இராமநாதபுரம் மாவட்டம் ஆற்றாங்கரை வடக்கு கடல் பகுதியில் ராட்சத சுறா இறந்து கரை ஒதுங்கி கிடப்பதாக அப்பகுதி மீனவர்கள் ராமநாதபுரம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதன்படி மாவட்ட வன உயிரின காப்பாளர் மாரிமுத்து, உதவி வன பாதுகாவலர் கணேசலிங்கம், ராமநாதபுரம் வனச்சரக அலுவலர் சதீஷ் உள்ளிட்ட வன பணியாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஆற்றாங்கரை கடற்பகுதிக்கு சென்றனர். இறந்து ஒதுங்கிய ராட்சத சுறாவை கயிறு மூலம் மீட்டனர். வாலாந்தரவை கால்நடை மருத்துவர் நிஜாமுதீன் உடற்கூறு ஆய்வு செய்தார். 6.30 மீட்டர் நீளம், 3.6 மீட்டர் சுற்றளவு உடைய சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சுறா என ஆய்வில் தெரிந்தது. ஒன்றரை டன எடை கொண்ட ராட்சத சுறாவை கடற்கரை ஓர மணலில் ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டி புதைத்தனர். கடல் பகுதியில் வீசும் பலத்த காற்றால் பலவீனமான சுறா பாறைகளில் மோதி இறந்திருக்கக்கூடும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
You must be logged in to post a comment.