இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில் சர்வதேச மகளிர் தினம், கொரோனா நோய் தடுப்பு முறை சிறப்பு விழிப்புணர்வு முகாம் , சிறப்பு விழிப்புணர்வு ஊர்வலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தது.
விழிப்புணர்வு ஊர்வலத்தை வட்டார மருத்துவ அலுவர் இரா.வைதேகி துவக்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கல்லூரியை வந்தடைந்தத ஊர்வலத்தில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். பின்னர் நடந்த சிறப்பு விழிப்புணர்வு முகாமிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் அ.மாதவி தலமை வகித்தார்.
கொரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு நடவடிக்கை, ஒரே பாரதம் உன்னத பாரதம் குறித்து கல்லூரி மாணவ, மாணவியரிடம் எடுத்துரைக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நம்மை காத்து கொள்ள மற்றவர்களுக்கு கை கொடுக்கக்கூடாது, தினமும் 15 முறை கைகளை சுத்தமாக கழுவ வேண்டும், இருமல், மற்றும் தும்மலின் போது வாய், மற்றும் மூக்கை கைகுட்டையால் மூடிக்கொள்ள வேண்டும், மற்றவரிடம் பேசும்போது ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று பேச வேண்டும். இதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாது காத்து கொள்ளலாம் என வட்டார மருத்துவ அலுவலர் இரா.வைதேகி பேசினார். மாணவிகள் கண்டிப்பாக காலை உணவை உட்கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் ரத்த சோகையில் இருந்து விடுபடலாம் என குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி பேசினார்.
மத்திய அரசின் மக்கள் திட்ட புகைப்பட கண்காட்சி, விழிப்புணர்வு திரைப்படம் காண்பிக்கப்பட்டது. கட்டுரை, வினாடி வினா போட்டியில் வென்றோருக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்திய அரசின் இசை நாடக பிரிவு சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. கை கழுவும் முறை குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. களவிளம்பர உதவி அலுவலர் மு.ஜெயகணேஷ், குழந்தைகள் திட்ட அலுவலர் கி.விஜயா, கல்லூரி தமிழ்துறை தலைவர் மு.பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.