுகள் மேற்கொண்டு, கண்டறிந்த விடயங்களை கட்டுரையாக எழுதி வெளியிட்ட எர்ன்ஸ்ட் நியூமன், மீண்டும் பெர்லின் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து முனைவர் பட்டம் பெற்றார். இவரது ஆராய்ச்சிகளும், கட்டுரைகளும் இவருக்கு கோனிக்ஸ்பெர்க் பல்கலைக்கழகத்தில் 1929ல் விரிவுரையாளர் பணியைப் பெற்றுத் தந்து, கனிமவியல், இயற்பியல் துறைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
1834ல், கோனிக்ஸ்பெர்க் பல்கலைக்கழக, மருத்துவ ஆலோசகராக நியமிக்கப்பட்ட நியூமன், அங்கு மாணவர்களுக்கு ஆராய்ச்சி முறைகளை அறிமுகப்படுத்தும் நோக்கில் பிரபல விஞ்ஞானி “கார்ல் கஸ்டாவ் யாக்கோபு ஜக்கோபி” (Carl Gustav Jacob Jacobi) என்பவருடன் இணைந்து கணித – இயற்பியல் பயிலரங்குகள் நடத்தினார். பின்னாளில், அவரது மனைவி வழியில் கிடைத்த சொத்துமூலம், தனது வீட்டின் அருகே இயற்பியல் ஆய்வுக்கூடம் ஒன்றை அமைத்துக்கொண்டார். அவ்வேளையில் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் ஆய்வுக்கூடம் இல்லாததால், இவரது ஆய்வுக்கூடத்தையே மாணவர்களும் பயன்படுத்திக் கொண்டனர். படிகவியல் குறித்த இவரது ஆய்வுகளும், கண்டுபிடிப்புகளும் ‘நியூமேன்ஸ் கோட்பாடு’ (Newman’s Theory) என குறிப்பிடப்படுகிறது. உலோகக் கலவைகளின் வெப்பநிலைகள், ஒளி அலைக் கோட்பாடு, இரட்டை விலகல் விதிகள் மற்றும் ஒளியியல், கணித ஆய்வுகளில் ஈடுபட்ட இவர், மூலக்கூற்றின் வெப்ப விதிகளை உருவாக்கினார்.
இயந்திர ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் செயல்பாட்டில் மின் தூண்டலின் கணித கோட்பாட்டை முதன்முதலாக வரையறுத்த ‘பிரான்சிஸ் எர்ன்ஸ்ட் நியூமன்’ மின்னோட்டத்தின் தூண்டலுக்கான கணித விதிகள், ஒளியியல் பண்புகளைக் கண்டறிந்தார். பல விடயங்கள் குறித்து ஆராய்ந்த எர்ன்ஸ்ட் நியூமன், தனது ஆராய்ச்சிகள் பற்றி பெரும்பாலும் விரிவுரைகளாகவே வழங்கிய அவர் அவற்றை விளக்கி கட்டுரைகளாக எழுதியது வெகு குறைவு. வெப்ப இயந்திர கோட்பாட்டைத் தோற்றுவித்தவர்களில் இவரும் ஒருவர் என இவரது மகனும் விஞ்ஞானியுமான “கார்ல் நியூமன்” குறிப்பிட்டுள்ளார். நியூமன், தொடர்ச்சியாக பேசில் (Basel (1863), டுபிங்கன் (Tübingen (1865) மற்றும் லைப்சிக் (1868) உள்ளிட்ட இடங்களில் பணியாற்றி கணிதம், ஒளியியல், மின்னியல், படிகவியல் உள்ளிட்ட பல்வேறு களங்களில் தடம் பதித்தார். மேலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புக்காக டுபிங்கன், ஜெனிவா பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கின.
1876ல் அவரது பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிரான்சிஸ் எர்ன்ஸ்ட் கிருத்துவ நியூமன், மே 23, 1895ல், தனது 96வது அகவையில் கோனிஸ்பெர்க் என்னும் மாநகரில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். ஜெர்மனியின் பிரபல கணிதவியலாளரும், இயற்பியலாளருமாக அறியப்படுகிறார். இயற்பியல், மற்றும் கணிதத் துறையை தனது மகத்தான ஆய்வுகள் மூலம் வளப்படுத்திய இவர், கணிதம், ஒளியியல், மின்னியல், படிகவியல் உள்ளிட்ட பல்வேறு களங்களில் குறிப்பிடத்தக்க பங்களித்தவர்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டிய, மகாகவி சுப்பிரமணிய பாரதி நினைவு தினம் இன்று (செப்டம்பர் 11,1921).
சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati) டிசம்பர் 11, 1882ல் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார். 1887 ஆம் ஆண்டு இலக்குமி அம்மாள் மறைந்தார். அதனால், பாரதியார் அவரது பாட்டியான பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார். தனது பதினொன்றாம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவி புனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டயபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சில காலத்திலேயே, அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார்.
பின்னர் எட்டயபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றில் பாரதி வாழ்ந்தார். ஏழு ஆண்டுகள் பாட்டெழுதாமல் இருந்த பின்னர், 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் ‘விவேகபானு’ இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு காலகட்டங்களில் இதழாசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றினார். பாரதி தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்தார். தம் தாய்மொழி தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்” எனக் கவிபுனைந்தார்.
பழந்தமிழ்க் காவியங்களின் மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்டவர் என்று அறியப்படுகின்றார். தேசியக் கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவின்றதினாலும், இவர் உலகின் சிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர் என்றும், அண்மைக்காலத் தமிழின் தன்னிகரற்ற கவியேறு என்றும் பலர் கருதுகின்றனர். இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் பாஞ்சாலி சபதம். அழகிய இலக்கிய நயத்தையும் மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாகப் பாரதியின் பாஞ்சாலி சபதம் விளங்குகிறது.
பாஞ்சாலி சபதம் வியாசரின் பாரதத்தை தழுவி எழுதப் பெற்றது. பாஞ்சாலி சபதம் இரு பாகங்கள் உடையது. இது சூழ்ச்சிச்சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச் சருக்கம் என ஐந்து சருக்கங்களையும், 412 பாடல்களையும் கொண்டது. பாரதியார், முதலில் நவம்பர் 1904 முதல் ஆகத்து 1906 வரை சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகத்து 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றி மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (1905 – 1906), இந்தியா என்ற வார இதழில் (1905 -1906) புதுச்சேரி (1908 – 1910), சூரியோதயம்(1910), கர்மயோகி (திசம்பர் 1909–1910), தர்மம் (1910) என்ற இதழ்களிலும் பாலபாரத யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆங்கில அரசால் தடை செய்யப்பட்ட பாரதியின் “இந்தியா” பத்திரிகை புதுவையில் வெளியானது.
சுப்பிரமணிய பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பொருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.
பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் மாணவியான சகோதரி நிவேதிதையை தமது குருவாகக் கருதினார். 1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிகேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றபோது, எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டதால் பலத்த காயமுற்று மிகவும் நோய்வாய்ப்பட்டார். பிறகு, 1921 செப்டம்பர் 11ம் தேதி, தனது 39 ஆவது வயதில் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலைப் பெற்றார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டிய மகாகவி சுப்பிரமணிய பாரதி செப்டம்பர் 11, 1921ல், தனது 39வது அகவையில் சென்னை மாநகரில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
தமிழ்நாடு அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினைவுச் சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம், புதுச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லம் ஆகியவற்றை நினைவு இல்லங்களாகப் போற்றி வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில் மகளிர்க்கான பல்தொழில்நுட்பக் கல்லூரியும், பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மைய மண்டபத்தில் பாரதியின் ஏழு அடி உயரச் சிலை அமைக்கப்பட்டு 13-02-2000 அன்று பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இங்கு பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சூரிய இயற்பியல், காற்றியல், வானியல் ஆகிய அறிவியல் புலங்களில் தொலைவறி ஏவுகலங்களைப் பயன்படுத்திய எர்பெர்ட் ஃபிரீடுமேன் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 09,2000).
எர்பெர்ட் ஃபிரீடுமேன் (Herbert Friedman) ஜூன் 21, 1916ல் நியூயார்க்கில் உள்ள புரூக்ளினில் சாமுவேல் என்பவருக்கும் இரெபாக்கா ஃபிரீட்மேனுக்கும் இரண்டாம் மகனாகப் பிறந்தார். இவரது தந்தையார் மரபுவழி யூதர். இவர் நியூயார்க் நகருக்கு இந்தியானாவில் உள்ள எவான்சுவில்லியில் இருந்து புலம்பெயர்ந்தவர். நியூயார்க்கில் இவர் கலைப்படச் சட்டக்க் கடையை மன்ஃஆட்டனில் நிறுவினார். ஃபிரீடுமேனின் தாயார் கிழக்கு ஐரோப்பாவில் பிறந்தவர். இளமையில் இவர் ஓர் ஏதிலிச் சிறுவனாக ஓவியராகத் தனது படங்களை விற்றே பிழைத்துள்ளார். இவர் 1932ல் புரூக்ளின் கல்லூரியில் கலையியல் முதன்மைப் பாடத்தில் சேர்ந்தார், என்ராலும் அங்கு இயற்பியலில் தேறிப் இலவல் பட்டம் பெற்றுள்ளார். இவர் இயற்பியல் பேராசிரியரான முனைவர் பெர்னார்டு குரெல்மேயரால் பெரிதும் கவரப்பட்டு அவர் பரிந்துரை பேரில் ஜான் ஃஆப்கின்சு பல்கலைக்கழகத்தில் உதவிதொகை பெற்று சேர்ந்துள்ளார். இங்கே இவரது பேராசிரியரின் தந்தையார் செருமானிய மொழித்துறைத் தலைவராக பணிபுரிந்தவர்.எர்பெர்ட் ஃபிரீடுமேன் இலிண்டன் ஜான்சன் குடியரசுத் தலைவராக இருந்தபோது அமெரிக்க அணுவாற்றல் ஆணையத்தின் பொது அறிவுரைக்குழுவிலும் குடியரசுத் தலைவர் நிக்சன் அறிவியல் அறிவுரைக்குழுவிலும் தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் விண்வெளி அறிவியல் ஆளுகை குழுமத்திலும் பணிபுரிந்துள்லார். சூரிய இயற்பியல், காற்றியல், வானியல் ஆகிய அறிவியல் புலங்களில் தொலைவறி ஏவுகலங்களைப் பயன்படுத்திய அமெரிக்க முன்னோடியாவார். இவர் அரசியல் மேதையும் அறிவியலுக்காக வாதிடுபவரும் ஆவார். இவர் தன் வாழ்நாளில் அரசு வானியல் கழகத்தின் எடிங்டன் பதக்கம்(1964), அமெரிக்க வானியல் கழகத்தின் ஃஎன்றி-நோரிசு விரிவுரைத் தகைமை, தேசிய அறிவியல் விருது(1968), அமெரிக்கப் புவிபுறவியல் ஒன்றியத்தின் வில்லியம் பவுலே பதக்கம்(1981), இயற்பியலுக்கான வுல்ஃப் அறக்கட்டளைப் பரிசு, பிராங்க்ளின் நிறுவனத்தின் ஆல்பர்ட் ஏ.மைக்கல்சன் பதக்கம்(1972) எனப் பல பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.எர்பெர்ட் ஃபிரீடுமேன் 1960ல் அமெரிக்கத் தேசியாறிவியல் கல்விக்கழகத்தின் உறுப்பினர் ஆனார். இவர் அமெரிக்க மெய்யியல் கழகத்தின் உறுப்பினராக 1964ல் தேர்வு செய்யப்பட்டார். அறிவியல் புலங்களில் தொலைவறி ஏவுகலங்களைப் பயன்படுத்திய எர்பெர்ட் ஃபிரீடுமேன் செப்டம்பர் 9, 2000ல் தனது 84வது அகவையில் புற்றுநோயால் வ்ர்ஜீனியாவில் உள்ள ஆர்லிங்டன் வீட்டில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வலிமை மிக்க அணுக்கரு விசையை உருவாக்கும் மெசான் (pi meson) என்ற துகளைக் கண்டு பிடித்தத, நோபல் பரிசு பெற்ற ஹிடேகி யுகாவா நினைவு தினம் இன்று (செப்டம்பர் 08,1981).
ஹிடேகி யுகாவா (Hideki Yukawa) ஜனவரி 23, 1907ல் ஜப்பானில் டோக்கியோ பெருநகரில் பிறந்தார். இவருடைய தந்தை ‘டகுஜி ஒகாவா’ என்பவராவார். தான் பிறந்த ஊரிலேயே இளமைக் கல்வியைப் பெற்ற இவர், கியோடோ என்ற இடத்தில் அமைந்திருந்த கியோட்டோ இம்பீரியல் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்துப் பட்டம் பெற்றார். 1929-லிருந்து நான்கு ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். பட்டதாரியான இவர் கோட்பாட்டு இயற்பியலில் ஆர்வம் செலுத்தினார். குறிப்பாக ஆதாரத் துகளைக் (Elementary particles) கண்டறிவதில் அதிக ஆர்வம் செலுத்தினார். 1932ல் ‘சுமிகோ’ என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர். 1932-39 க்கு இடைப்பட்ட கலத்தில் விரிவுரையாளராகவும், பிறகு ஒசாக்கா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகவும் பணியாற்றினார். அங்கு ஆய்வுகளில் ஈடுபட்ட ஹிடேகி 1935ல் ஆதாரத் துகள்களுக்கிடையே ஏற்படும் உள்வினைகள் என்பது பற்றி இவருடைய ஆய்வறிக்கையை வெளியிட்டார்.அறிக்கையில் அணுக்கரு விசைக்கான புதிய புலக் கொள்கையை உருவாக்கியிருந்தார். அதில் மெசான் என்ற பொருளின் வெளிப்பாட்டைக் குறிப்பிட்டார். 1937ல் அமெரிக்க இயற்பியலாளர்கள் காஸ்மிக் கதிர்களில் இருந்து வெளிப்படும் ஒரு வகை மெசான் என்ற துகளைக் கண்டு பிடித்தது இவருடைய ஆய்வுக்கு ஊக்கமூட்டுவதாக இருந்தது. எனவே, மெசான் கொள்கையை விரிவாக்குவதில் இவருடைய சொந்தக் கருத்துகளின் அடிப்படையில் தீவிரமாக ஈடுபட்டார். 1938ல் இவருக்கு முனைவர் பட்டம் கிடைத்தது. 1947லிருந்து ஆதாரத் துகள்களின் பொதுக் கொள்கை அடிப்படையில் தீவிரமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். 1948ல் அமெரிக்காவிலும் 1949 முதல் அமெரிக்காவிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் வருகை தரும் பேராசிரியராக செயல்பட்டார்.யுகாவா வலுவான அணுசக்தியின் வரம்பிலிருந்து (அணுக்கருவின் ஆரத்திலிருந்து), சுமார் 100 MeV / c2 நிறை கொண்ட ஒரு துகள் இருப்பதைக் கணித்தார். ஆரம்பத்தில் 1936 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், மியூயான் (ஆரம்பத்தில் “மு மீசன்” என்று அழைக்கப்பட்டது) இந்த துகள் என்று கருதப்பட்டது. ஏனெனில் இது 106 MeV / c2 நிறை கொண்டது. இருப்பினும், பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள், மியூயான் வலுவான அணுசக்தி தொடர்புகளில் பங்கேற்கவில்லை என்பதைக் காட்டியது. நவீன சொற்களில், இது மியூனை ஒரு லெப்டனாக ஆக்குகிறது. ஆனால் ஒரு மீசன் அல்ல. இருப்பினும், வானியற்பியலாளர்களின் சில சமூகங்கள் தொடர்ந்து மியூனை “மு-மேசன்” என்று அழைக்கின்றன.1947 ஆம் ஆண்டில், இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் சிசில் பவல், சீசர் லேட்ஸ், கியூசெப் ஒச்சியாலினி மற்றும் பலர் இணைந்து முதல் உண்மையான மீசன்கள், சார்ஜ் செய்யப்பட்ட பியோன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. துகள் முடுக்கிகளின் வருகை இன்னும் வரவில்லை என்பதால், உயர் ஆற்றல் கொண்ட துணைத் துகள்கள் வளிமண்டல அண்ட கதிர்களிலிருந்து மட்டுமே பெறப்படுகின்றன. புகைப்படத் தகடுகளின் வளர்ச்சியின் பின்னர், குழம்புகளின் நுண்ணிய பரிசோதனையானது சார்ஜ் செய்யப்பட்ட துணைஅணு துகள்களின் தடங்களை வெளிப்படுத்தியது. பியோன்கள் முதலில் அவற்றின் அசாதாரணமான “இரட்டை மீசன்” தடங்களால் அடையாளம் காணப்பட்டன. அவை அவற்றின் சிதைவால் ஒரு புட்டேடிவ் மீசனாக விடப்பட்டன. துகள் ஒரு மியூயானாக அடையாளம் காணப்பட்டது. இது பொதுவாக நவீன துகள் இயற்பியலில் மீசன் என வகைப்படுத்தப்படவில்லை.ஜப்பானில் இருந்த அறிவார்ந்த கழகங்கள் இவருடைய திறமையை உணர்ந்தன. குறிப்பாக ஜப்பான் பல்கலைக் கழகம், இயற்பியல் கழகம், ஜப்பான் அறிவியல் குழு ஆகியவை இவரைத் தங்கள் உறுப்பினராக ஏற்றுக் கொண்டன. ஒசாக்கா பல்கலைக்கழகம் இவரை வருகை தந்து பாடம் பயிற்றுவிக்கும் பேராசிரியராக அமர்த்திக்கொண்டது. கியோட்டோ பல்கலைக்கழகம் அடிப்படை அறிவியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராக, இவருடைய பெயரிடப்பட்ட யுகாவா கூடத்தில் அமைந்துள்ள அதற்கான அலுவலகத்தில் இருந்து செயல்பட்டார். அமெரிக்க இயற்பியல் கழகம், அமெரிக்க தேசிய அறிவியல் கழகம் ஆகியவை இவரை தங்கள் கழகத்தின் அயல்நாட்டு உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தன. 1940ல் ஜப்பான் கழகத்தின் இம்பீரியல் பரிசு 1943-ல் பண்பட்டை அலங்கரிக்கும் தகுதிப் பரிசு (Decoration of culturalment) ஆகியவை இவருக்கு வழங்கப்பட்டன.யுகாவா பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டதோடு சில நூல்களையும் எழுதியுள்ளார். அவற்றுள் ‘துகள்கற்றை எந்திரவியலுக்கான முன்னுரை’ (Introduction to Quantum Mechanics) 1946, ‘ஆதாரத் துகள் கோட்பாட்டுக்கான முன்னுரை’ (Introductioan to the Theory of Elementary Particles-1948) ஆகிய இரண்டு நூல்களை ஜப்பானிய மொழியில் எழுதி வெளியிட்டார். ‘கோட்பாட்டு இயற்பியல் முன்னேற்றங்கள்’ என்ற தலைப்பில் வெளிவந்த ஆங்கிலப் பருவ இதழின் ஆசிரியராக இருந்தும் செயல்பட்டார். பாரிஸ் பல்கலைக் கழகம், எடின்பர்க் ராயல் கழகம், இந்திய அறிவியல் கழகம், அனைத்துலக தத்துவ மற்றும் அறிவியல் கழகம், பான்டிபிசியா அறிவியல் கழகம் ஆகியவை இவரை தங்களது அயல் நாட்டு உறுப்பினராக தேர்ந்தெடுத்துக் கொண்டன.எல்லாவற்றுக்கும் மேலாக ‘கியோட்டோ நகர் மதிப்பியல் குடிமகன்’ (Honarary citizen of the city of Kyoto, Japan) என்ற சிறப்பு இவருக்கு வழங்கப்பட்டது. இவரைச் சிறப்பிக்கும் வகையில் இவருடைய உருவம் பொறித்த அஞ்சல் வில்லைகள் வெளியிடப்பட்டன. யுகாவா அணுக்கருவினுள் ஏற்படும் வலிமை மிக்க அணுக்கரு விசையை உருவாக்கும், எலக்ட்ரானை விட பல மடங்கு கனமான ஆதாரத் துகளைக் கண்டறிந்தவர். 1949ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற கோட்பாட்டு இயற்பியலாளர். முதன் முதலில் ஜப்பானுக்கு நோபல் பரிசைப் பெற்றுத்தந்த ஹிடேகி யுகாவா செப்டம்பர் 8,1981ல் தனது 74வது அகவையில் ஜப்பான், கியோட்டோ என்ற ஊரில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
எழுத்தறிவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் அனைத்துலக எழுத்தறிவு தினம் இன்று (செப்டம்பர் 8)
அனைத்துலக எழுத்தறிவு நாள் உலகெங்கும் செப்டம்பர் 8ம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை யுனெஸ்கோ நிறுவனம் நவம்பர் 17, 1965ல் உலக எழுத்தறிவு நாளாகப் பிரகடனம் செய்தது. இது 1966ம் ஆண்டு தொடக்கம் கொண்டாடப்படுக்கிறது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும், அமைப்புக்களுக்கும் அறியவைப்பது இதன் முக்கிய நோக்கம் ஆகும். உலகில் சுமார் 781 மில்லியன் வயது வந்தோர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள் ஆவர். அத்துடன், சுமார் 103 மில்லியன் சிறார்கள் பாடசாலை வசதிகள் அற்ற நிலையில் உள்ளார்கள். இதனால் இவர்கள் அடிப்படைக் கல்வியான எழுத, வாசிக்க, எண்ணத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.
யுனெஸ்கோவின் “அனைவருக்கும் கல்வி பற்றிய உலக அறிக்கை (2006)” அறிக்கையின்படி, தெற்கு மற்றும் மேற்கு ஆசியாப் பகுதிகளிலேயே மிகக் குறைந்த வீதமானோர் (வயது வந்தோரில்) (58.6%) படிப்பறிவில்லாமல் உள்ளனர். அதற்கு அடுத்த படியாக உள்ள பகுதிகள் ஆப்பிரிக்கா (59.7%), அரபு நாடுகள் (62.7%). தனிப்பட்ட நாடுகளை எடுத்துக் கொண்டால் மிகக் குறைந்த எழுத்தறிவில்லாதோர் புர்கினா பாசோ (12.8%), நைஜர் (14.4%), மாலி (19%). அறிக்கையின் படி எழுத்தறிவின்மைக்கும் நாடுகளின் வறுமைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. எந்த மொழியிலும் இலகுவான வசனங்களை எழுதவும் படிக்கவும் தெரியாமையே எழுத்தறிவின்மையாகும் என ஐநாவின் சாசனம் எழுத்தறிவின்மையை வரையறுக்கிறது.
கல்விக்கு அடிப்படையாக விளங்குவது எழுத்தறிவு. இது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை. எழுத்தறிவு பெற்றால்தான், ஜனநாயகத்தில் உரிமைகளை நிலை நாட்ட முடியும். சமூக மற்றும் மனித முன்னேற்றத்துக்கு இது அவசியம். எனவே எழுத்தறிவு பெறுவது ஒருவரின் கடமை, அவசியம், கட்டாயம். ஏதாவது ஒரு மொழியில், புரிதலுடன் சரியாக பேசவும், எழுதவும் தெரிந்தவரே எழுத்தறிவு பெற்றவர். மற்றபடி, எழுத்தறிவு பெற்றவராக கருத, குறிப்பிட்ட வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என எந்த அளவும் தீர்மானிக்கப்படவில்லை. எழுத்தறிவு மூலம், அமைதி மற்றும் ஜனநாயகத்தை நிலை நிறுத்த முடியும். இது இன, மொழி, வயது, சமூக பாகுபாடின்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.
2011 சென்சஸ் கணக்கின் படி, இந்தியாவின் எழுத்தறிவு, 74 சதவீதமாக உள்ளது. இதில் ஆண்கள் 82.14 சதவீதம், பெண்கள் 65.46 சதவீதம். இது 2001ம் ஆண்டு கணக்கெடுப்பை விட 9.2 சதவீதம் அதிகம். தமிழக எழுத்தறிவு சதவீதம், 80.4 சதவீதமாக உள்ளது. இது 2001ம் ஆண்டு கணக்கெடுப்பை விட 6.9 சதவீதம் அதிகம். எழுத்தறிவில் கேரளா முதலிடத்திலும், பீகார் கடைசி இடத்திலும் உள்ளது. நாட்டில் எழுத்தறிவு சதவீதம் ஓரளவுக்கு அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அணுவியல், இயந்திரவியல் மற்றும் வெப்ப இயக்கவியல் துறைகளில் முக்கிய பங்களிப்புகளைச் செய்த லுட்விக் எட்வர்ட் போல்ட்சுமான் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 05,1906).
லுட்விக் எட்வர்ட் போல்ட்சுமான் (Ludwig Eduard Boltzmann) பிப்ரவரி 20, 1844ல் ஆஸ்திரியா நாட்டில் உள்ள வியென்னாவில் பிறந்தார். இவரின் தந்தை ஒரு வருமான வரி அதிகாரி. தாயும் பாட்டியும் கடிகாரம் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்கள். வசதி நிறைந்த போல்ட்சுமானுக்கு ஆசிரியர்கள் வீட்டுக்கே வந்து பாடம் நடத்தினார்கள். இவரது 14 வது வயதில் இவரின் தந்தை காலமாகிவிட்டார். படிப்பு பாதியில் நின்று போனது. இருந்தாலும் தனது 19 வது வயதில் வியன்னா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பிரிவில் விடுபட்ட கல்லூரி படிப்பைத் தொடர்ந்தார். அன்றைக்கு பிரபலமாக இருந்த இயற்பியல் பேராசிரியர்கள் இவருக்குப் பாடம் எடுத்தார்கள். 1866ல் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் கணித இயற்பியலில் ஆழ்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு சாதித்தார் போல்ட்ஸ்மேன்.அணு மற்றும் அணுத்துகள்கள் மீது தான் போல்ட்சுமேனின் முழு கவனமும் இருந்தது. ‘மேக்சுவெல் போல்ட்சுமேன் பகிர்வு’, ‘மேக்சுவெல் போல்ட்சுமேன் புள்ளிவிவரம்’ ஆகியவை தான் இயந்திரவியலில் அடிப்படைக் கற்களாகத் திகழ்ந்து கொண்டிருகின்றன. போல்ட்ஸ்மேன் கண்டறிந்து அறிவித்த இத்ததகைய விதிகள், குவாண்டம் கோட்பாட்டின் துணையின்றி தன்னிச்சையாகவும் சுலபமாகவும் புள்ளி விவர அடிப்படையிலான இயந்திரவியலை புரிந்து கொள்ள மிகச்சிறந்த சாதனமாக அமைந்தன. வெப்பம் என்றால் என்ன? தட்பவெப்பம் எவ்வாறெல்லாம் ஓரிடத்தில் மாறுபடுகின்றது என்றெல்லாம் வெப்பம் என்பதன் முழு அர்த்தத்தையும் புரிந்து கொள்ள போல்ட்ஸ்மேன் கோட்பாடுகள் அமைந்தன. ‘தெர்மோ டைனமிக்ஸ்’ என்பது இயற்பியலின் ஒரு முக்கிய கூறு. வெப்பம் மற்றும் வெப்பம் கொண்டு செல்வது என்பது பற்றிய படிப்பு.பெட்ரொலை எரிப்பதன் மூலம் ஏற்படும் வெப்பாதால் மோட்டார் வாகனங்கலை இயக்குவது இந்தக் கோட்பாட்டின் அடிப்படை தான். இந்த இயக்கத்தில் ஈடுபடும் வாயுக்களுக்கு ஓடும் அணுக்களைக் கொண்டும் சமன்பாடுகளை நிறுவி வடிவமைத்து விளக்கினார், போல்ட்ஸ்மேன். கணிதத்தின் புள்ளியியல் துணை கொண்டு இயற்பியலின் அணு ஓட்டத்தை அணுகி விளக்கிய முதல் அறிவியலாளர் இவரே. புள்ளியியல் இயந்திரவியல் மற்றும் புள்ளியியல் வெப்ப இயக்கவியல் துறைகளில் பங்களிப்புகளுக்காக அறியப்படுகிறார். நகர்ந்து கொண்டிருக்கும் வளிமங்கள்மீது சீரான ஆய்வுகள் மேற்கொண்டு இந்த இயக்கத்துகான சமன்பாட்டினை வரையறுத்துத் தந்தார். அணுவியல் கோட்பாடு முழுதும் அறியப்படாத கால கட்டத்திலேயே அத்துறைக்கு பல முக்கிய பங்களிப்புகளைச் செய்தார்.1885 ஆம் ஆண்டில் அவர் இம்பீரியல் ஆஸ்திரிய அகாடமி ஆஃப் சயின்ஸில் உறுப்பினரானார். 1887ல் கிராஸ் பல்கலைக்கழகத்தின் தலைவரானார். அவர் 1888 இல் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸின் உறுப்பினராகவும், 1899ல் ராயல் சொசைட்டியின் (ஃபோர்மெம்ஆர்எஸ்) வெளிநாட்டு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். லுட்விக் எட்வர்ட் போல்ட்ஸ்மான் செப்டம்பர் 05,1906ல் தனது 62வது அகவையில் இத்தாலியில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். போல்ட்ஸ்மேனின் கோட்பாடுகளுக்கு அவர் உயிருடன் இருக்கும் வரை ஒரு பக்கம் எதிர்ப்பும் இருந்து வந்தது. இதனால் அவர் மோசமான மனபாதிப்புக்குள்ளானார். எரிச்சல் மற்றும் விரக்தியின் உச்சிக்கே சென்று பலமுறை தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். வாழும் வரை இவரின் அருமையை புரிந்து கொள்ளாதவர்கள் இவரின் மறைவுக்குப் பின் தான் அதனைப் புரிந்து கொண்டார்கள்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மைக்ரோவேவ் இன்ஜினியரிங் துறையில் ஆராய்ச்சி செய்த, இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர், ராஜேஸ்வரி சாட்டர்ஜி நினைவு தினம் இன்று (செப்டம்பர் 03,2010).
ராஜேஸ்வரி சாட்டர்ஜி ஜனவரி 24, 1922ல் கர்நாடகாவில் பிறந்தார். மைசூரிலிருந்து வந்த முதல் பெண் பட்டதாரிகளில் ஒருவரான அவரது பாட்டி கமலாம தசப்பாவால் நிறுவப்பட்ட ஒரு “சிறப்பு ஆங்கிலப் பள்ளியில்” தனது முதன்மை கல்வியைப் பெற்றார். கல்வித் துறையில் (குறிப்பாக விதவைகள்) மிகவும் தீவிரமாக செயல்பட்டவர். பள்ளி இறுதிப் போட்டிகளுக்குப் பிறகு, வரலாற்றை எடுக்க ஆசைப்பட்டார். ஆனால் இறுதியில் இயற்பியல் மற்றும் கணிதத்தைத் தேர்ந்தெடுத்தார். அவர் பெங்களூரு மத்திய கல்லூரியில் பயின்றார். கணிதத்தில் பி.எஸ்சி (ஹான்ஸ்) மற்றும் எம்.எஸ்சி பட்டங்களைப் பெற்றார். இந்த இரண்டு தேர்வுகளிலும் மைசூர் பல்கலைக்கழகத்தில் முதல் இடத்தைப் பிடித்தார். அவர் மம்மாடி கிருஷ்ணராஜா வோடியார் விருதையும், எம்.டி. பி.எஸ்.சி மற்றும் எம்.எஸ்சி தேர்வுகளில் சிறப்பாக செயல்பாடுகளுக்கு முறையே நாராயண ஐயங்கார் பரிசு மற்றும் வால்டர்ஸ் நினைவு பரிசு பெற்றார்.
1943 ஆம் ஆண்டில், தனது எம்.எஸ்சிக்குப் பிறகு, மின் தொழில்நுட்பத் துறையில் தகவல் தொடர்புத் துறையில் ஆராய்ச்சி மாணவராக, பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (ஐ.ஐ.எஸ்.சி) சேர்ந்தார். ராஜேஸ்வரி சாட்டர்ஜி சி.வி.ராமன் அவருக்கு கீழ் வேலை செய்ய விரும்பினார். ராஜேஸ்வரி இயற்பியலில் பட்டம் இல்லை என்று கூறி ராமன் மறுத்துவிட்டதாக சில வட்டாரங்கள் கூறுகின்றன. மற்றவர்கள் அவர் பெண் மாணவர்களைப் பெறுவதற்கான யோசனையை விரும்பவில்லை என்று கூறுகிறார்கள். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியர்களுக்கு அதிகாரத்தை மாற்ற இந்தியாவில் ஒரு இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது. இது பிரகாசமான இளம் விஞ்ஞானிகளுக்கு வெளிநாடுகளில் கல்வி கற்க உதவித்தொகை வழங்கியது. எலக்ட்ரானிக்ஸ் துறையிலும் அதன் பயன்பாடுகளிலும் அத்தகைய ஒரு உதவித்தொகைக்கு அவர் விண்ணப்பித்தார். மேலும் 1946 ஆம் ஆண்டில், டெல்லி அரசாங்கத்தால் அவர் “பிரகாசமான மாணவராக” தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் உயர் படிப்பைத் தொடர வெளிநாடு செல்ல உதவித்தொகை வழங்கப்பட்டது.
ராஜேஸ்வரி சாட்டர்ஜி அமெரிக்காவில் ஆன் ஆர்பர், மிச்சிகன் பல்கலைக்கழகத்தில், மேலும் படிக்கத் தேர்வு செய்தார். 1950 களில் இந்தியப் பெண்கள் உயர் கல்வியைத் தொடர வெளிநாடு செல்வது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் சாட்டர்ஜி அவ்வாறு செய்ய உறுதியாக இருந்தார். ஜூலை 1947ல், இந்தியாவின் சுதந்திரத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்னர், எஸ்.எஸ். மரைன் ஆடெர் என்ற மாற்றப்பட்ட துருப்பு கப்பலில் அமெரிக்காவிற்கு தனது பயணத்தைத் தொடங்கினார். 30 நாட்களுக்குப் பிறகு அங்கு சென்றார். அமெரிக்காவில், அவர் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டு, மின் பொறியியல் துறையிலிருந்து முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் அவர் இந்திய அரசாங்கத்துடன் வைத்திருந்த ஒப்பந்தத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, வாஷிங்டன் டி.சி.யில் உள்ள தேசிய பணியகங்களில் ரேடியோ அதிர்வெண் அளவீடுகள் பிரிவில் எட்டு மாத நடைமுறை பயிற்சி பெற்றார். பயிற்சி முடிந்ததும் அவர் மீண்டும் மிச்சிகன் பல்கலைக்கழகம் சென்றார். 1949ல் பார்பர் உதவித்தொகையைப் பெற்று தனது படிப்பை மீண்டும் தொடங்கினார். 1953ன் ஆரம்பத்தில் பேராசிரியர் வில்லியம் கோல்ட் டோவின் வழிகாட்டுதலின் கீழ் தனது ஆய்வுக் கட்டுரையை வெற்றிகரமாக முடித்து பி.எச்.டி பட்டத்தைப் பெற்றார்.
1953 ஆம் ஆண்டில், தனது பிஎச்டி பட்டம் பெற்ற பிறகு, அவர் இந்தியாவுக்குத் திரும்பி, ஐ.ஐ.எஸ்.சி மின் தொடர்பு பொறியியல் துறையில் ஆசிரிய உறுப்பினரானார். பின்னர் அவர் “மின்காந்தக் கோட்பாடு, எலக்ட்ரான் குழாய் சுற்றுகள், நுண்ணலை தொழில்நுட்பம் மற்றும் வானொலி பொறியியல்” ஆகியவற்றைக் கற்பித்ததார். அதே ஆண்டில், அதே கல்லூரியின் ஆசிரிய உறுப்பினராக இருந்த சிசிர் குமார் சாட்டர்ஜியை மணந்தார். திருமணத்திற்குப் பிறகு, ராஜேஸ்வரி சாட்டர்ஜியும் அவரது கணவரும் ஒரு மைக்ரோவேவ் ஆராய்ச்சி ஆய்வகத்தை உருவாக்கி, மைக்ரோவேவ் இன்ஜினியரிங் துறையில் ஆராய்ச்சியைத் தொடங்கினர். இது இந்தியாவில் முதல் ஆராய்ச்சி ஆய்வகம். அதே காலகட்டத்தில், மின் தொடர்பு பொறியியல் துறையின் தலைவர் பதவிக்கு சாட்டர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது வாழ்நாளில், அவர் 20 பிஎச்டி மாணவர்களுக்கு வழிகாட்டினார். 100 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார், மேலும் ஏழு புத்தகங்களை எழுதினார்.
1982 ஆம் ஆண்டில் ஐ.ஐ.எஸ்.சி.யில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, இந்திய மகளிர் ஆய்வுகளுக்கான சங்கம் உள்ளிட்ட சமூக திட்டங்களில் பணியாற்றினார். இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர். இவர் நுண்ணலை மற்றும் உணர் பொறியியல் முன்னோடியாக திகழ்ந்தவர். இந்திய அறிவியல் கழகத்தின் முதல் பெண் பேராசிரியரான இவர், அக்கழகத்தின் மின் தொடர்பு பொறியியல் துறையின் தலைவராக ஓய்வு பெற்றார். மைக்ரோவேவ் இன்ஜினியரிங் துறையில் ஆராய்ச்சி செய்த ராஜேஸ்வரி சாட்டர்ஜி, செப்டம்பர் 03,2010ல் தனது 88வது அகவையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மனிதருக்கு உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் தென்னை – உலகத் தேங்காய் நாள் (world coconut day) (செப்டம்பர் 2)
உலகத் தேங்காய் நாள் ( world coconut day ) செப்டம்பர் 2 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது. 1998ஆம் ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற இந்தோனேசியாவின் ஜகார்த்தாவைத் தலைமையகமாகக் கொண்ட ஆசிய பசிபிக் தெங்கு குழும மாநாட்டில் செப்டம்பர் 2 ஆம் தேதி உலக தேங்காய் நாளாக அறிவிக்கப்பட்டது. வறுமைக் குறைப்பில் உயிர்நாடியாக விளங்குகின்ற தெங்குப் பயிரின் முக்கியத்துவம் தொடர்பாக மக்களிடையே அதிக விழிப்புணர்வினை ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு இந்நாள் அறிவிக்கப்பட்டது. தென்னையை ‘பூலோகக் கற்பகவிருட்சம்’ என்பார்கள். தருவதில் தாயைப் போன்ற தயாள குணம்கொண்டது தென்னை. தென்னம் பாளை, குருத்து, இளநீர், தேங்காய், தேங்காய் எண்ணெய் என ஒவ்வொரு நிலையிலும் மனிதருக்கு உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது.
தென்னை ஓலைகளில் பட்டு வரும் குளிர்ச்சியான காற்று, நம் உடலில் உள்ள சுரப்பிகளைத் தூண்டி நலம் சேர்க்கும். தென்னை ஓலையில் கூரை வேய்வது இதனால்தான். தேங்காய், இனிப்புச் சுவை உடையது. பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளுக்கு இணையான ஊட்டச்சத்து நிறைந்தது. தேங்காய் ஓட்டுக்கும் பருப்புக்கும் இடையே உள்ள தோல் போன்ற பகுதி, கொழுப்பைக் கரைக்கும் தன்மை உடையது. குடலில் உள்ள புழுக்களை நீக்கவும் மலச்சிக்கலைப் போக்கவும் பயன்படும். அல்சைமர் எனும் ஞாபக மறதி நோயைப்போக்கும். தேள், நட்டுவாக்கலி கொட்டினால் அதன் விஷம், கடுப்பு நீங்கவும் தேங்காய் பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் `சைந்தவலாவனம்’ என்ற மருந்து செய்வதற்கு தேங்காய் முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்து வயிறு உப்புசம், வயிற்றுப்புண், வயிற்றுவலியைக் குணப்படுத்தும்.
இளநீர் குளிர்ச்சியைத் தரவல்லது. தாகத்தைத் தணித்து செரிமானத்தைச் சீராக்கும். சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகப் பாதையைச் சுத்தப்படுத்தும். சிறுநீரகக்கல் பிரச்னை, சின்னம்மை, பெரியம்மை நோய்கள் வராமல் தடுக்கும். கர்ப்பக் காலத்தில் ஏற்படும் அம்னியோட்டிக் திரவ (Amniotic fluid) குறைபாட்டை, தொடர்ந்து இளநீர் அருந்துவதன் மூலம் சரிசெய்யலாம். ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா குறைபாட்டைச் சரிசெய்ய இளநீர் உதவுகிறது. தென்னையில் இருந்து வரும் பூவைப் பயன்படுத்தி கஷாயம் செய்து அருந்தினால், அதீத ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் குணமடையும். ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியம் செய்யப் பயன்படுகிறது.
தேங்காய்ப்பால், பசும்பாலுக்கு நிகரான குணம் உடையது. ஆண்மையைப் பெருக்க வல்லது. வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைக் குணப்படுத்தும். செரிமானத்தைத் தூண்டும். தாய்ப்பால் சுரப்புக்கு உதவும். வாதத்தைத் குறைத்து, கபத்தைக் கூட்டும். உடலுக்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும். சருமத்தின் அழகைக் கூட்டும். தேங்காய்ப்பாலைக் காய்ச்சி வடித்து எடுப்பது ‘உருக்கு தேங்காய் எண்ணெய்’ ஆகும். இதைப் பயன்படுத்தி, ஆயுர்வேத மருத்துவத்தில் ‘நீலிபிருங்காதி கேர தைலம்’ தயாரிக்கப்படுகிறது. இது, முடி கருமையாகவும் அடர்த்தியாகவும் வளர உதவும். தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெயில் அதிக அளவில் சேச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. இதனால், மிகவும் ஆபத்தானது என்று ஒதுக்கப்பட்டது. தேங்காய் எண்ணெய், இதய ரத்தக்குழாயில் அடைப்பை ஏற்படுத்துகிறது என்பது இதுவரை நிரூபிக்கப்பட்டுள்ளது. தேங்காய் எண்ணெய் ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அளவைக் குறைத்து, நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்கிறது. தற்போது வெளியாகும் ஆராய்ச்சிகளில், தேங்காய் எண்ணெய் நல்ல சமையல் எண்ணெய் எனக் கண்டறிந்துள்ளனர்.
‘இந்தியாவில் இதயநோய் குறைவாக உள்ள மாநிலம் கேரளா’ என்று மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. இதற்குக் காரணம், அங்கு சமையலில் பிரதானமாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுவதுதான். தலைமுடி வளர்ச்சிக்கும், ஆரோக்கியம், உறுதியை மேம்படுத்தவும் உதவுகிறது. தலைமுடியில் பாக்டீரியா கிருமி வளர்ச்சியைத் தடுக்கிறது. தேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, அதை 7 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், நம் உடலில் பல ஆரோக்கியமான மாற்றங்களைக் காணலாம். நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாவதுடன், சிறுநீர் பாதை தொற்றுகள், ஈறு நோய்கள் குணமாகும். காய்ச்சல், சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ்களை அழிக்கும். உடலின் ஆற்றல் மற்றும் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிப்பதோடு, தைராய்டு சுரப்பியை சீராக செயல்படுத்த உதவுகிறது.
உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு, சிறுநீரக கற்கள் போன்ற சிறுநீரக நோய்களை குணமாக்குகிறது. தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அது செரிமானம் மற்றும் வாய்வு தொல்லை போன்ற பிரச்சனைகளை தடுக்கலாம். தேங்காய் தண்ணீரை எவ்வளவு குடித்தாலும், அது உடலில் கொழுப்புக்கள் சேர்வதை குறைத்து, பசியை கட்டுப்படுத்தி, உடல் எடை அதிகரிப்பதை தடுக்க உதவுகிறது. காலையில் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்தால், அது உடலின் எலெக்ரோலைட்டுக்களை சீராக்கி, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. கடுமையான தலைவலி மற்றும் ஆல்கஹால் குடிப்பதன் மூலம் ஏற்படும் உடல் வறட்சி பிரச்சனை தடுக்கப்படுவதுடன், உடலின் நீர்ச்சத்து அதிகமாகும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபட தேங்காய் தண்ணீர் உதவுகிறது.
Source By: Jayasrimahi
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சீரொளி இடுக்கிகள் (optical tweezers) என்னும் மிக நுட்பமான கருவியைக் கண்டுபிடித்த, சீரொளி இடுக்கியின் தந்தை ஆர்தர் ஆசுக்கின் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 2, 1922).
ஆர்தர் ஆசுக்கின் (Arthur Ashkin) செப்டம்பர் 2, 1922ல் நியூயார்க்கின் புரூக்கிலின் பகுதியில் பிறந்து அங்கேயே வளர்ந்தார். இவருடைய பெற்றோர்கள் இசடோர் ஆசுக்கின், அன்னா ஆசுக்கின் ஆவர். தந்தை இசடோர் ஒடெசாவில் (உக்ரைனில்) இருந்து, தனது 18-வது அகவையில் அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தார். தாயார் அன்னா உக்ரைனில் இருந்து குடிபெயர்ந்தவர் ஆவார். ஆர்தர் ஆசுக்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்தார். அதே நேரத்தில் பல்கலைக்கழகத்தின் கதிர்வீச்சு ஆய்வுக்கூடத்தில் தொழினுட்ப உதவியாளராகவும் இருந்தார். இப்பொறுப்பில் இருந்தபொழுது அமெரிக்கப் படைத்துறைக்கான இரேடார் என்னும் தொலைபொருளுணர்விக் கருவிக்கான நுண்ணலை தோற்றிவிக்கும் காந்தக் கருவியைச் செய்யப் பணித்தார்கள். இவர் பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்காக இருந்தாலும், இப்பொறுப்பு இவருக்கு வழங்கப்பெற்றது. இவ்வாய்ப்பின் பயனாக மூன்று நோபல் பரிசாளர்களை அவர் சந்திக்க நேர்ந்தது.
ஆர்தர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் படிப்பு முடிந்த பிறகு, கார்ணெல் பல்கலைக்கழகத்தில் மேற்பட்டப் படிப்பு படிக்கச் சென்றார். அங்கே அணுக்கருவியியல் துறையில் படித்தார். அக்காலத்தில் மான்ஃகாட்டன் திட்டம் என்னும் அணு ஆயுதத் திட்டத்திற்கான பணிகள் நடந்து வந்தன. அதில் இவருடைய உடன்பிறந்தார் சூலியசு ஆழ்சுகின் பங்களிப்பவராக இருந்தார். இத்தொடர்பால் ஆர்தர் ஆழ்சுகினுக்கு நோபல் பரிசாளர் ஃகன்சு பெத்து (Hans Bethe) அவர்களுடனும் ரிச்சர்டு ஃபெயின்மன் (Richard Feynman) அவர்களுடனும் இன்னும் கார்ணெல் பல்கலைக்கழகத்துக்கு வருவோரிடமும் தொடர்பு ஏற்பட்டது. ஆர்தர் கார்ணெல் பல்கலைக்கழகத்தில் முனைவர்ப் பட்டம் பெற்ற பின்னர் பெல் ஆய்வுக்கூடத்தில் இவருடைய நெறியாளராக இருந்த சிட்னி மில்மன் அவர்களின் பரிந்துரையின் பேரில் பணிக்குச் சென்றார்.
பெல் ஆய்வுக்கூடத்தில் 1960 முதல் 1961 வரை நுண்ணலைத் துறையில் பணி புரிந்தார். பின் சீரொளித் திறையில் ஆய்வை மேற்கொண்டார். இவர் ஒளிநார், நேர்சார்பிலா ஒளியியல், பராமெற்றிக்கு அலைவி, பராமெற்றிக்கு மிகைப்பி ஆகிய துறைகளில் ஆய்வுக்கட்டுரைகள் எழுதினார். பெல் ஆய்வுக்கூடத்தில் இருந்தபொழுது தகைவுமின்விளைவுப் படிகம் (piezoelectric crystal), ஒளிமுறிவு விளைவு ஆகிய துறைகளிலும் புது கண்டுபிடிப்புகள் செய்தார். ஆர்தர் பணியானது 1997 ஆம் ஆண்டு இயற்பியல் நோபல் பரிசு பெற்ற இசுட்டீவன் சூ அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கும் அடிப்படையாக அமைந்தது. சூவின் ஆய்வில் சீரொளியால் அணுக்களைக் குளிர்விப்பதும் சிக்கவைப்பதும் முக்கிய பங்கு வகித்தன. ஆசுக்கின் 1960-களின் கடைசியில் சீரொளியைக் கொண்டு சிறு துகள்களைப் பிடித்துக் கட்டுப்படுத்துவதைச் செய்தார். இதன் விளைவாக 1986 இல் சீரொளி இடுக்கிகள் அல்லது ஒளியிடுக்கிகள் (optical tweezers) என்னும் மிக நுட்பமான கருவியைக் கண்டுபிடித்தார். இதன் பயனாய் தனி அணுக்களையும், சிறு மூலக்கூறுகளையும் உயிரணு முதலான உயிரியப் பொருட்களையும் சீரொளி இடுக்கியில் சிக்க வைத்து அலச முடிகின்றது. இதற்கு அடிப்படையாக இருக்கும் இயற்பியல் விளைவு ஒளியின் அடர்த்தி வேறுபாட்டால் எழும் மிக நுட்பமான கதிராற்றல் அழுத்தவேறுபாடு ஆகும்.
ஆசுக்கின் இந்த உயர்நுட்ப சீரொளி இடுக்கியின் தந்தை எனக் கருதுகின்றார்கள். இக்கண்டுபிடிப்புக்காகத்தான் 2018 ஆம் ஆண்டின் இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பெற்றது. நோபல் பரிசு பெற்றவர்களிலேயே இவர்தான் அகவை (96 வயதில்) கூடியவர் ஆவார். ஆர்தர் ஒளியியல் குமுகத்தின் சிறப்பாளராகவும், அமெரிக்க இயற்பியல் குமுகத்தின் சிறப்பாளராகவும் , ஐ.இ.இ.இ நிறுவனத்தின் சிறப்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 47 புதுக்கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமம் பெற்றுள்ளார். 2003 ஆம் ஆண்டு யோசப்பு கீத்திலி விருதும், 2004 இல் ஆர்வி பரிசும் பெற்றார். 1984 இல் அமெரிக்க தேசியப் பொறியியல் அகாதெமியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய அறிவியல் அகாதெமியின் உறுப்பினராகவும் 1996 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஹைட்ரஜன் குமிழி அறை (Hydrogen Bubble chamber) கண்டறிந்த நோபல் பரிசு பெற்ற, அமெரிக்க சோதனை இயற்பியலாளர் லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 01,1988).
லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் (Luis Walter Alvarez) ஜூன் 13, 1911ல் சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார். இவரது தந்தை வால்டர் சி. அல்வாரெஸ், ஒரு மருத்துவர் ஆவார். இவரது தாய் ஹாரியட் நீ ஸ்மித் ஆவார். இவரது ஸ்பானிஷ் மருத்துவரான லூயிஸ் எஃப் என்பவரின் பேரன் ஆவார். இவர் கியூபாவில் சிறிது காலம் வாழ்ந்தார். பின்னர் இறுதியாக அமெரிக்காவில் குடியேறினார். ஸ்பெயினின் அஸ்டூரியாஸில், தொழுநோயைக் கண்டறிவதற்கான சிறந்த முறையைக் கண்டுபிடித்தார். லூயிசுக்கு கிளாடிஸ் எனும் ஒரு மூத்த சகோதரி மற்றும் பாப் எனும் இளைய சகோதரனும் பெர்னிஸ் எனும் இளைய சகோடதரியும் இருந்தனர். இவரது அத்தை, மாபெல் அல்வாரெஸ், கலிபோர்னியா கலைஞராக இருந்தார். அவர் நெய்யோவியத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.
லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் 1918 முதல் 1924 வரை சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மேடிசன் பள்ளியிலும், பின்னர் சான் பிரான்சிஸ்கோ பாலிடெக்னிக் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். 1926 ஆம் ஆண்டில், இவரது தந்தை மாயோ மருத்துவச் சிற்றில் ஒரு ஆராய்ச்சியாளரானார். பின்னர் இவரது குடும்பம் மினசோட்டாவின் ரோசெஸ்டருக்கு குடிபெயர்ந்தது. அங்கு அல்வாரெஸ், ரோசெஸ்டர் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். இவர் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பயில வேண்டும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால், ரோசெஸ்டரில் உள்ள தனது ஆசிரியர்களின் வற்புறுத்தலின் பேரில், இவர் அதற்கு பதிலாக சிகாகோ பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். அங்கு இவர் 1932ல் இளங்கலைப் பட்டமும், 1934ல் முதுகலைப் பட்டமும் பெற்றார். 1936ல் இவரது முனைவர் பட்டம் பெற்றார்.
1936ல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற பிறகு, அல்வாரெஸ் பெர்க்லியின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள ஏர்னஸ்ட் லாரன்சின் கதிர்வீச்சு ஆய்வகத்தில் வேலைக்குச் சென்றார். கதிரியக்கக் கருக்களில் கே-எலக்ட்ரான் பிடிப்பைக் கண்காணிக்க அல்வாரெஸ் பல சோதனைகளை மேற்கொண்டார். இது பீட்டா சிதைவு கோட்பாட்டின் மூலம் கணிக்கப்பட்டது. 1940ம் ஆண்டில் அல்வாரெஸ் எம்ஐடி கதிர்வீச்சு ஆய்வகத்தில் சேர்ந்தார். அங்கு இவர் இரண்டாம் உலகப் போரின் கதிரலைக் கும்பா திட்டங்களில் பங்களித்தார். மன்காட்டன் திட்டத்தில் ராபர்ட் ஓப்பன்ஹீமர்மருக்காக பணிபுரிய லாஸ் அலமோஸுக்கு வருவதற்கு முன்பு அல்வாரெஸ் சிகாகோ பல்கலைக்கழகத்தில் என்ரிகோ பெர்மிக்கான அணு உலைகளில் பணிபுரிந்தார். அல்வாரெஸ் வெடிக்கும் வில்லைகள் வடிவமைத்தல் மற்றும் வெடிக்கும் பலச் சுற்று வெடிபொருள் தயாரிப்பு ஆகியவற்றில் பணியாற்றினார்.
அல்வாரெஸ் ஜேசன் பாதுகாப்பு ஆலோசனைக் குழு, போஹேமியன் சங்கம் மற்றும் குடியரசுக் கட்சியின் உறுப்பினராக இருந்தார் . அல்வாரெஸ் வானியற்பியல் விஞ்ஞானி ரிச்சர்ட் முல்லரின் ஆலோசகராக இருந்தார். லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் 1968 ஆம் ஆண்டில் ஹைட்ரஜன் குமிழி அறையின் வளர்ச்சிக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார். இது துகள் இயற்பியலில் அதிர்வு நிலைகளைக் கண்டறிய உதவுகிறது. குமிழ் அறை (bubble chamber) என்பது அயனியாக்கும் தன்மை கொண்ட துகள்களின் இயக்கத்தை, அவைகளின் பாதையை அறிய கூடிய அதிவெப்பமூட்டப்பட்ட ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட நீர்மம் (பொதுவாக நீர்ம ஐதரசன்) கொண்ட ஒரு கலன் ஆகும். முகிலறைகள் குமிழறைகளின் தத்துவத்திலேயே வேலை செய்கின்றன. ஆனால், முகிலறைகளில் அதிக வெப்பமாக்கிய நீர்மத்திற்குப் பதிலாக அதிகம் நிரம்பிய ஆவி பயன்படுத்தப்படுகிறது.
அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் பிசிக்ஸ் இவரைப் பற்றி கருத்து தெரிவிக்கையில், “லூயிஸ் அல்வாரெஸ் இருபதாம் நூற்றாண்டின் மிக அற்புதமான மற்றும் உற்பத்தி சோதனை இயற்பியலாளர்களில் ஒருவர்.”எனக் கூறியது. நோபல் பரிசு பெற்ற, அமெரிக்க சோதனை இயற்பியலாளர் லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் செப்டம்பர் 1, 1988ல் தனது 77வது அகவையில் பெர்க்லி, கலிபோர்னியாவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். அவரது ஆவணங்கள் பெர்க்லியின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள பான்கிராப்ட் நூலகத்தில் உள்ளன.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் தலைவர், இயல்பியலாளர், பத்ம விபூசண் விருது பெற்ற எம். ஜி. கே. மேனன், பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 28, 1928).
எம். ஜி. கே. மேனன் (Mambillikalathil Govind Kumar Menon) ஆகஸ்ட் 28, 1928ல் கர்நாடக மாநிலம் மங்களூரில் பிறந்தார். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். மாம்பிள்ளிகளத்தில் கோவிந்தகுமார் மேனன் என்பது முழுப்பெயர். தந்தை, மாவட்ட நீதிபதி. இதனால், பல ஊர்களுக்கும் மாறிக்கொண்டே இருந்தது குடும்பம். கர்னூல், கடலூரில் ஆரம்பக்கல்வி பயின்றார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தொடர்ந்து பயின்றார். 1942ல் மெட்ரிக் தேர்ச்சிபெற்றார். இளம் வயதில் தந்தையுடன் சென்று சர். சி.வி.ராமனைச் சந்தித்த பிறகு, அவரை ஆதர்ஷ நாயகனாகக் கொண்டார். ஆக்ரா பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டம் பெற்றார். மும்பை ராயல் சயின்ஸ் இன்ஸ்டிடியூட்டில் முதுநிலை பட்டம் பெற்றார். நிறமாலையியலில் ஆராய்ச்சி மேற்கொண்டார். கொல்கத்தாவில் உள்ள இந்தியப் புள்ளியியல் நிறுவனத் தலைவராகப் பணியாற்றினார்.
டாடா ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட்டபோது ஹோமிபாபாவின் அழைப்பை ஏற்று, அதில் இணைந்தார். விண்வெளிக்கு கருவிகளைக் கொண்டுசேர்க்கும் பிளாஸ்டிக் பலூன்களைத் தயாரிக்கும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். இதுவே விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னோடி ஆய்வுத் திட்டம். 1953ல் நோபல் பரிசு பெற்ற சிசில் எஃப். பவலின் வழிகாட்டுதலின் கீழ், காஸ்மிக் கதிர்கள் பற்றி ஆய்வு செய்து, இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார். காஸ்மிக் கதிர்கள், துகள் இயற்பியல் துறையில் இவரது ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. பூமிக்கு அடியில் மிக ஆழமான பகுதியில் காஸ்மிக் கதிர்கள் எவ்வாறு இயங்குகின்றன என்ற ஆய்வில் ஈடுபட்டார். கோலார் தங்கச் சுரங்கத்தில் ஆழமான பகுதியில் அக்கதிர்களைச் செலுத்தி, அதன்மூலம் வெளியான நியூட்ரினோக்களை ஆராய்ந்தார்.
ஆராய்ச்சி அறிவுடன், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் குணம், சிறந்த தலைமைப் பண்பும் கொண்டிருந்ததால், மிக குறுகிய காலத்தில் டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் டீன் பொறுப்பிலும், துணை இயக்குநர் பொறுப்பிலும் நியமிக்கப்பட்டார். டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தை ஹோமி பாபாவுக்குப் பிறகு வளர்த்தெடுத்தார். இவரது அயராத முயற்சியால் உயிரி அறிவியல், வானொலி விண்ணியல், திடநிலை மின்னணுவியல், புவி இயற்பியல் ஆகிய துறைகளில் டாடா நிறுவனம் அபார வளர்ச்சி பெற்றது. மனித உழைப்பு என்கின்ற விசாலமான ஸ்பெக்ட்ரத்தை, விஞ்ஞான ரீதியாகப் பயன் படுத்தினால் எவ்வளவு அழகாக எதையும் படைக்க முடியும் என்பதை பௌலினிடம் கற்றார். அதுபோல் சரியான திட்டமிடல், ஒரே கருத்துடையவர்களின் ஒத்துழைப்பு, குறிப்பிட்ட பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் சரியான இடம் போன்றவற்றின் உதவியால் வெற்றிகரமான ஆராய்ச்சியை இந்தியாவில் சாத்தியமாக்கலாம் என்பதை ஹோமி பாபாவிடம் இருந்து கற்றுக்கொண்டார்.
நியூட்ரினோ தொடர்பான ஆராய்ச்சியில் பல முக்கிய முடிவுகளை இவரது குழு கண்டறிந்தது. அண்டக்கதிர்கள் மோதும்போது, உருவாகும் ‘மியான்’ என்ற புதிய நுண்துகள் கண்டறியப்பட்டது. இதுதொடர்பான தகவல்கள் சர்வதேச அண்டக்கதிர் ஆராய்ச்சி மாநாட்டில் ஆய்வறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, உலக அளவில் நியூட்ரினோ ஆராய்ச்சிகள் தீவிரமடைந்தன. 1966ல் ஹோமிபாபா இறந்த பிறகு, அவர் வகித்த பொறுப்பில் இவர் நியமிக்கப்பட்டார். ஹோமிபாபா, ஜாம்ஷெட்ஜி டாடாவின் தொலைநோக்குத் திட்டங்களை நிறைவேற்றினார். 1972ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவரானார். அங்கு 9 மாதங்களே பணியாற்றினாலும் ஆழமான முத்திரையைப் பதித்தார். மத்திய திட்டக்குழுவில் பிரதமரின் அறிவியல் ஆலோகராகவும் செயல்பட்டார். நான்கு தசாப்தங்களாக இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் அவருக்கு முக்கிய பங்கு இருந்தது.
பத்மஸ்ரீ (1961), பத்மபூஷண் (1968), பத்மவிபூஷன் (1985), சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது, பிரிட்டனின் எஃப்ஆர்எஸ் விருது என பல விருதுகளைப் பெற்றார். 2008ல் செலுத்தப்பட்ட செயற்கைக்கோளுக்கு ‘7564 கோகுமேனன்’ எனப் பெயர் சூட்டப்பட்டது. சக விஞ்ஞானிகளால் ‘கோகு’ என நேசத்தோடு அழைக்கப்பட்டார். 1989-90ல் அறிவியல் தொழில்நுட்ப மற்றும் கல்வித் துறையின் மத்திய இணை அமைச்சராகவும் இருந்தார். 1990-96ல் தில்லி மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார். இந்தியாவின் நவீன அறிவியல் வளர்ச்சிக்கு வித்திட்ட எம்.ஜி.கே. மேனன் நவம்பர் 22, 2016ல் தனது 88வது அகவையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். 2008ம் ஆண்டில் எம்.ஜி.கே.மேனனை கௌரவிக்கும் வகையில் நூண்கோள் ஒன்றுக்கு 7564கோகுமேனன் எனப் பெயர் சூட்டப்பட்டது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அன்புக்கும் கருணைக்கும் புகழ் பெற்ற, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 26, 1910).
அன்னை தெரேசா (Mother Teresa) ஆகஸ்ட் 26, 1910ல் மெஸிடோனியாவில் பிறந்தார். அல்பேனிய இனத்தவரான இவரது இயற்பெயர் அக்னஸ் கொன்ஸா பொஜாக்கியூ (Agnes Gonxha Bojaxhiu) என்பதாகும். அல்பேனிய மொழியில் Gonxha என்பதன் பொருள் ரோசா மொட்டு அல்லது சின்னஞ்சிறு மலர் என்பதாகும். சிறுவயது முதல் ஆழ்ந்த இறைப்பக்தியும் பொதுத் தொண்டில் மிகுந்த ஆர்வமும் கொண்ட இவர், தனது 18 ஆவது வயதில் ஐரிஷ் கன்னிகாஸ்திரிகளைக் கொண்ட லொரேட்டா கத்தோலிக்க கன்னிகா மடத்தின் உறுப்பினரானார். கல்கத்தாவில் இந்திய மிஷனரிகள் செய்துவந்த சமூகத் தொண்டுகளின் பால் அவர் பெரிதும் ஈர்க்கப்பட்டார். எனவே, டுப்ளினில் சில மாதங்கள் பயிற்சி பெற்றபின் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். அதன்பின் ஆன்மீகக் கற்கையைத் தொடருமுகமாக அயர்லாந்து சென்றார். 1931 ஆம் ஆண்டு ஞானஸ்நானம் பெற்று அன்னை தெரசாவானார்.அன்னை தெரசா 1931-1948 ஆண்டுவரை கல்கத்தா புனித மேரி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியப் பணியைத் தொடங்கினார். 1948 ஆம் ஆண்டு பாட்னாவில் மருத்துவத் தாதிப் பயிற்சியைப் பெற்றார். 1949 இல் மோதிஜில் என்ற சேரிப்பகுதியை அடைந்து, “உங்களுக்குத் தொண்டு செய்யவே நான் இங்கு வந்துள்ளேன். உதவி செய்ய என்னை அழைப்பீர்களா?” என்று கேட்டவாறு சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்யத் தொடங்குகின்றார். 1950 அக்டோபர் 7ல் அன்னை தெரசாவின் தலைமையில், மிஷனரிஸ் ஒஃப் சாரிட்டி இல்லம் (Missionaries of Charity) தொடங்கப்பட்டது. 1965ல் இந்த அமைப்பு சர்வதேச அளவில் வியாபகம் பெற்றது. முதலில் இந்தியா முழுவதும் பின்னர் வெளிநாடுகளுக்கும் பிறர் அன்பின் பணியாளர் சபையினை நிறுவினார்.சேரிவாழ் ஏழை மக்களுக்கும் அநாதைகளுக்கும் தொழு நோயாளர்களுக்கும் அவர் செய்துவந்த தொண்டுகள் அளப்பரியன. “ஏழை நோயாளர்களுக்கு வெறுமனே உபதேசம் செய்பவராக மட்டும் அன்னை தெரசா இருக்கவில்லை. மாறாக, அவர்களுடன் இணைந்து தமது வாழ்நாட்களை எல்லாம் அவர்களுக்காகவே செலவிட்டவர். தமக்கென்று எதையும் சேர்த்து வைக்காமல், எளிய வாழ்க்கை நடத்தியவர்.1962 ஆம் ஆண்டு பொதுச் சேவைக்கான இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது அன்னை தெரசாவுக்கு வழங்கப்பட்டது. 1979ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவரின் இடையுறாத சமூகத்தொண்டை கௌரவிக்குமுகமாக 1980ல் இந்தியாவின் அதிஉயர் விருதான பாரத ரத்னா விருதும், 1983 இல் பிரிட்டிஷ் மகாராணி 2ஆம் எலிசபெத் மகாராணியின் கௌரவ விருதும் அன்னை தெரசாவைத் தேடி வந்தன. 1997 ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் அமெரிக்காவின் கௌரவ பிரஜை உரிமை அந்தஸ்தை வழங்கி அன்னை தெரசாவைக் கௌரவித்தார். சுமார் 45 வருடகாலம் சமூகப் பணிகளில் மிகுந்த அர்ப்பணிப்போடு ஈடுபட்டுவந்த அன்னை தெரசா 1983 ஆம் ஆண்டு இதய நோயால் பாதிக்கப்பட்டார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா செப்டம்பர் 05, 1997ல் தனது 87வது அகவையில் கொல்கத்தாவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.அன்னை தெரேசாவின் பிறர் அன்பின் பணியாளர் சபை அவரது இறப்பின் போது 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக்கொண்டிருந்தது. இதில் எய்ட்ஸ், தொழு நோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவை அடங்கும். இவரின் இறப்புக்குப் பின் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் முக்திபேறு அடைந்தவராக அறிவிக்கப்பட்டு கொல்கத்தாவின் அருளாளர் தெரேசா என்று பட்டம் சூட்டப்பட்டார். அன்னை தெரெசாவுக்கு பல விதங்களில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அவருக்கு அருங்காட்சியகங்கள் அமைத்ததன் மூலமாகவும், பல்வேறு சபைகளின் பாதுகாவலராக ஏற்கப்பட்டதன் மூலமாகவும், பல கட்டிடங்களுக்கும் சாலைகளுக்கு அவரது பெயரை இட்டதன் மூலமாகவும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாற்று நூலின் ஆசிரியரான நவீன் சாவ்லாவால் எழுதப்பட்ட பல புகழ் மாலைகள் இந்திய நாளேடுகளிலும், இதழ்களிலும் வெளியிடப்பட்டுள்ளன. பொதுத் தொண்டுக்காகவே தம்முடைய வாழ்நாளை அர்ப்பணித்த பெண்மணியான அன்னை தெரசா உலகின் சாதனைப் பெண்களில் ஒருவர் என்பதை நாம் மறுக்க முடியாது.இந்த நாளில், அன்னை தெரசாவின் அமுத மொழிகளை ஏற்று நடப்போம்.* பிரார்த்தனை செய்யுங்கள். கடவுளுக்கு அருகே நீங்கள் செல்வீர்கள். அதேசமயம், மக்களுக்குச் சேவை செய்து பாருங்கள். கடவுளே உங்களுக்கு அருகிலேயே வருவார்.* மனிதர்களை நீங்கள் மதிப்பீடு செய்து கொண்டே இருந்தால், ஒருபோதும் உங்களுக்கு அன்பு செய்ய வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது.* இரு கை கூப்பி கடவுளை வணங்குவதை விட ஒரு கை நீட்டி உதவி செய்யுங்கள்.* இறப்பதற்காகத்தான் பிறந்தோம். அதுவரை இரக்கத்துடன் வாழ்வோம்.* அன்பு என்பது சொற்களைக் கொண்டு வாழ்வதாக நினைக்கிறோம். ஆனால் அன்பை, சொற்களால் விளக்க முடியாது. செயல்களால் உணர்த்துவதே அன்பு.* உங்கள் மீது அன்பு செலுத்துகிறவர்களை நேசியுங்கள். உங்கள் மீது கோபம் கொண்டவர்களை இன்னும் அதிகமாவே நேசியுங்கள்.* மனம் விட்டுப் பேசுங்கள், அன்பு பெருகும்.* கண்ணுக்குத் தெரிந்த மனிதரை மதிக்காவிட்டால், கண்ணுக்குத் தெரியாத கடவுளை மதித்தும் பயனில்லை.* கொடுப்பது சிறியதுதானே என்று தயங்காதீர்கள். ஆனால் பெறுபவருக்கு அது மிகப்பெரியது. அதற்காக எடுப்பது சிறிது என்று திருடாதீர்கள். அது இழந்தவருக்கு மிகப்பெரியது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.* உனக்காக வாழ்கிறேன் என்று சொல்லுவது நமக்கு இன்பம். உன்னால்தான் வாழ்கிறேன் என்று நம்மைப் பார்த்துச் சொல்லவைக்கும்படி வாழ்வது பேரின்பம்.* வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருங்கள்.Source By: Wikipediaதகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
You must be logged in to post a comment.