தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும் வாக்குச்சாவடி முகவர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபடுவதற்காகவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடிக்கு இன்று காலை விமானம் மூலம் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், நேற்றைய தினம் சென்னையில் பிரதமர் மோடி கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அவர் தமிழகத்தில் வளர்ச்சிக்காக மிகப்பெரிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
அதிமுக பாஜக பாமக கூட்டணி மற்றும் புதிய தமிழகம் அமைந்துள்ள கூட்டணியானது தமிழகத்தின் மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தும். நாற்பதும் நமதே, நாடும் நமதே என பிரதமர் நரேந்திர மோடி கூறியதற்கு ஏற்ப மிக வலிமையாக தமிழகம் முழுவதும் வலிமையாக நாங்கள் பணியாற்றி வருகிறோம். தேமுதிக கூட்டணி உடன்பாட்டை பொறுத்தவரையில் அவர்கள் எங்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகையில் மிக நேர்மையாகவே நடந்து கொண்டனர். அதுமட்டுமில்லாமல் சகோதரர் சுதீஷ் ஆரம்பகாலத்திலிருந்தே பாஜக கூட்டணியில் தான் இடம்பெற போகிறோம் என தெளிவாக சொல்லி இருந்தார். பேச்சுவார்த்தையும் அதை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருந்தது. எனவே கூட்டணியானது இன்னும் இரண்டு, மூன்று நாட்கள் கழித்து உறுதியாகும். ஒரு நேர்மறையான அரசியல் கூட்டணியை அவர்கள் முடிவு செய்வார்கள் என நினைக்கிறேன். தூத்துக்குடி தொகுதியில் நான் வேட்பாளர் என்பது இன்னும் முடிவாகவில்லை. இது எனக்குப் பரிச்சயமான தொகுதி அதனால் இங்கு அடிக்கடி வந்து செல்கிறேன்.
உண்மையில் பனைத்தொழில் என்பதை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பனை தொழிலானது பெருகி இருக்கவேண்டும் ஆனால் அது அருகிக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடியின் முத்ரா வங்கி திட்டம், ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் எல்லாவற்றிலுமே சிறு குறு தொழிலுக்கு முக்கியத்துவம் அளித்து தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழகத்தில் பனைத்தொழில் என்பது ஊக்குவிக்கப்பட வேண்டிய ஒன்று. அது மட்டுமில்லாமல் தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதிகளுக்கும் தனித்தனியாக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. அதில் பனை தொழில் ஊக்குவித்தல் பிரதான இடத்தை பிடித்திருக்கிறது. என்று கூறினார்.
You must be logged in to post a comment.