🔵🟣
15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாஜ கூட்டணியில் இணையும் பிஜு ஜனதா தளம்..
15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாஜ கூட்டணியில் பிஜு ஜனதா தளம் இணைந்து தேர்தல் பணியாற்ற உள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி வருகிறது. அரசியல் கட்சிகள் தீவிர களப்பணிகளை தொடங்கி விட்டன. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி இடையே வெற்றி பெற கடுமையான முனைப்பில் ஈடுபட்டு வருகிறது. ‘இந்நிலையில், பாஜ கூட்டணியில் ஒடிசா ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளம் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் 2009ம் ஆண்டு வரை பாஜ தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணியில் இடம்பெற்றிருந்தது. ஆனால், 2009ம் ஆண்டு தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் பாஜ கூட்டணியில் இருந்து பிஜு ஜனதா தளம் விலகியது.
தற்போது நாடாளுமன்ற தேர்தல், ஒடிசா சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மீண்டும் கூட்டணி அமைப்பது குறித்து பாஜ- பிஜு ஜனதா தளம் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பிஜு ஜனதா தள மூத்த தலைவர்கள் நேற்று நவீன் பட்நாயக்குடன் ஆலோசனை நடத்தினர். அதேபோல், பாஜ மூத்த தலைவர்கள் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுடன் ஆலோசனை நடத்தினர். இதில் பிஜு ஜனதா தளத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
You must be logged in to post a comment.